இந்திய மக்களாட்சியின் சூத்திரம் ஒரு தேசம் பல அரசுகள் பல தேர்தல்கள்!



ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கோஷம் மக்களாட்சியை படுகொலை செய்வது என்பதைத்தான் அரசியல் தத்துவத்தை ஆழ்ந்து பயிலும் ஒருவர் கூற இயலும். காரணம், இது கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தி உளவியல் ரீதியாக இறையாண்மையை மத்திய அரசில் குவிப்பதற்கு வழிவகுக்கும் என்பதுதான். ஒரே தேசமாக நாம் இருக்க வேண்டுமானால், தேசத்தினுள் அனைத்தும் பன்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு என்பதும், தேர்தல்கள் என்பதும் பலவாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் பல்வேறு தளங்களில் இறையாண்மையை பகிர்ந்துகொள்வதன் மூலம் தேசத்தின் ஒற்றுமையைக் காக்க முடியும். இறையாண்மையை ஒரே இடத்தில் குவித்தால், முரண்கள் பெருகி தேச ஒற்றுமை சிதைவடையும். அரசியல் தத்துவத்தில் இறையாண்மை என்பது மிகவும் புதிரான ஒரு தத்துவம். இறையாண்மை என்பது முழு சுதந்திரத்தை, முடிவெடுத்து செயல்படும் ஆற்றலை குறிக்கிறது.

அடிப்படையில் இது நவீன அரசியல் சிந்தனையில் குடிநபர்களுக்கும், அரசிற்கும் இடையில் பகிரப்படுகிறது. குடிநபர்களுக்கு தனிப்பட்ட முறையில் சுதந்திரம் இருக்கிறது; ஆனால், அது தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டது, தேசிய அரசுகளுக்கு சுதந்திரமாக செயல்படும் ஆற்றல் இருக்கிறது. ஆனால், இது சர்வதேச அமைப்புகளுக்கு கட்டுப்பட்டது.

உண்மையில் ‘எதை வேண்டுமானாலும்’ செய்யலாம் என்ற சுதந்திரம் சமூக வாழ்வில் தனி நபர்களுக்கோ, உலக அரசுகளின் கூட்டமைப்பில்  உள்ள அரசுகளுக்கோ சாத்தியமில்லை. பொதுவாக போர்களை தவிர்த்தாக வேண்டும் என்ற சூழ்நிலை அணு ஆயுத பெருக்கத்திற்குப் பிறகு எல்லா நாடுகளுக்கும் உள்ளன என்பதால் சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம், பொருளாதாரத் தடைகள் மூலம் தேசிய அரசுகள் எதிர்கொள்கின்றன.

இதைத்தவிர உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை என பல அமைப்புகள் சர்வதேச கட்டுப்பாடுகளை, விதிகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. கடன் வாங்கும் நாடுகள், கடன் கொடுக்கும் நாடுகள், வர்த்தக சமநிலையின்மை என பல்வேறு நுட்பமான உறவுச் சிக்கல்களில் தேசிய அரசுகள் உள்ளன. அதனால் இறையாண்மை என்பது முற்று முழுமையானதாக எந்த அரசிடமும் இருப்பதில்லை.

ஒரே தேசத்திற்குள்ளும் இந்த இறையாண்மை உள்ளூர் ஆட்சி, மாகாண ஆட்சி, தேசிய அளவிலான ஆட்சி ஆகியவற்றிற்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதற்கான முக்கிய காரணம் தேசத்தினுள் நிலவும் பண்பாட்டு ரீதியான பன்மை. இந்த பண்பாடுகளின் விளைநிலங்களாக மொழிகள் விளங்குகின்றன. அதனால்தான் இந்தியா மொழிவாரி மாநிலங்கள் என்ற கருத்தை ஏற்று கணிசமான அளவு நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த மாநில ஆட்சி என்பதும்கூட உள்ளூர் அளவில் சுயேச்சையான சில நிர்வாக செயல்பாடுகளை சாத்தியமாக்காது என்பதால்தான் உள்ளாட்சி அமைப்புகள் தனியாக இயங்குகின்றன. ஆனால் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதில் சமீப காலங்களில் அரசு காட்டும் மெத்தனம் இறையாண்மையை ஒரே புள்ளியில் குவிக்கும் அரசியல் விழைவையே சுட்டுகிறது எனலாம்.

உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசுகள் பலவீனப்படுத்த, மாநில அரசுகளை மத்திய அரசு பலவீனப்படுத்த, இறையாண்மையை ஒரே புள்ளியில் குவிக்க முயன்றால் மக்களாட்சி என்பது போய் சர்வாதிகாரமாகவே அரசமைப்பு மாறிவிடும்.  அரசு என்பதை ஆங்கிலத்தில் ஸ்டேட் என்றும், ஆட்சி என்பதை கவர்ன்மென்ட் என்றும் குறிக்கிறோம். ஆனால், தமிழில் இந்தச் சொற்கள் புழங்குவதற்கும், ஆங்கிலத்தில் புழங்குவதற்கும் சில நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தமிழில் மாநில அரசு, மத்திய அரசு என்று இரண்டையும் அரசாகவே குறிப்பிடுகிறோம். ஆனால், ஆங்கிலத்திலோ அரசின் ஆட்சி (ஸ்டேட் கவர்ன்
மென்ட்), மத்திய ஆட்சி (சென்ட்ரல் கவர்ன்மென்ட், யூனியன் கவர்ன்மென்ட்) என்று குறிப்பிடுகிறோம். அதாவது அரசாட்சி என்பது மாநில அளவில் செயல்படுவதுதான் என்றும், மத்தியில் செயல்படுவது கூட்டாட்சிதான் என்றும் பொருள்படுகிறது. மத்திய ஆட்சியை ஆங்கிலத்தில் ‘ஸ்டேட் ஆஃப் இந்தியா’என்று குறிப்பிடுவதில்லை. ‘கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்றுதான் குறிப்பிடுகிறோம். அரசியல் தத்துவத்தில் முக்கியமான வார்த்தையாகிய ஸ்டேட் - அதாவது அரசு என்பது மாநில அளவில் செயல்படுவதுதான்.

இதற்கேற்றாற்போலவே இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான எழுபது ஆண்டுகளில் மாநிலக் கட்சிகளே அரசியலை நிர்ணயம் செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே மக்களாட்சியின் மூலம் வலுவான இந்திய தேசத்தை, அதன் ஒற்றுமையை உருவாக்குவதற்கு சிறந்த வழி. இதைத் தவிர்த்து தேசிய அரசியலை ஒருமுகப்படுத்த விரும்பினால் பாசிச, சர்வாதிகார அரசுகளையே உருவாக்க முடியும். அது நீண்ட கால நோக்கில் தேசத்தை பிளவுபடுத்திவிடும் என்பதே மிகப்பெரிய ஆபத்து.

மாநில அரசுகளே சட்டம் ஒழுங்கு, நிலத்தீர்வை, பத்திரப்பதிவு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பானவை. மத்திய ஆட்சி என்பது பொதுவான செலாவணி (கரன்சி எனப்படும் பணம்), பொதுவான ராணுவம், வெளியுறவு, சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றிற்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசை பேரரசாகவும், மாநில அரசுகளை குறுநில அரசுகளாகவும் பார்க்கும்  பார்வை அரசியல் முதிர்ச்சியற்றது. மாநிலங்களே அரசுகள்; மத்தியில் நிகழ்வது அவற்றின் கூட்டாட்சி என்பது தெளிவாக வேண்டும்.

இதை தெளிவுபடுத்த முக்கியமான ஒரு சீர்திருத்தம் செய்யவேண்டும். தேசிய கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்றொரு சட்டம் இயற்ற வேண்டும். வேண்டுமானால் அவை வெவ்வேறு மாநிலங்களில் வேறு பெயர்களில் கட்சிகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதே போல மாநில அரசிற்கான தேர்தல்களும், மத்திய ஆட்சிக்கான தேர்தலும் ஒரு போதும் சேர்ந்து நடத்தப்படக் கூடாது என்பதையும் சட்டமாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இறையாண்மை பகிர்வு என்பது மூன்று தளங்களிலும் சரிவர நடந்தால்தான், குடி நபர் சுதந்திரமும், மக்களாட்சியும் பாதுகாக்கப்படும் என்பதே பாலபாடம். இறுதியாக ஒன்று. மாநில அரசிற்கான தேர்தலுக்கும், மத்திய ஆட்சிக்கான தேர்தலுக்கும் மக்கள் வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்று ஊடகங்கள் புல்லரிக்கின்றன.

ஆனால், எளிய மக்களுக்கு இது சிக்கலாகவே இருக்கிறது. ‘வேறு’ என்பதை புரிந்துகொள்கிறார்கள்; ‘எப்படி வேறுபடுகிறது’ என்பதை புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக, என் நண்பரின் வீட்டில் பணிபுரியும் பெண் அவரிடம், மாநிலத்தில் இரட்டை இலைக்கும், மத்தியில் கை சின்னத்திற்கும் வாக்களித்தால் அது செல்லுமா என்று கேட்டிருக்கிறார்.

ஏனெனில் ஒரு அஇஅதிமுக கவுன்சிலர் அவர் குடும்பத்திற்கு பொது விநியோக அட்டை பெற உதவி செய்துள்ளார்; அதனால் மாநிலத்தில் இரட்டை இலை. அவர் தந்தை, பாட்டனார் ஆகியோர் காந்தி - நேரு குடும்பத்திற்கே வாக்களித்துள்ளார்கள்; தாமரை கட்சி அவருக்குப் பிடிக்கவில்லை  
அதனால் மத்தியில் கை.

ஆனால் தேர்தலில் இரட்டை இலையும், தாமரையும் கூட்டணி வைத்துள்ளது. அவர் இப்படி கலப்படமாக ஓட்டுப்போட்டால் செல்லுமா என்று அவருக்கு ஒரு ஐயம். இந்த ஐயத்தை அறியாமை என்று மட்டும் நாம் கொள்ள முடியாது. இப்படி தேர்தல் சேர்ந்து நடக்கும்போது இரண்டிற்கும் மாறுபட்ட தேர்வுகளை மேற்கொள்வதில் உளவியல் ரீதியான சிக்கல் அடங்கியுள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியா என்பது ‘ஒரு தேசம், பல அரசுகள், பல தேர்தல்கள்’ என்ற நடைமுறையை மக்களாட்சியின் உயிரெனக் கொள்ள வேண்டும்.  

                   
ராஜன் குறை