இந்தியர்கள் இப்படித்தான் உறங்குகிறார்கள்!



சர்வதேச உறக்க நாள் மார்ச் 14 அன்று நடந்து முடிந்தது. இதை முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ‘இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

நாடு முழுவதும் 348 மாவட்டங்களில் 43,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 
61 சதவிகித ஆண்களிடமும் 39 சதவிகித பெண்களிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் தெரிய வந்த விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

கடந்த 12 மாதங்களில் இரவு நேரங்களில் சராசரியாக எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள், இடையூறு இல்லாமல் எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள் போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.

வயது, இரவு நேர உணவு, தூங்குவதற்கு முன் செல்போன் அல்லது படம் பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தூக்கம் பாதிக்கப்பட காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இதில், 2% பேர் 8 மணிநேரத்துக்கு மேலாகவும், 39% பேர் 6 - 8 மணிநேரமும், 39% பேர் 4 - 6 மணிநேரமும், 20% பேர் 4 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ள 14,952 பேரில் 72 சதவீதம் பேர் கழிப்பறையைப் பயன்படுத்த எழுந்ததே முதன்மைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

25 சதவிகிதம் பேர் பணிச் சூழல் காரணமாகவும், 22 சதவிகிதம் பேர் சப்தங்கள் மற்றும் கொசுக்கடி காரணமாகவும், 9 சதவிகிதம் பேர் தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற மருத்துவக் காரணமாகவும், 9 சதவிகிதம் பேர் நண்பர்கள், குழந்தைகள் காரணமாக ஏற்படும் இடையூறுகளாலும் தூக்கத்தை இழப்பதாக தெரிவித்துள்ளனர்.

சரியான தூக்கம் இல்லாதவர்கள், அதனை ஈடுசெய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரங்களில் தூங்குவதாக 36% பேர் தெரிவித்துள்ளனர்.மேலும், வார இறுதிநாள்களில் காலை நேரங்களில் அதிக நேரம் தூங்குவதாக 23% பேர் தெரிவித்துள்ளனர்.போதிய தூக்கம் இல்லாதது, தூக்கத்தில் அடிக்கடி விழிப்பது போன்றவை இருதய நோய்கள், 2ம் வகை நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான தூக்கத்தை ஊக்குவிக்க, காபி குடிப்பதை குறைப்பது, படுக்கைக்கு முன்பு செல்போன், தொலைக்காட்சிகள் பார்ப்பதை தவிர்ப்பது, வசதியான படுக்கையில் முதலீடு செய்வது போன்றவை ஆய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் கடைப்பிடிப்பது அவரவர் கையில் இருக்கிறது. ஏனெனில் அவரவர் வாழ்க்கை, அவரவர் கரங்களில்தானே!

என்.ஆனந்தி