OMG... ஐடி ஊழியர்களின் புதிய டைம் பாஸ் இதுதானா?!



ஆமாம் என அடித்துச் சொல்கிறது ஆய்வு ஒன்று.அதென்ன ஐடி ஊழியர்களின் புதிய டைம்பாஸ்..?

ஐடி உலகில் இப்போது வாரத்துக்கு 32 மணி நேரம், 4 நாட்கள்தான் வேலை இல்லையா... இப்படி வேலை நேரம் குறைக்கப்பட்ட பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தை ஐடி ஊழியர்கள் எப்படிச் செலவிடுகிறார்கள் என்று அறிய ரூம் போட்டு யோசித்து எதுவும் பிடிபடாததால் களத்தில் குதித்து ஆய்வு ஒன்றை நேரடியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.

கிடைத்த ரிசல்ட் என்ன தெரியுமா?

பலர் இந்த கூடுதல் நேரத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் அல்லது மற்ற ஏதாவது ஒரு விஷயத்தில் செலவு செய்வார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்..?

அஸ்குபுஸ்கு. கிடைத்த முடிவு ஆச்சர்யத்தில் ஹார்ட் அட்டாக் வரவைக்கும் விதமாக இருக்கிறது! கொரோனாவுக்கு முன்பு வரை ஐடி உலகில் எல்லா நிறுவனங்களிலும் சராசரியாக வாரத்துக்கு 40 மணி நேர வேலை என்பதே வழக்கத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பார்த்ததால் ஊழியர்களின் வேலை நேரம், வாழ்க்கை, உறக்கம், உணவு என அனைத்தும் மாறிப்போனது. இது உற்பத்தியை பாதித்தது. இதனால் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் வார வேலை நேரத்தை 32 மணி நேரமாகக் குறைத்து, ஒரு வாரத்துக்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும் என்று அறிவித்தது.

இந்த வேலை நேரக் குறைப்பு ஊழியர்களின் சிந்தனை, ஆற்றல், வேலைத் திறன் ஆகியவற்றை புத்துணர்வுடன் வைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட முடியும் என்ற கணக்கும் அதனுள் இருந்தது. இந்த உற்சாகத்தில் 5 நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை, ஊழியர்கள் 4 நாட்களுக்குள் செய்து முடிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இப்படி வேலை நேரம் குறைக்கப்பட்ட பிறகு, கிடைத்த ஓய்வு நேரத்தை ஐடி ஊழியர்கள் எப்படிச் செலவிடுகிறார்கள் என முன்னணி ஆராய்ச்சியாளர் ஜூலியட் ஸ்கோர் ஆய்வு மேற்கொண்டார். அதில், வாரம் 32 மணி நேர வேலைக்கு மாறியபின்னர் ஊழியர்கள் ஒரு இரவில் 7.58 மணி நேரம் தூங்குகிறார்கள் எனத் தெரிய வந்தது. வாரம் 40 மணி நேரம் வேலை பார்த்தபோது ஓர் இரவில் 7ஐவிட குறைவான மணி நேரம்தான் அவர்கள் தூங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதன் இரவு நேரத்தில், குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் அவசியமாகிறது. ஆனால், ஐடி ஊழியர்களுக்கு வேலைப் பளுவினால் இது சாத்தியமற்றதாக இருந்தது. இப்பொழுது வாரம் 32 மணி நேரம் வேலைத் திட்டத்தால் இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். 7 மணி நேரம் கூட முழுமையாகத் தூங்க முடியாத நிலையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 42.6%ல் இருந்து, 14.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

“பலர் கூடுதல் நேரத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் அல்லது மற்ற ஏதாவது விஷயத்தில் செலவு செய்வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊழியர்கள் இந்த நேரத்தை தூக்கத்தில் செலவு செய்கிறார்கள். இந்த மாற்றம் ஆச்சரியமளிக்கிறது...” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜூலியட் ஸ்கோர்.
                    

ஜான்சி