கார் வெடிகுண்டில் இருந்து தப்பித்தார் நடிகர் மோகன் பாபு!
போஸ்ட் மார்ட்டம்-10
ஆந்திராவின் 50 ஆண்டுக்கால இரத்த சரித்திரம்
போதாதா..? இப்பொழுது பரிதலா ரவியின் கூலிப்படை டீம் உயிரோடிருக்கும் தலைவர்களைக் குறி வைத்தது!முதல் பலி ஓபுல் ரெட்டி. 1996ம் ஆண்டில் ஒரு நாள். ஐதராபாத்துக்கு வந்த ஓபுல் ரெட்டி, ஹோட்டலில் தங்கி... அதே... பாலியல் தொழிலாளியை வரவைத்து ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.இதை மோப்பம் பிடித்த ரவியின் டீம் சிங்கிள் டீ அருந்தியபடி ஸ்கெட்ச் போட்டது.
 பிசிறு தட்டவில்லை என்பதை ஒன்றுக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொண்டதும் காதும் காதும் வைத்தது போல் ஓபுல் ரெட்டி தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி வளைத்தார்கள்.ஓர் அடுக்கு ஆட்கள் வெளியில் நிற்க... அடுத்த அடுக்கு ஆட்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். தனது ‘ஆட்டத்தை’ முடித்துவிட்டு ஓபுல் ரெட்டி ரெஸ்ட் ரூமில் இருந்தார்.
கதவைத் திறந்து கொண்டு ஓசையெழுப்பாமல் அறைக்குள் நுழைந்த ரவியின் ஆட்கள், படுக்கையில் படுத்திருந்த பாலியல் தொழிலாளியை சத்தம் போடாமல் வெளியேறச் சொல்லிவிட்டு அறையின் அனைத்து மூலைகளிலும் தயாராகக் காத்திருந்தார்கள்.மூச்சு விடும் ஒலியைக் கூட அவர்கள் எழுப்பவில்லை.
 இதையெல்லாம் அறியாமல் ரெஸ்ட் ரூமை விட்டு வந்த ஓபுல் ரெட்டியை சுதாரிக்க மட்டுமல்ல... கத்தக் கூட ரவியின் ஆட்கள் அனுமதிக்கவில்லை. வந்தவரின் வாயை சட்டென்று ஒருவன் பொத்தினான். இருவர் ஓபுல் ரெட்டியின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தயார் நிலையில் கையில் ஆயுதங்களுடன் நின்றார்கள்.
ஒருவன் நிதானமாக ஓபுலின் தொண்டையை அறுத்தான்... ஓபுல் ரெட்டியின் கடைசி மூச்சு நிற்கும் வரை அவர் துடிப்பதைப் பார்த்துவிட்டு பின்பு ரவியின் ஆட்கள் ஹாயாக வெளியேறினார்கள்!இந்தப் படுகொலையைச் செய்தது நக்ஸல் இயக்கம்தான் என்கிறார்கள். என்றாலும் முதல் குற்றவாளியாக பரிதலா ரவியின் பெயரே சேர்க்கப்பட்டது. இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்தாக வேண்டும்.
சிலர் ஓபுல் ரெட்டி கொலை செய்யப்பட்டது அவரது வீட்டில்தான் என்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மீடியாக்கள் ஹோட்டல் அறையிலேயே அவரது தொண்டை அறுக்கப்பட்டது என சத்தியம் செய்கிறார்கள்.எது எப்படியிருந்தாலும் பாலியல் தொழிலாளி ஒருவர் அங்கிருந்தது உண்மை... ஓபுல் ரெட்டியின் தொண்டை அறுக்கப்பட்டது நிஜம்.
ஓபுல் ரெட்டியின் படுகொலை சூரியை கொந்தளிக்கச் செய்தது. நிச்சயம் அடுத்து தன்னை ‘போட்டுத் தள்ளவே’ பரிதலா ரவி திட்டமிடுவார் என்பது அவருக்குப் புரிந்தது.எனவே ரவி தன்னை போடுவதற்கு முன், தான் முந்திக் கொள்ள நினைத்தார்.இதற்காக சூரி செய்த திட்டங்கள் அனைத்தும் அனந்தப்பூர் மாவட்ட குடும்பப் பகையை ஆந்திராவைத் தாண்டி மொத்த இந்தியாவுக்கும் தெரியப்படுத்தியது! 1997ம் ஆண்டு நவம்பர் 19 அன்று காலை 11 மணி 50 நிமிடங்கள்.
ராமாநாயுடு ஸ்டூடியோவில் இருந்து வரிசையாக கார்கள் வெளியே வந்தன.நடுவில் இருந்த காரில் நடிகர் மோகன்பாபுவும் பரிதலா ரவியும் அமர்ந்திருந்தார்கள். சில மணி நேரங்களுக்கு முன்புதான் ‘ராமுலய்யா’ படத்தின் பூஜை அந்த ஸ்டூடியோவில் நடந்தது. அது பரிதலா ரவியின் அப்பா ராமுலுவின் வாழ்க்கைச் சரிதம்! தயாரிப்பு? வேறு யார்... பரிதலா ரவிதான்! இந்தப் படத்தில் ராமுலுவாக நடிக்க மோகன் பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
பூஜை முடிந்து ஹோட்டலுக்கு மோகன் பாபுவுடன் திரும்பிக் கொண்டிருந்தார் பரிதலா ரவி.ஸ்டூடியோக்கு வெளியே சில அடிகள் தொலைவில் பழைய ஃபியட் கார் ஒன்று நின்றிருந்தது. அதனுள் ரிமோட்டில் வெடிக்கக் கூடிய பாம் நிரப்பப்பட்டிருந்தது!யெஸ். சூரியின் திட்டமேதான்.
ஸ்கெட்ச் போட்டபடி இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறியிருந்தால் பரிதலா ரவியுடன் சேர்ந்து மோகன் பாபுவும் அந்த இடத்திலேயே துண்டு துண்டாகி சாம்பலாகியிருப்பார்!ஆனால், எங்கும், எதிலும் முந்திக்கொள்ளும் மனநிலை படைத்த பத்திரிகையாளர்களால் லேசான காயங்களுடன் ரவி தப்பித்தார்!மோகன் பாபுவுடன் அமர்ந்திருந்த ரவியின் காருக்குப் பின்னால் ஈ டிவியின் கார் வந்து கொண்டிருந்தது.
ஸ்டூடியோ வாசலை ரவியின் கார் நெருங்கிய சமயத்தில் பின்னால் வந்த அந்த ஈ டிவி கார், சட்டென ஓவர்டேக் செய்து முன்னால் சென்றது...இப்படி நடக்கும் என ரவி மட்டுமல்ல... ரிமோட்டுடன் நின்றிருந்த சூரியின் ஆட்களும் நினைக்கவில்லை.எனவே, ரவியின் கார்தான் வருகிறது என்று நினைத்து சூரியின் ஆட்கள் ரிமோட் பட்டனை அழுத்திவிட்டார்கள்.நின்றிருந்த பழைய ஃபியட் அடுத்த நொடி வெடித்தது.
ஃபியட்டுக்கு அருகில் வந்த ஈ டிவியின் காரும் சுக்கு நூறானது... அதில் இருந்த ஆறு பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்... அங்கிருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து அன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 26, படுகாயமடைந்தவர்கள் 32 பேர்.லேசான காயங்களுடன் பரிதலா ரவியும் மோகன்பாபுவும் தப்பித்தார்கள். இந்த கார் வெடிகுண்டு ஆந்திராவையே குலுக்கியது.
மொத்த இந்தியாவும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தது.அனந்தப்பூர் மாவட்ட காவல்துறை இது சூரியின் வேலையாக இருக்கலாம் என தலைமையகத்துக்கு உடனே தெரிவித்தது. அத்துடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றிய துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிஐடி போலீஸார் வசம் சேர்ப்பித்தனர். இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் பானுகோடா கிஷ்டப்பா, பி.லஷ்மண ரெட்டி, ஜூனால கூத்தப்பள்ளி, குண்டிமடி ராமுலு, கொண்டாரெட்டி, பெருகு வெங்கடேச்சலூ... உட்பட பலர் சிக்கினர்.
சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூர்ய நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி பெங்களூரில் யஷ்வந்த்புரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் இதனை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று மாற்றித் தீர்ப்பளித்து பரபரப்பாக்கியது.
ஆனாலும் இதற்காகவெல்லாம் சூரி தரப்பு பயந்துவிடவில்லை. இதற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. குற்றவாளியில்லை என்று நீதிமன்றம் விடுவித்தாலும் நாங்கள் விடப் போவதில்லை என்று துப்பாக்கிகள் ராயலசீமா மாவட்டங்கள் முழுவதும் முழங்கின. இந்த முறையும் நக்ஸல் இயக்கம் ரவியின் முன்னே நிற்க... கொலைகள் விழத் தொடங்கின!
(தொடரும்)
கே.என். சிவராமன்
|