தண்ணீர் டாக்சி!



கடந்த நூறு வருடங்களில் மனிதன் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது. போக்குவரத்து, தொழில், டெக்னாலஜி உட்பட அனைத்துத் துறைகளிலும் அவனது வளர்ச்சி பெரும் உயரத்தைத் தொட்டுவிட்டன. குறிப்பாக போக்குவரத்தில் பெரும் பாய்ச்சலே நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் காரில் போக நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ‘ஓலா’, ‘ஊபர்’ வந்த பிறகு ஆட்டோவுக்கு கொடுக்கும் கட்டணத்திலேயே சொகுசு காரில் பவனி வருகிறோம்.

தவிர, விதவிதமான வாகனங்கள் சாலைகளை நிறைக்கின்றன. விமானம் வந்த பிறகு ஒரு கண்டத்தை விட்டு இன்னொரு கண்டத்துக்குப் போவது கூட மிக எளிமையாகிவிட்டது. போக்குவரத்துத் துறையில் நிகழ்ந்த அசுர வளர்ச்சி காற்று மாசுபாடு, அதிக இரைச்சல், வாகன நெரிசல், விபத்துகள் என பல எதிர்மறைகளைக் கொண்டிருந்தாலும் மனிதனின் பயணத்தை ரொம்பவே சுலபமாக்கிவிட்டது.

இருந்தாலும் இதிலுள்ள குறைகளை நீக்கி அப்டேட் செய்ய நிறைய நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. அவற்றில் ஒரு முயற்சிதான் இது.
இரைச்சல் எழுப்பாத, காற்று மாசுபாட்டை உண்டாக்காத, போக்குவரத்து நெருக்கடியிலிருந்து தப்பித்துச் செல்ல என பல நோக்கங்களை முன்வைத்து பிரான்ஸைச் சேர்ந்த ‘சீ பப்பிள்ஸ்’ என்ற நிறுவனம் பறக்கும் டாக்சியை உருவாக்கியுள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் இந்த டாக்சி தண்ணீரின் மேற்பரப்பில் மட்டுமே பறக்கக் கூடியது. இதை தண்ணீர் டாக்சி என்று சொல்வதே சரியாக இருக்கும்.மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது இந்த டாக்சி. இதன் சோதனை ஓட்டம் பாரிஸ் நகரில் வெற்றிகரமாக அரங்கேறியது. இதில் நான்கு பேர் பயணிக்க முடியும். ஒரு சிறு சத்தம் கூட எழுப்பாது. கார்பன் புகையையும் வெளியேற்றாது. இதற்கு தனியாக சாலை போட வேண்டியதில்லை. தவிர, இந்த வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்து சாலையில் செல்லாது.

அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. டாக்சிக்குக் கொடுக்கும் கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு பறக்கும் டாக்சி வந்துவிடும்.
        

த.சக்திவேல்