பக்கிரி



அப்பாவைத் தேடி தீராத பயணம் மேற்கொண்ட மகனின் வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதுவே ‘பக்கிரி’.மும்பையில் அம்மாவோடு வசித்து வருகிறார் தனுஷ். தாயின் அபூர்வமான அன்பு தொனிக்கும் வாழ்க்கையில் ஞானங்களைப் பெறுகிறார். தன் கணவரை அடையாளம் காட்ட வெறுப்புக்கொள்ளும் தாயும் இறந்துபோக, அப்பாவின் காதல் பொங்கும் கடிதத்தோடும், சில அடையாளங்களோடும் தனுஷ் பாரீஸ் நோக்கிப்புறப்பட, அதுவே அவர் மனக்கதவு திறக்கும் பயணமாகவே மாறி விடுகிறது.

அவரது சந்திப்புகள், பெற்ற பாடங்கள், மாற்றங்கள் என மதிப்பு வாய்ந்த, வேறுபட்ட காலத்தின் விளையாட்டை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் ஸ்காட்.சிறுவர் சிறையில் இருக்கும் இளம் குற்றவாளிகளுக்குத் தன் வாழ்க்கையை சொல்வதின் வாயிலாக கதை தொடங்குகிறது. ஆரம்ப நிமிடங்கள் மிக முக்கியமானவை. இயக்குநர் கென் புதுமையான திரைக்கதையை கச்சிதமாக பிசிறு தட்டாமல் சொல்லியிருக்கிறார்.

அதிகபட்சமாக பக்கிரியாக வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அப்பாவைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ஆரம்பித்து, மேஜிக்கில் மக்களை சின்னதாக ஏமாற்றி தப்பிக்கும் ஓட்டத்தில் ஆகட்டும், அம்மாவை இழக்கும் துயரத்திலாகட்டும், அகதியாக பிடிபடும்போது புலம்பவதிலாகட்டும் தனுஷின் முகத்தில் உச்சபட்ச நேர்த்தி.

பாசத்தை செயல்களில் கொண்டுவரும் அம்மாவை தனுஷைப் போலவே நமக்கும் பிடிக்கிறது. ஒரு நாடோடியின் வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாக தமிழில் பார்க்க நேர்வதும் நம் நல் ஊழே.காதலியாக எரின்மோரியார்ட்டி ஒரு சிறு தெய்வம்போல் இருக்கிறார். முதல் பார்வை, முதல் காதலே என்றாலும் தனுஷ் காட்டுகிற முகபாவங்களில் பேரழகு. தப்பித்து நடிகையின் இல்லத்தில் எழும் தனுஷிற்கும், அவருக்கும் நடக்கும் உரையாடல்கள், அவர்களின் நட்பு இன்னொரு மேஜிக்.

நடிகையாக பெஜோ அற்புதம். நாலைந்து காட்சிகளில்தான் என்றாலும் அந்த நீள் முகம் நம்மை ஆகர்ஷிக்கிறது. அந்த சோமாலியா அகதி நண்பன் பர்காத் அப்தி அவ்வளவு இயல்பு. சிறிது நேரமே வந்து செல்வதற்குள் அவர் நம்மை கட்டிப்போடுகிற விதமே ஆச்சர்யம்.முன்னும் பின்னுமாகச் சென்று வரும் திரைக்கதைக்கு அருமையாக சிறப்பு செய்கிறது வின்சென்ட் மதியாஸின் கேமரா. மும்பையின் புனைவும், பாரீஸ் தொடங்கி நாடுகளின் பயண அணிவகுப்பும் கண் முன் நிற்கிறது.

அமித் திரிவேதியின் இசையை ஏன் இந்தியில் இப்படி கண்ணில் நிறைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரிகிறது. சாந்தமான, பின்னணியில் இரைச்சல் இல்லாமல் வலிமை காட்டுகிறார். நல்ல வசனங்களுக்கு ஜெயராம் சங்கரன், விக்ரம் வைபவ் பொறுப்பேற்கிறார்கள்.நல்ல வகை சினிமா. உட்கார்ந்து பார்க்க வைக்கும் விறுவிறுப்பு.                           

குங்குமம் விமர்சனக் குழு