4 வயது மகனைக் கொன்ற AI நிறுவன அதிகாரி!
மெத்தப் படித்த மேதாவிகளுக்கும் அடிப்படை அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். என்ன... இது பதற வைக்கும் நிகழ்வு என்பதுதான் நெஞ்சில் அறையும் சோகம்.ஆம். விவாகரத்தான கணவர், குழந்தையைப் பார்க்க வருவதை தவிர்க்க தன் நான்கு வயது குழந்தையைக் கொடூரமாக தாயே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுசனா சேத்துக்கு வயது 39. பெங்களூருவில் ஒரு ஏஐ நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இந்த ஏஐ நிறுவனம் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசனா சேத் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு முன் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணியாற்றினார் சுசனா. இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா இயற்பியலில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர்.2010ல் சுசனாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் இந்தோனேசியாவில் தற்போது இருக்கிறார். 2019ல் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குடும்பப் பிரச்னை காரணமாக சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்தார். அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
 இதனால், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குழந்தையைப் பார்க்க கணவர் வந்து சென்றுள்ளார். ஆனால், இதை சுசனா விரும்பவில்லை. இதனால், குழந்தையுடன் கோவாவிற்குச் சென்றுள்ளார்.கடந்த 6ம் தேதி தனது நான்கு வயது மகனுடன் கோவாவிற்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சுசனா. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹோட்டல் ஊழியரை அழைத்து, பெங்களூரு செல்ல டாக்சி புக் செய்து தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
சாலை வழியாகச் சென்றால் பெங்களூருவுக்கு 12 மணி நேரம் ஆகும். இதனால், விமானத்தில் செல்லும்படி ஹோட்டல் ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், சுசனா சேத் டாக்சியில்தான் செல்வேன் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் டாக்சி புக் செய்து அனுப்பினர்.ஆனால், அவர் செல்லும்போது அவருடன் மகன் இல்லை. இதை ஹோட்டல் ஊழியர்கள் கவனித்தனர்.
இதனிடையே, சுசனா ஹோட்டலில் இருந்து வெளியேறியதும், அவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய ஹோட்டல் ஊழியர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு படிந்திருந்த ரத்தக்கறையைப் பார்த்து அதிர்ந்தார்கள். உடனே ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து, சுசனா சென்ற கார் ஓட்டுநரின் போன் நம்பரை ஹோட்டல் ஊழியர்களிடம் இருந்து வாங்கிய போலீசார், கார் டிரைவருடன் பேசினர்.
சுசனாவுக்கு தெரியக்கூடாது என்பதற்காக கொங்கனி மொழியில் பேசிய போலீசார், காரில் இருக்கும் பெண்ணிடம் குழந்தை பற்றி கேளுங்கள் என்று கூறினர்.அந்த கார் ஓட்டுநர் கேட்க, உறவினர் வீட்டில் குழந்தை இருப்பதாக சுசனா கூறியிருக்கிறார். மேலும், குழந்தை இருக்கும் முகவரியும் கொடுத்திருக்கிறார்.
அங்கு சென்ற போலீசாருக்கு அந்த முகவரி போலியானது என்று தெரியவந்தது. இதனை அடுத்து, மீண்டும் கார் ஓட்டுநருக்கு போன் செய்த போலீசார், காரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து 200 கிமீ தூரத்தில் உள்ள சித்ரதுர்கா காவல் நிலையத்திற்கு ஓட்டுநர் காரைக் கொண்டு சென்றார். காரில் சுசனா வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுசனாவின் நான்கு வயது மகனின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து, சுசனாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தன் குழந்தையைக் கொன்று பேக்கில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சுசனாவை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த குழந்தை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.‘‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குழந்தையைப் பார்க்க கணவர் வந்து செல்வதை விரும்பாத சுசனா, அதைத் தவிர்க்கவே குழந்தையை கோவாவிற்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், எந்த காரணத்திற்கு கொலை செய்தார் என்ற தகவலை இதுவரை சொல்லவில்லை...” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பொழுது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்.
ஜான்சி
|