ரத்த மகுடம் -65



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலனுக்கு வியப்பேதும் ஏற்படவில்லை. மாறாக அன்புதான் பெருக்கெடுத்து வழிந்தது.காரணம் நண்பனின் அபரிமிதமான சக்தி. மற்றவர்களைவிட அதை கரிகாலனே நன்றாக அறிவான்.இருப்பது ஏதோ ஓர் இடத்தில். ஆனால், பிரபஞ்சத்தில் நடக்கும் அத்தனை அசைவுகளையும் விரல் நுனியில் வைத்திருப்பான்; அறிந்திருப்பான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் தெரியும். ஆனாலும் சுற்றிலும் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பான்! எங்கிருந்துதான் இந்த சக்திகள் எல்லாம் அவனுக்கு வந்ததோ என்ற வியப்பே ஏற்படும்.ஆனால், வியப்பை ஏற்படுத்தியதற்கான எந்த அறிகுறியும் நண்பனிடத்தில் தென்படாது. சலனமற்று இருந்தபடியே சுற்றிலும் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பான்!

அவ்வளவு ஏன், காஞ்சியைக் கைப்பற்ற ரகசியமாக சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் படை திரட்டி வருகிறார் என்ற தகவலைக் கூட பல்லவ ஒற்றர்கள் கண்டறிவதற்கு முன் இவன்தான் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரிடம் தெரியப்படுத்தினான்.

சொல்லப்போனால் இப்போது சாளுக்கியர்களை எதிர்ப்பது அறிவீனம்; நம் படைகள் சிதறிக்கிடக்கின்றன. அவர்களை ஒன்று திரட்டுவதற்குள் விக்கிரமாதித்தரின் தலைமையிலான படை நம்மைச் சூழ்ந்துவிடும்... எனவே தற்காலிகமாக பின்வாங்கி பின்னர் தாக்குவதே சிறந்தது... என நடைமுறையை எடுத்துச் சொல்லி சாளுக்கியர்கள் வருவதற்குள் பல்லவ மன்னரையும் அமைச்சர் பெருமக்களையும் காஞ்சியை விட்டு வெளியேறச் சொன்னது கூட இவன்தான்.

அப்படிப்பட்டவன் பல நாட்களுக்குப் பின் சந்தித்த தன்னிடம் நலம் கூட விசாரிக்காமல், ‘‘சிவகாமி உருவத்தில் சாளுக்கியர்கள் அனுப்பி வைத்த பெண்ணை சிறை செய்துவிட்டாயா..?’’ என்று கேட்டதை கரிகாலன் இயல்பாகவே ஏற்றான். இப்படி கேட்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பான் என்பதே உண்மை!

எனவே, தன்னை அணைத்த நண்பனை தானும் இறுக்கமாகக் கட்டித் தழுவினான்.நாழிகைகளும் யுகங்களும் கழிந்தபின் இருவரும் பரஸ்பரம் கரங்களைப் பற்றியபடி ஒருவர் நயனத்தை மற்றவர்கள் பார்த்தார்கள். கசிந்தார்கள். கலங்கினார்கள்.‘‘ஹிரண்யவர்மர் கொண்டு வந்த நாக விஷம் தோய்ந்த ஆயுதங்கள் அனைத்தையும் நம் இடத்துக்குக் கொண்டு வந்துவிட்டாய் போலிருக்கிறதே..?’’ நிலவிய மவுனத்தை கரிகாலன் கலைத்தான்.
‘‘பின்னே... அண்டை நாடுகளை எல்லாம் கிடுகிடுக்க வைக்கும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அதை கச்சிதமாக அனுப்பி வைத்தது நீதானே..?’’ சொன்ன நண்பனின் கண்களில் பெருமிதம் வழிந்தது.

‘‘இப்படியெல்லாம் பெருமைகளைத் தூக்கி அடுத்தவர் தலையில் போடக் கூடாது நண்பா...’’ கரிகாலன் நகைத்தான். ‘‘பேச்சு கொடுத்து ராமபுண்ய வல்லபரின் கவனத்தை திசை திருப்பியது மட்டுமே என் வேலை. அத்துடன் என் பணி முடிந்தது. மற்றபடி சாளுக்கிய வீரர்களைச் சுற்றி வளைத்து அந்த ஆயுதங்களை எல்லாம் கைப்பற்றி இங்கு கொண்டுவந்து சேர்த்தது எல்லாம் உன் சாமர்த்தியம்தான்!’’‘‘ஏற்கனவே குளிரில் உடல் வெடவெடுக்கிறது! நீ வேறு வார்த்தைகளால் குளிரை உண்டாக்காதே!’’

‘‘உண்டாக்காமல் எப்படி இருக்க முடியும் நண்பா..!’’ கரிகாலன் தன் புருவத்தை உயர்த்தினான். ‘‘உன் சமயோசித புத்தியை என்னவென்று சொல்ல... மரக் கிளைகளை பதமாக வெட்டி... அதனுள் ஹிரண்ய வர்மர் கொண்டு வந்த வாட்களை வைத்து... நதியின் போக்கில் மரக் கிளைகள் செல்வது போல் சாளுக்கியர்களை ஏமாற்றி... நம் இடத்துக்கு மொத்த ஆயுதங்களையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டாயே...

இதை எப்படி புகழாமல் இருக்க முடியும்..? சிவகாமியின் உருவத்தில் வந்திருப்பவள் தப்பிக்க முயன்றபோது எதேச்சையாக மரக்கிளை - அதை மரக்கட்டை என்று சொல்வதே பொருத்தம் - ஒன்றைப் பிடித்தேன்... பார்த்தால்... மரக்கிளையின் வண்ணத்தில் அதன் ஓரம் பிடி ஒன்று தென்பட்டது. பிடித்தால்... அது வாளின் பிடி! அப்பொழுதுதான் இதெல்லாம் உன் வேலை என்பதே புரிந்தது. அக்கணத்தில் தோன்றிய பிரமை இதோ இப்பொழுது வரை நீடிக்கிறது..!’’ வியப்புடன் கரிகாலன் சொல்லி முடித்தான்.

இத்தனைக்கும் பதிலாக எதிரில் நின்றவன் தன் கண்களை மட்டுமே சிமிட்டினான்.‘‘உன் அடக்கத்துக்கு அளவே இல்லை...’’ என்றபடி தன் நண்பனின் வயிற்றில் கரிகாலன் குத்தினான்!‘‘ஆ... வலிக்கிறது...’’ செல்லம் கொஞ்சிய நண்பன், ‘‘எப்பொழுது, வந்திருப்பவள் சிவகாமி அல்ல என்பதைக் கண்டுபிடித்தாய்..?’’ என்று கேட்டான்.‘‘மல்லைக் கடற்கரையில்!’’ சட்டென கரிகாலன் பதில் சொன்னான்.

‘‘அப்பொழுதேவா..?’’ இம்முறை வியப்பது நண்பனின் தருணமானது.‘‘ஆம். பல்லவர்களின் உபசேனாதிபதியான வல்லபன், அவளை அறிமுகப்படுத்தியபோது சந்தேகம் ஏதும் எழவில்லை. அதன் பிறகு கடலுக்குள் நீந்தும்போதுதான் பொறி தட்டியது...’’
‘‘எப்படி..?’’‘‘சிவகாமியின் இடுப்பில் கடுகளவு மச்சம் ஒன்று இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்...’’‘‘ம்...’’‘‘வந்தவளின் இடுப்பை அணைக்க நேர்ந்தபோது...’’‘‘ஓ... சரி... சரி...’’ நண்பன் சிரித்தான்.

சங்கடத்துடன் நெளிந்த கரிகாலன், நண்பனின் கிண்டலை பொருட்படுத்தாமல் தொடர்ந்தான். ‘‘ஒருவகையான பிசுபிசுப்பை உணர்ந்தேன்... அது சருமத்தின் வழுவழுப்பு அல்ல. வேறு ஏதோ பூசப்பட்டிருப்பது போல் தோன்றியது.

கரை ஏறியதும் நோட்டம் விட்டேன். மச்சம் இருந்தது...’’
‘‘ம்...’’‘‘பிறகு ஹிரண்யவர்மர் தொடங்கி சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் வரை பலரும் பலவிதமாக ‘இவளை நம்பாதே’ என எச்சரித்தார்கள்... காஞ்சி சிறையிலிருந்த என் தந்தையைக் காப்பாற்ற சுரங்க வழியில் நாங்கள் இருவரும் சென்றபோது... வந்திருப்பவள் போலி எனத் தெரிந்தது...’’‘‘எப்படி..?’’ கேட்ட நண்பன், சட்டென்று கரிகாலனின் வாயைப் பொத்தி பின்னோக்கி இழுத்தான்.

சைகையைப் புரிந்துகொண்ட கரிகாலன் அனிச்சையாகக் குனிந்தான்.நண்பனின் செவிகள் உயர்ந்திருப்பதைக் கண்டதும் தன் செவியைக் கூர்மையாக்கினான்.சற்றுத் தொலைவில் யாரோ நடக்கிறார்கள் என்பதற்கு அறிகுறியாக சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது.
இருவரும் அந்த இடத்தை நோக்கி குனிந்தபடியே நகர்ந்தார்கள்.பழக்கப்படாத யானைகள் என்றாலும் பழகியவன் உடன் வருவதால் கரிகாலனை அந்தக் களிறுகள் ஒன்றும் செய்யவில்லை.

நகர்ந்தபடியே யானைகளின் கால்களைத் தட்டிக் கொடுத்து மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.  அங்கே தென்பட்ட காட்சி அவர்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது!ஆம். சருகுகள் மிதிபடும் ஓசை சட்டென அதிகரித்தது.மெல்ல கரிகாலனும் அவன் நண்பனும் தலையை உயர்த்தினார்கள்.
பாதம் வலிக்குமோ என நடந்த ஒரு பெண்... ஓடத் தொடங்கினாள்!

அப்படி ஓடியவளின் முன்னால் களிறு ஒன்று மூர்க்கத்துடன் நின்றுகொண்டிருந்தது.
சிறிதும் அஞ்சாமல் அந்த யானையை நோக்கி ஓடிய அந்தப் பெண், அதன் முன்னங்காலில் தன் வலக்காலை வைத்து இடது காலை உயர்த்தி அதன் தந்தத்தின் மீது ஊன்றி அதன் உச்சந்தலைக்கு சென்றவள் -ஓங்கி தன் வலக்கையால் அதன் நெற்றியை அடித்தாள்!
முரண்டு பிடித்த அந்தக் களிறு சப்தநாடியும் ஒடுங்கி முழங்காலிட்டது.

அடுத்த கணம் அங்கிருந்த களிறுகள் எல்லாம் முழங்காலிட்டு யானையின் மீது அமர்ந்திருந்த அப்பெண்ணை வணங்கின.அந்த வணக்கத்தை ஏற்பது போல் தலையசைத்த அந்தப் பெண் -
சட்டென திரும்பி கரிகாலன் இருந்த திக்கைப் பார்த்து புன்னகைத்தாள்!

பதிலுக்கு புன்னகைக்கும் நிலையில் கரிகாலன் இல்லை. ஏனெனில் விவரணைக்கு அப்பாற்பட்ட உணர்வில் அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
எந்தப் பெண்ணை விலங்கிட்டு அழைத்து வந்தானோ... எந்தப் பெண் பல்லவ மன்னரின் வளர்ப்பு மகளாக நாடகமாடினாளோ... தனக்கு நிகரான அசுவசாஸ்திரி என யாரைக் குறித்து அவன் நினைத்தானோ... அந்த சிவகாமி கஜ சாஸ்திரியாக அந்த கஜத்தின் மேல் அந்தக் கணத்தில் அமர்ந்திருந்தாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்