இந்த மீனின் விலை ரூ.20 லட்சம்!



லாட்டரியில் முதல் பரிசு விழுந்த மாதிரி மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அந்த மீனவர்கள்.

மேற்கு வங்க கடற்கரையை ஒட்டிய சிறு நகரம் டிகா. அங்கு வசிக்கும் மீனவர்கள் அன்றைய நாளை ஓட்டுவதற்காக மீன் பிடிக்கச் சென்றனர்.
வழக்கம்போல சங்கரா மீன்கள்தான் வலையில் மாட்டும் என்று நினைத்தவர்களின் வலைக்குள் மாட்டியதோ சில்சங்கர் என்ற அரிய வகை ராட்சத மீன். எடையோ சுமார் 800 கிலோ. மீனை கரை சேர்ப்பதே பெரும்பாடு ஆகிவிட்டது.

சில்சங்கரின் செதில்களும், அதிலிருந்து கிடைக்கும் எண்ணெயும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. தவிர, அதன் கறியின் சுவைக்கு ஈடில்லை. சந்தையில் சில்சங்கர் ஒரு கிலோ குறைந்தபட்சம் 2,100 ரூபாய் வரை விலைபோகும். இதற்கு தனியாக வாடிக்கையாளர்கள் பட்டாளமே
இருக்கிறது.

சில்சங்கர் இருக்கிறது என்று தெரிந்தாலே போதும் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். இதையெல்லாம் அறிந்த மீனவர்கள் ஆடிப்போய்விட்டனர். மொத்த மீனையும் விற்றால் அவர்களுக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும்! ஊரடங்கு நேரத்தில் அடித்திருக்கிறது ஜாக்பாட்!       

த.சக்திவேல்