என் செகண்ட் இன்னிங்ஸ் ஓர் ஆசீர்வாதம்!



ஜோதிகா open talk exclusive

திருமணத்திற்குப் பிறகு ஜொலிக்கும் ஹீரோயின்களில் தனிஇடத்தில் மின்னுகிறார் ஜோதிகா. அன்பான மாமனார் - மாமியார், ‘மேட் ஃபார் ஈச் அதர்’ கணவர், செம க்யூட் குழந்தைகள்... என பொறுப்பான குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தவரை ‘36 வயதினிலே’ படம், ‘வாடி ராசாத்தி...’ என ஆரத்தி எடுத்து வரவேற்றது.

பிறகென்ன..? தன் இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் எண்ட்ரி கொடுத்த சந்தோஷத்தில் தொடர்ந்து பக்குவமான ரோல்கள், பர்ஃபெக்‌ஷன் கேரக்டர்கள் என கலக்குகிறார் ஜோ. அடுத்து அவர் ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’ தவிர மேலும் இரண்டு படங்களில் பரபரக்கிறார்.‘‘நிச்சயம் இந்த செகண்ட் இன்னிங்ஸ் ஆசீர்வாதம்தான். முதல் இன்னிங்ஸை விட இப்ப பெட்டரா நடிப்பதா ஃபீல் பண்ணறேன். இப்ப உள்ள புது இயக்குநர்கள், ‘இந்த கேரக்டரே உங்கள மைண்ட்ல வச்சு எழுதினதுதான் மேம்’னு சொல்றப்ப சந்தோஷமா இருக்கு.

இந்த தலைமுறை இயக்குநர்களின் கிரியேட்டிவிட்டியும், உழைப்பும் அதிசயிக்க வைக்குது. சின்ன வயசுலயே மிடில் ஏஜ் ஹீரோயின் சப்ஜெக்ட்டை எப்படி அவ்ளோ அழகா யோசிக்கறாங்கனு பிரமிப்பா இருக்கு. கதைதான் ஹீரோ என்பதில் தெளிவா இருக்காங்க. பக்காவான பவுண்டட் ஸ்கிரிப்ட்டோடுதான் அணுகறாங்க...’’ வியக்கும் ஜோதிகா, ஐந்து வருடங்களுக்கு முன், மறுபடியும், தான் சினிமாவில் நடிப்போம் என நினைத்தே பார்க்கவில்லையாம்.

‘‘மிராக்கிள் மாதிரி எல்லாமே எதிர்பாராம அமைஞ்சது. வயசுக்கு ஏற்ற கதைகள் நிறைய தேடி வர்றப்ப ஹேப்பியா இருக்கு. ‘36 வயதினிலே’ அப்ப மறுபடியும் நான் நடிக்க வரலாம்னு முடிவெடுத்தப்ப ரெண்டு விஷயங்களைத்தான் யோசிச்சேன்.இனி நான் பண்ற படங்கள் பெண்களின் பெருமையை உணர்த்தும் படங்களா இருக்கணும்... கதையும் மெசேஜும் ஸ்டிராங்கா இருக்கணும்... இப்ப வரை இந்த இரண்டு விஷயங்களைத்தான் கவனிச்சு ஃபாலோ பண்றேன்...’’ புன்னகைக்கிறார் ஜோதிகா.

எப்படி வந்திருக்கு ‘ராட்சசி’?
கம்பீரமா! டிரெய்லர்ல, ‘தீமை நடக்கிறது என்று சொல்லி அதை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள். எதிர்த்து நிற்பவர்கள் வரலாறு ஆகிறார்கள்’னு ஒரு வரி வருமே... அதான் படத்தின் மையக்கரு. ‘ராட்சசி’யின் ஒவ்வொரு டயலாக்குமே சிந்திக்க வைக்கும். எல்லாமே  கதையோடு பொருந்தும் வரிகள். அறிமுக இயக்குநர் கௌதம் ராஜ், ‘ராட்சசி’ படத்தின் கதையை சொல்லும் போதே, ‘உங்களுக்காகவே எழுதின ஸ்கிரிப்ட் இது’னு சொன்னார். நானும் இப்படி ஒரு கேரக்டரை இதுக்கு முன்பு பண்ணினதில்ல.

ரொம்ப சிம்பிள் லைன்தான். ஆனா, ரொம்ப ஆழமானது. அரசு பள்ளி ஒன்றின் தலையெழுத்தை மாற்றும் ஆசிரியை கீதாராணியா நடிச்சிருக்கேன். தன் வாழ்க்கைல நடந்ததைத்தான் கதையா எழுதியிருக்கறதா இயக்குநர் கௌதம் ராஜ் சொன்னார்.நான் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சதில்ல. ஆனா, எங்க ‘அகரம் பவுண்டேஷன்’ல உள்ள மாணவர்களில் 35% பேர் அரசுப் பள்ளில படிக்கிறவங்கதான். அதுவும் போதுமான டீச்சர்ஸ் இல்லாமயே படிச்சு வந்தவங்க.

கௌதம் ராஜ் கதையை சொன்னப்ப ‘அகரம்’ ஸ்டூடண்ட்ஸ்கிட்ட கேட்ட விஷயங்கள்தான் மைண்ட்ல வந்தது. ‘ட்ரீம் வாரியர்ஸி’ன் தயாரிப்பாளர்கள் பிரபு, பிரகாஷ்பாபு ரெண்டு பேருமே அரசு பள்ளில படிச்சு வளர்ந்தவங்க. போதுமான கட்டட வசதி இல்லாம மரத்தடியில் தான் எங்க க்ளாஸ் நடக்கும்னு முன்னாடி எப்பவோ அவங்க சொன்னது நினைவுக்கு வந்தது.

உடனே நானே ‘ட்ரீம் வாரியர்ஸ்’கிட்ட பேசி அவங்களையே படத்தை தயாரிக்கச் சொன்னேன். அவங்களும் கதைல இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. கதைக்குத் தேவையான சில இன்புட்ஸையும் கொடுத்திருக்காங்க.‘வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கறவங்க மட்டும் அரசாங்கப் பள்ளியில் படிக்கறாங்க. உயர்கல்வியில் ஐம்பது பர்சன்ட் இடத்தை இவங்களுக்கு ஒதுக்கினாலே வறுமைக் கோட்டை போக்கலாம். ஆனா, அரசாங்கம் யாரோட வறுமையை போக்குதுனு தெரியல...’ இப்படி சுளீர்னு உறைக்கிற வசனங்கள் படம் முழுக்க இருக்கு.

டிரெய்லர் பார்த்த பலரும் ‘கீதாராணி டீச்சர் ரொம்ப துணிச்சலா இருக்காங்க’னு பாராட்டினாங்க. யூனிட்டே ஹேப்பியா இருக்கோம். எங்க கூட பூர்ணிமா பாக்யராஜ் மேமும் நடிச்சிருக்காங்க.

எங்களுக்கு காம்பினேஷன் சீன்ஸ் குறைவுதான். செம எனர்ஜியான டெக்னீஷியன் டீம். ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் அசுரத்தனமா உழைச்சிருக்கார். லன்ச் பிரேக்குக்குக் கூட அவர் போய் நான் பார்க்கலை. ஷான் ரோல்டன் கதைக்கு பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கார்.

போல்டான கேரக்டர்ஸா தேடித் தேடி பண்றீங்க போல?
ஆமா. அப்படி கேர்க்டர்ஸும் என்னைத் தேடி வருது. நானும் இதுக்குதான் முன்னுரிமை கொடுக்கறேன். இப்ப பணத்துக்காக நான் ஒர்க் பண்ணலை. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவான நான், இப்ப நடிக்கற படங்கள் அர்த்தமுள்ளதா இருக்கணும்னு விரும்புறேன். இந்த சொசைட்டிக்கு கொஞ்சமாவது பயன்படணும்னு  நினைக்கறேன்.

இப்ப பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறையவே நடக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் பெண்கள் பெரியளவில் பாதிக்கப்படல. இப்ப உலகம் ரொம்ப மாறியிருக்கு.

இதையெல்லாம் பெண்கள்கிட்ட எடுத்துச் சொல்ற கதைகளோடு, எல்லா தரப்பு பெண்களும் பெருமையா ஃபீல் பண்ற படங்களா பண்ண விரும்பறேன். அடுத்து, ‘ஜாக்பாட்’ பண்றேன். இது காமெடி ஜானர். கூடவே ஆக்‌ஷனும் அருமையான மெசேஜும் இருக்கு. ரேவதி மேமும் எங்க கூட இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க!

மை.பாரதிராஜா