சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!



நம்புங்கள் நல்லதே நடக்கும் என்பது சஹாரா பாலைவன விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது!ஆம். சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால், அது சஹாரா பாலைவனம்தான். அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதிகளில் சஹாரா பாலைவனம் நீண்டு காணப்படுகிறது.

எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளில் சஹாரா பாலை
வனம் இருக்கிறது.சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்று. கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F (38°C) - 114.8 °F (46 °C) வரை காணப்படும். சஹாராவின் வெப்பநிலை காரணமாக அங்கு ஓர் உயிரினம், வாழ்வது என்பது கடினம்.

பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறைந்து காணப்படும். சில நேரம் உறைபனிக்குக் கீழே காணப்படும். சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் மழை பெய்ய வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.சஹாரா பாலைவனத்தைப் பொறுத்தவரை மொராக்கோ நாடுதான் மிக முக்கியமானது. மொராக்கோ நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனப்பகுதி தான் சுற்றுலாப்பயணிகளுக்குப் பிடித்த இடம்.

இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் திடீர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சஹாரா பாலைவனத்தில் எப்போதுமே வறண்டே காணப்படும் இரிக்கி ஏரி, நீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்தப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொராக்கோவில் உள்ள இந்தப் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஓராண்டில் பெய்யவேண்டிய மழை 2 நாள்களில் பெய்திருக்கிறது. இதுதான் நிலைமைக்கு காரணம் என்று கூறும் வானிலை ஆய்வாளர்கள், காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழை வரும் என்கிறார்கள்.

இப்படி ஒரு மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது என்றும், மொராக்கோவின் தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாகவும், வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

காம்ஸ் பாப்பா