காதல் காக்க



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

          வழக்கம்போல காற்றுக்குப் புழுக்கம் வர நெருங்கியவர்கள் அன்றைக்கு சற்றுச் சலனப்பட்டார்கள்.

‘‘எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு, ரகு’’ என்றாள் மது. “எங்கப்பா ‘விஷம் கொடுத்துக் கொன்னுடுவேன்’னு பயமுறுத்தினாரு. அம்மா ‘உடனே ஊருக்கு வா’னு அடம் பிடிச்சாங்க. ரெண்டு பேரும் காலைல ஹாஸ்டலுக்கு வந்துட்டாங்க. பக்கத்து ஹோட்டல்ல தங்கியிருக்காங்க...’’

“ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மது... இந்தக் காலத்துப் பெத்தவங்க பசங்க விருப்பத்துக்கு குறுக்கே நிக்கமாட்டாங்க... இதென்ன 1990&ஆ?’’ என்றான் ரகு.

“இல்ல ரகு. நாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கிறது நல்லது.. எங்கப்பா எப்படிப்பட்டவருன்னு சொல்லியிருக்கேன் இல்லே?’’

“நான் உங்கப்பாம்மாகிட்டே பேசவா?’’

“வேண்டாம். ஒண்ணும் நடக்காது’’ என்று தயங்கினாள். “ஏன்னா எங்கப்பா ஒரு மாப்பிள்ளையோட இங்க வந்திருக்காரு. நம்ம காதல் அமர காதல்னு வச்சுக்க வேண்டியதுதான்.’’

அதிர்ந்தான். அவன் அதிர்ச்சியைக் கண்டு சிரித்தாள். “என்ன அம்பிகாபதி, ஏனிந்தக் கலக்கம்? இம்மட்டுத்தானோ தங்களின் லவ்வ்வ்வு?’’ என்று அவனை இடித்தாள். “போவுது விடு, ஒண்ணும் ஆவாது. வந்த விஷயத்தைக் கவனி’’ என்று அவன் கைகளைக் கோர்த்தாள்.

ரகு மதுவின் கண்களைப் பார்த்தபடி, “ஏய், என்னை ஏமாத்த மாட்டியே?’’ என்றான்.

“ம்ஹும்’’ என்றாள்.

“நெஞ்சைத் தொட்டுச் சத்தியமா சொல்லு’’ என்றான்.

“நீ தொடுறியா? நான் சொல்றேன்’’ என்றாள்.

மது கிளம்பி சிறிது நேரமானதும் திடீரென ஏதோ தோன்ற, அவளை செல்போனில் அழைத்தான். “மது, இன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டுக்கு வந்துரு. எங்கம்மாப்பாகிட்டே சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம். நீ ஹாஸ்டலுக்கு போவாதே. திரும்பி வந்துரு. உங்கப்பாவை என்னால் நம்ப முடியாது. ஊர்ல செல்வாக்கு உள்ள ஆளுன்னு வேறே சொல்லியிருக்கே. உன்னைத் தூக்கிட்டு ஓடிறப்போறான்...’’

“அக்கறையப் பாரு! அதெல்லாம் ஒண்ணும் ஆவாது... அப்படி ஏதாவது நடந்தா நானே உங்க வீட்டுக்கு வரேன். சரியா?’’ என்று போனை வைத்து விட்டாள்.

வீட்டில் சாப்பிடும்போது நடந்ததைச் சொன்னான்.

“ஒண்ணும் ஆவாது, அப்படி வந்தா நாங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கறோம்’’ என்றார் அப்பா. அக்கா மட்டும் “எனக்கென்னவோ அவங்கப்பா அவளை இழுத்துக்கிட்டு இன்னேரம் செங்கல்பட்டு போயிருப்பாருனு தோணுது’’ என்றாள். அவ்வளவுதான். சாப்பாட்டை உதறி வெளியே வந்தான்.

11 மணி வரை ஹாஸ்டல் அடைக்க மாட்டார்கள். மதுவைப் பார்க்க வேண்டும்.

“மேகம் மூடிக்கிட்டு இடியும் மின்னலுமா இருக்குடா... எங்கே போறே?’’ என்ற அம்மாவின் குரல் தொடர, வாசலுக்கு வந்தான்.

வண்டியை எடுத்தான். நர்ஸ் குவார்ட்டர்ஸ் அருகே மேம்பாலத்தில் தெருவிளக்கு ஒன்றுகூட எரியவில்லை. ஏறி இறங்கும்பொழுது அவசரத்தில் பள்ளத்தைக் கவனிக்காமல் விழுந்தான். வண்டி சறுக்கி உருண்டு நின்றது. தடுமாறி எழுந்தான். வண்டியை மீட்டு, எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. ‘இன்னும் மூணு கிலோமீட்டர்தான் இருக்கும். ஓடினான். விழுந்த குதிகால் வலித்தது... ‘ஷூவாவது போட்டிருந்திருக்கலாம்...’

சகுனம் சரியில்லை என்று நினைத்தான். கரிநாக்கு அக்காவைத் திட்டினான். தொலைவில் பெண்கள் ஹாஸ்டலில் வெளிச்சச் செங்கல்கள். வேகம் கூட்டினான். மதுவைப் பார்க்கப் போவது முட்டாள்தனமாகத் தோன்றியது. காதல் வேகம் கண்ணை மறைத்தது. ‘இல்லை, இவள் என் மது... ஒருவேளை மதுவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயிருப்பார்களோ?’

நடுங்கினான். ‘கூடாது... கூடாது... கடவுளே...’

ஹாஸ்டல் வாசலுக்குச் சற்று அருகே வந்து நின்றான். இரும்பு கேட்களில் ஒன்றை அடைத்திருந்தார்கள். அல்சேஷன் நாய்களுடன் செக்யூரிட்டி திரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. நாய் என்றாலே அவனுக்கு நடுக்கம். அல்சேஷனைக் கண்டதும் ஆதிசேஷனைக் கண்டது போலானான்.

மது தங்கியிருந்த மாடிப்பக்கம் இருட்டியிருந்தது. ‘அதற்குள் தூங்கியிருக்கமாட்டாளே? எனக்குத் தூக்கம் வராதபோது என் கண்களுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும்? விழித்திருப்பாள். ஒருவேளை...’ வயிற்றில் ஷாட்புட் வீசியது போலானான். மேற்குத்தெரு மதில் சுவரில் டர்ன்ஸ்டைல் கதவு இருப்பது நினைவுக்கு வந்து நடந்தான். ‘அங்கிருந்து மதுவின் கட்டிடத்துக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டியதுதான்’.

டர்ன்ஸ்டைல் கதவைச் சங்கிலி கட்டிப் பூட்டியிருந்தார்கள். ஏறி உள்ளே குதித்தான். வலித்தது. அக்கம்பக்கம் யாருமில்லை. ஆதிசேஷன் மோப்பம் பிடித்து வருமெனப் பயந்தான்.
‘படியேறிப் போவதென்றால் நிச்சயம் பிடிபடுவோம்...’

இன்னும் பயந்தான். கண்ணெதிரே தெரிந்த மழைக்குழாயைப் பிடித்து மெள்ள மெள்ள மெள்ள இன்னும் மெள்ள ஏறி இரண்டாவது மாடியில் இறங்கினான். மாடிச்சுவரோரம் பதுங்கி தவளைமனிதன் போல நகர்ந்தான். மது இருந்த கட்டிடம் ஓரமாக வந்தான். பக்கத்துக் கட்டிடம். மெள்ள தலை நிமிர்ந்து பார்த்தான். ‘இந்த மாடிக்கும் பக்கத்து மாடிக்கும் நாலடி இருக்கும் போலிருக்குதே? எப்படிப் போவது?’

துணிந்து சுவர் மேலேறித் தாவினான். பயத்தில் அதிகமாகத் தாவி, பக்கத்து மாடியில் விழுந்து புரண்டபோது எதிரே இருந்த அறைக்கதவில் மோதி விழுந்தான். ஒலி கேட்டு உள் விளக்கு எரிய, வேகமாக எழுந்து மூலைக்கு ஓடி ஒதுங்கினான். விளக்கு வெளிச்சத்தில் அறை எண்கள் தெரிந்தன. விளக்கு அணைந்ததும் அடி வைத்தான். பதினாறு, பதினேழு... இருபத்தொன்றில் நின்றான். உள்ளே அமைதியாக இருந்தது. ஒருவேளை பெற்றோருடன் ஓட்டலில் தங்கியிருக்கிறாளோ? மது என்று தாழ்வாக அழைத்தான். கதவை மென்மையாகத் தட்டினான்.

மறுமுறை தட்டும்போது கீழே அரவம் கேட்டது. ஆதிசேஷனின் உறுமல். தொடர்ந்து நொடிகளில், “சத்தம் கேட்டுச்சு... லைட்டு போட்டேன்... யாரோ ஓடினாப்புல...’’ என்று குரல் வர, பதறினான்.

“மது, மது!’’ அறைக்கதவை வேகமாகத் தட்டினான். திறந்தது. உள்ளே விழுந்தான்.

செக்யூரிட்டி வந்து போகும் வரை அமைதியாக இருந்த மது, ரகுவைப் பார்வையால் எரித்தாள்.

“மது உனக்கு எதுனா ஆயிடுச்சோனு பயந்து... ஒருவேளை உங்கப்பாவோட... பதறிட்டேன் மது... அதான்’’ என்றான்.

ஏதோ சொல்ல வந்தவள், அவன் காலருகே சிவந்து வீங்கியிருப்பதைப் பார்த்தாள். “என்னடா இது? காலில் என்ன?’ எனப் பதறினாள். விவரமெல்லாம் சொன்னான்.

சீறினாள்... “எனக்கும் அறிவில்லைனு நெனச்சுட்டியா? எங்கப்பா என்னை மூட்டை கட்டிக்கிட்டுப் போனா திரும்பி வரத் தெரியாதா? ஏன் இப்படி லூஸாட்டம் நடந்துக்குறே? வண்டில அடிபட்டு... இருட்டுல ஓடிவந்து... சுவரேறிக் குதிச்சு... திருடனாட்டம்... இதென்ன லூசுத்தனம்? மாட்டிக்கிட்டா ரெண்டு பேருக்கும் தொந்தரவில்லையா? பொறுப்பில்லாம நடக்குறியே? இப்ப உனக்கு எதுனா ஆச்சுனா யார் பொறுப்பு? எப்படி இங்கிருந்து வெளில போவே? காதலிச்சா கண்மூடித்தனத்துக்கு அளவே இல்லியா? இப்ப டாக்டர்கிட்டே எப்படி போறது? உன் வண்டியைப் பாத்துட்டு இந்நேரம் போலீஸ் வேறே தேடிட்டிருக்கும்... கால்ல வேறே அடிபட்டு நிக்கிறே... நான் பொருமிட்டிருக்கேன். என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு?’’

“இல்லே... உனக்குக் கோபம் வந்தா அழுகை வரும்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். கண்ணு ரெண்டும் கலங்கியிருக்கே?’’ என்றான்.

“போடா...’’ என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமிலிருந்து ஒரு ஈரத் துணியை எடுத்து வந்து அவன் கால்களில் இறுகச் சுற்றத் தொடங்கினாள். “லூஸு, செல்போன் இருக்கில்ல? போன் பண்றதுதானே?’’

“சட்னு மறந்துடுச்சு மது... உன்னை நெனைச்சா வேறே எதுக்குமே எடமில்லாம போயிடுது.’’

“காட்டான்... இந்தக் காலத்துல இப்படியொரு காட்டான்...’’ என்று கட்டை இறுக்கினாள். “சும்மா கத்தாதே.. சுளுக்குத்தான், சரியாயிடும். மொதல்ல உங்க வீட்டுக்கு போன் செஞ்சு பத்திரமா இருக்கேன்னு சொல்லு, போலீஸ் தேடி வந்தா அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லு’’ என்று செல்போனை எடுத்துக் கொடுத்தாள்.

“புத்திசாஆஆலிடா நீ... அதான் உன்னை லவ் பண்றேன்’’ என்றபடி வீட்டுக்குச் செய்தி சொன்னான். “தேங்க்ஸ்’’ என்றான் அமைதியாக. “சாரிடா. கோச்சுக்காதே. நான் வேணா இப்படியே நைசா ஓடிடறேன்.’’

“கஷ்டம்! போதும் போதும். பேசாம படு. இரு. விளக்கை அணைச்சுட்டு வரேன். எப்படி வெளியே போறதுன்னு காலைல யோசிப்போம்’’ என்றபடி அவனை உருட்டி ஓரம் தள்ளினாள்.
தலையணையருகே கிடந்த புத்தகத்தை நடுவில் வைத்து, “தொடாம படுக்கணும். நீ அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம். புக்கைத் தாண்டி வரக்கூடாது’’ என்றாள்.

“நூல்வேலியா?’’ என்று சிரித்தான். “ஆமாம். என்ன புக் இது?’’

“எல்லாம்... உன்னை மாதிரி காட்டுவாசிங்க காதலைப் பத்தி... பேசாமப்படு’’ என்றாள்.

அவள் படித்தது...

‘ஐயா, எம் தலைவியின் காதலரே! மேகம் மூடிய வானம் இருளை இன்னும் கூட்டியிருக்கிறது; வெள்ளத்தினால் வழி அறிய முடியாத நிலை! அனைவரும் உறங்கும் இந்த வேளையில் மலை, காடு, வெள்ளம், புலி, அரவம் என்ற கொடிய இன்னல்களையும் இந்த இருளையும் பொருட் படுத்தாது எமது ஊர் எல்லையைக் கடந்து வந்து, வேங்கை மரம் சூழ்ந்த எம் இல்லத்தையும் எப்படியோ கண்டுபிடித்தீரே? காதலியைச் சந்திக்க இத்தனை துன்பம் மேற்கொள்ள நேர்ந்ததே என்று வருந்துகிறேன்’ என்று தோழி தலைவனிடம் சொல்வதாக வரும் கபிலரின் குறுந்தொகைப் பாடல்!    
     
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந்து ஒழுகலின் நிலம்கா ணலையே
எல்லை சேரலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே?
அப்பாதுரை