தாரா, ஷோபனா, பேரரசி...இப்ப கயல்!



‘ஓகே கண்மணி’ தாரா இனிமையான பாதிப்பை எப்படி ஏற்படுத்தினாரோ அதைவிட அதிகமான பாதிப்பை ‘திருச்சிற்றம்பலம்’ ஷோபனா ஏற்படுத்தினார். விளைவு அந்தக் கதாபாத்திரம் தேசிய விருது வரை சென்று சிறந்த நடிகைக்கான விருதுடன் திரும்பியிருக்கிறது. 
தொடர்ந்து ‘தலைவன் தலைவி’யில் அடாவடியாக அன்பைக் காட்டும் ‘பேரரசி’ கதாபாத்திரத்தில் பரோட்டாக்களை சுட்டு அடுக்கினார்.இப்போது கயலாக சுடச்சுட ‘இட்லி கடை’யில் இட்லிகளுடன் காத்திருக்கிறார். வேறு யார்... நித்யா மேனன்தான்.

முதல் தேசிய விருது..?

ரொம்ப சந்தோஷமா இருக்குனு வெறும் வார்த்தைகளால் சொல்லிட்டு நகர முடியாது. அந்த அளவுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்ந்த தருணம் அது. 15 வருடங்களுக்கு மேல சினிமாவில் இருக்கேன். 60 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். எப்பவுமே என் மனசுக்கு ‘இந்தக் கதை சரி’ அப்படின்னு தோணுனா மட்டும்தான் தேர்வு செய்வேன். இதனாலேயே சினிமா உலகில் கூட தனிச்சு இருக்கற மாதிரி ஓர் உணர்வு அடிக்கடி தோணும். சில நேரம் தனியா இருக்கற உணர்வு கூட இருந்திருக்கு. 

ஆனா, இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒரு தேசிய விருது கிடைக்கும் போது இதுவரைக்கும் நாம கடந்து வந்த பாதை சரிதான் என்கிற ஓர் அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருக்கு. 
நான் தனியா இல்லை தனித்துவமா இருந்திருக்கேன் அப்படின்னு இந்தத் தருணம் எனக்குப் புரிய வச்சிருக்கு. 

தேசிய விருதுக்கு பிறகு இனி இப்படியான கதைகள்தான் தேர்வு செய்யணும் என ஏதேனும் தீர்மானம் எடுத்திருக்கீங்களா? 

நிச்சயமா கிடையாது. ஒரு படம், ஒரு கதாபாத்திரம் விருது வாங்கிடுச்சு என்கிறதுக்காக இதற்கு முன்னாடி செய்த அத்தனை படமும் தவறு அப்படின்னு சொல்லிட முடியாது. அப்படி நினைச்சா இங்கே என்னுடைய தேர்வு தப்புன்னு நானே முடிவு செய்திட்ட மாதிரி ஆகிடும். இதற்கு முன்பும் சரி... இனியும் சரி... என் மனசுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் சரி அப்படின்னு தோணுதோ அதை தேர்வு செய்தால்தான் நான் நானா முடிவெடுக்கறதா இருக்கும். 

என்னுடைய பாடி லாங்குவேஜ், எனக்குப் பொருந்துகிற கேரக்டரை பலமுறை யோசித்துதான் இதுவரையிலும் நான் கேரக்டர்களை தேர்வு செய்திருக்கேன். இனியும் அப்படிதான். 
இந்தப் படத்திற்கு விருதுவரை எல்லாம் நான் யோசிக்கலை. ஆனால், இப்படியான எதார்த்த கதைகளுக்கும் கேரக்டர்களுக்கும் விருது கிடைப்பதை நல்ல துவக்கமாக பார்க்கறேன். 

உங்களைப் பொறுத்தவரை நடிப்பு என்பது என்ன? 

என்னுடைய மனதையும், ஆத்மாவையும் வெளிப்படுத்துகிற உணர்வுதான் நடிப்பு. இதுவரையிலும் பணத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் எந்த கேரக்டரையும் தேர்வு செய்ததில்ல. 

அப்படி இருந்திருந்தால் ஒரு பத்து படங்கள்ல நான் காணாமப் போயிருப்பேன். இத்தனை வருடங்கள்... இதோ தேசிய விருது வரை எல்லாம் எனக்கு சினிமா இடம் கொடுத்திருக்காது. என்னைப் பொருத்தவரை என் உணர்வுகள கலையா மாற்றிக் கொடுக்கும் மீடியம்தான் நடிப்பு. 

தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’? 

ஷோபனா மாதிரி ஒரு பொண்ணை இதுவரையிலும் நான் சந்தித்ததே கிடையாது. ரொம்ப வித்தியாசமா, அதிகம் பேசி எதையும் எதார்த்தமா டீல் செய்கிற கேரக்டர் அது. முதலில் நானே அப்படிக் கிடையாது. எனக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டருக்கு என்னை நான் தயார் செய்துதான் அந்த கேரக்டரில் நடிச்சேன். 

அதைக் காட்டிலும் இன்னும் ஓவர் டோஸ் கேரக்டர்தான் ‘இட்லி கடை’ கயல் கதாபாத்திரம். என்னுடைய கேரக்டரும் இதுவரையிலும் நான் செய்த கதாபாத்திரங்களில் இருந்து நிச்சயமா அதீத வித்தியாசத்தில் இருக்கும். படு எமோஷனல் கேரக்டர். உங்களை அழ வைக்கிற அளவுக்கு இருக்கும். அதே சமயம் கொஞ்சம் குறும்புத்தனமான கேரக்டர்தான்.

நடிகர் தனுஷ்... இயக்குநர் தனுஷ்... யார் ரொம்ப சீரியஸ் நபர்? 

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர்... இப்படி எதுவாக இருந்தாலும் முதலில் அவர் தனுஷ். அந்த கேரக்டரில்தான் எப்போதும் நான் பார்த்திருக்கேன். அவர் வேலையிலே சீரியஸ். அதாவது பரபரப்பான டெடிகேஷனை பார்க்கலாம். ஆனால், அவர் சீரியஸாகியோ அல்லது டென்ஷனாகியோ பார்த்ததே கிடையாது. இறுதியா இது டீம் வொர்க் என்கிற தெளிவு அவர்கிட்ட இருக்கும்.

கிளாமர் கதாபாத்திரங்கள் என வரும்போது ஒரு கட்டுப்பாட்டுடன் தேர்வு செய்யறீங்களா அல்லது தானாகவே அதிகம் குடும்பப் பாங்கான கேரக்டர்கள் தேடி வருதா? 

தானாக வருது அப்படின்னு சொல்ல முடியாது. கடைசியில் முடிவு என்னுடையதுதானே! எனக்கு எந்த கேரக்டர் செட் ஆகுமோ அதைத்தான் நான் தேர்வு செய்வேன். 
நிறைய கேரக்டர்கள் வரும். 

எந்த கேரக்டர் செய்தால் என்னவாக அது ஆடியன்ஸ்கிட்ட போய் சேரும்..? இப்படி எல்லாத்தையும் யோசிச்சுதான் ஒரு கேரக்டரை தேர்வு செய்வேன். 
முதலில் நான் எப்படி நடிச்சா ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்கனு பலமுறை யோசித்துதான் கதைகளை செலக்ட் செய்யறேன். 

இதற்குமுன் நீங்க நடிச்ச எந்த கேரக்டருக்கு தேசிய விருது வரும்னு எதிர்பார்த்தீங்க? 

2012ல் கன்னடத்தில் ‘மைனா’ என்கிற படத்தில் நடிச்சிருந்தேன். அதில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நான். நிறைய பேர் அந்தப் படம் வந்தப்ப தேசிய விருதுக்கு அனுப்பி இருக்கலாமேனு சொல்லியிருந்தாங்க. ஏதோ ஒரு காரணத்தால் அப்படத்தை அனுப்பல. அந்த கேரக்டர் தேசிய விருதை தவற விட்டதா இப்போது வரையிலும் நான் மட்டுமில்லாம கன்னட ஆடியன்ஸ் நிறைய பேர் சொல்லிட்டு இருக்கோம். 

உங்க அடுத்தடுத்த படங்கள்? 

தனுஷுடன் ‘இட்லி கடை’ ரிலீஸ் ஆகிடுச்சு. காமினி இயக்கத்தில், ‘டியர் எக்ஸஸ்’, விவேக் ஓபராயுடன் ‘Mr& Mrs கிரே’, மனோஜ் பாஜ்பாயுடன் ‘மசூம்... த நியூ ஜெனரேஷன்’... அப்புறம் சில படங்கள் பேச்சு வார்த்தைல இருக்கு.

சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் பார்வை என்ன? 

இத்தனை வருடங்களும் சினிமாவில் இருந்திருக்கேன். எனக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் சினிமால இருந்ததா, இருப்பதா ஃபீல் செய்தது கிடையாது.எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதற்காக மத்தவங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு சொல்லிட முடியாது. 

எல்லா சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் என்னை ஃப்ரெண்ட்லியா, சக பணியாளராதான் ட்ரீட் செய்யறாங்க. பொதுவா நம்மை யாரா நாம் ப்ரொஜெக்ட் செய்துக்கறோமோ அதை வைச்சுதான் நம்மை மத்தவங்க மதிப்பிடுவாங்க; நம்மிடம் பழகுவாங்க. அதனால் நமக்கு நடக்கும் எந்தவொரு விஷயத்திலும் நம்முடைய பங்கும் இருக்கு என்பது என் நம்பிக்கை.

ஷாலினி நியூட்டன்