பகவான்-35



சிறையில் ஷீலா!

பகவானைப் பிடிக்கவில்லை. அதனால் கைது செய்தார்கள் என்றுதான் தொடரை வாசித்து வரும் வாசகர்கள் நினைக்கிறார்கள்.ஒரு வகையில் அது உண்மைதான்.

பகவான் கனவு கண்ட புதிய சமுதாயம் என்பதில் அரசியல் ரீதியாகவே அமெரிக்காவுக்கு பெரிய விருப்பமில்லை. ஏனெனில் அத்தகைய புதிய சமுதாயத்தை பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்களை வைத்து, தானே உருவாக்கிக் காட்டியிருப்பதாக அது நம்பியது.எனவேதான், அரசியல்ரீதியாகவே பகவான் அமெரிக்காவில் வேண்டாத விருந்தாளியாக பார்க்கப்பட்டார்.

அடுத்து அமெரிக்காவில் ஓஷோ மதரீதியாக கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்தியாவில் இருந்தபோது எப்படி இங்கிருந்த பெரும்பான்மை மதமான இந்து மதத்துக்கு எதிராக அவர் பார்க்கப்பட்டாரோ, அதுபோலவே அமெரிக்காவில் கிறிஸ்தவத்துக்கு எதிரி என்று அடையாளம் காட்டப்பட்டார்.ரஜனீஷ் சொல்வதை காது கொடுத்துக் கேட்க எவரும் தயாரில்லை. மாறாக அவர் மீது குத்தப்பட்டிருந்த முத்திரைகளையே கண்ணை மூடிக்கொண்டு நம்பினார்கள்.

ரஜனீஷ் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தப்பட்டபோது அவர் மீது அமெரிக்க அரசுத்தரப்பு சாட்டிய குற்றங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் இடப்பெயர்வு சட்டங்களை வளைத்தது தொடர்பாகவே இருந்தது. அமெரிக்கர் அல்லாத நிறைய வெளிநாட்டவர்களை (குறிப்பாக இந்தியர்களை) அமெரிக்கக் குடிமக்களாக மாற்ற போலித்திருமணங்கள் செய்வித்தார் என்பதே பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட 35 வழக்குகளில் ஒவ்வொன்றாக பகவான் தரப்பு எதிர்வாதங்களால் பொடிப்பொடியாக உதிர்ந்தன. எனினும் இரண்டே இரண்டு வழக்குகளுக்கு மட்டும் அமெரிக்க போலீஸார் வலுவான ஆதாரங்களை முன்வைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நான்கு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

ரஜனீஷ் தரப்பு கேட்டுக் கொண்டதின் பேரில் சிறைத்தண்டனை மட்டும் நீதிபதிகளின் கருணையால் விலக்கப்பட்டு (suspended sentence என்று அமெரிக்காவில் சொல்வார்கள். முதன்முறை குற்றவாளிகளில் சிலருக்கு இந்த சலுகை கிடைக்கும்), ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து வெவ்வேறு நாடுகளில் குடியேற பகவான் முயற்சித்தார். குறிப்பாக ஐரோப்பாவில் தன்னுடைய தலைமையகத்தை மாற்றிக்கொள்ள நினைத்தார்.ஆனால் -பகவானுக்கு இடம் கொடுத்தால், அமெரிக்காவை பகைத்துக் கொள்ள வேண்டி வருமோ என்கிற அச்சத்தால் மற்ற நாடுகள் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டன.வேறு வழியின்றிதான் 1985, நவம்பரில் மீண்டும் இந்தியாவுக்கே வந்தார்.

ஒருவேளை அவர் அமெரிக்காவிலிருந்து உடனடியாக வெளியேறி இருக்காவிட்டால், வேறொரு பலமான வழக்கில் சிக்கியிருந்திருக்க நேரிடும்.
யெஸ்.கற்பனைக்கு எட்டாத ஒரு குற்றத்தை ரஜனீஷ்புரம் மீது அமெரிக்க அரசு சுமத்தியது. சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா மீது ரசாயனப் போர் தொடுக்க முனைந்ததாக குற்றச்சாட்டு.

அக்டோபர் 27ல் ரஜனீஷ் கைது செய்யப்பட்டிருந்தார் என்றால், மறுநாளே ஜெர்மனியில் ஆசிரமத்தில் இருந்து விலகிப்போன மா ஆனந்த் ஷீலா மற்றும் மா ஆனந்த் பூஜா இருவரும் கைது செய்யப்பட்டனர்.இன்றும் கூட அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய bioterrorist attack என்று வருடம் தோறும் அமெரிக்க ஊடகங்கள் ரஜனீஷ்புரத்தை நினைவு கூர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றன.

1984 சமயத்தில் உள்ளூர் தேர்தலின்போது தமக்கு எதிரானவர்களை தோற்கடிக்க ரஜனீஷ்புரத்தார்கள் விஷம் வைத்தார்கள் என்பதே குற்றச்சாட்டு. அதாவது ஆசிரமத்தின் சார்பில் தாங்கள் நிறுத்தப்போகும் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்று கருதிய வாக்காளர்களுக்கு விஷம் வைத்தார்களாம்.

Salmonella என்கிற பாக்டீரியாவை மொத்தம் 751 பேர் மீது செலுத்தியதாக அரசுத்தரப்பு சொன்னது. அவற்றில் 45 பேர் கவலைக்கிடமான நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்தார்களாம். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்கிற தகவல்களையும், ‘ஆதாரங்களோடு’ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

கோர்ட்டில் ஷீலா நிலைகுலைந்து போனார்.மேலும் -இந்த மிகப்பெரும்வன்முறைத் தாக்குதல் குறித்து அறிந்து விசாரணைக்கு உத்தரவிட்ட அமெரிக்காவின் அட்டர்னியையும் விஷம் வைத்துக் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு.இந்த சதிச்செயல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மோப்பம் பிடித்து விட்டதாலேயே முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவரான மா ஆனந்த் ஷீலா, பொய்யாக கோபித்துக் கொண்டு ரஜனீஷ்புரத்தை விட்டு விலகி ஜெர்மனிக்குப் பறந்ததாகவும் போலீஸ், ஊடகங்களுக்கு கதை கூறியது.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த பயோடெர்ரரிஸ்ட் தாக்குதலை பகவானின் செயலர் மா ஆனந்த் ஷீலா, மற்றும் பகவானின் நர்ஸான மா ஆனந்த் பூஜா இருவரும் திட்டமிட்டனராம். சியாட்டில் நகரில் இருந்த லேப் ஒன்றில் Salmonella-வின் சாம்பிள் வாங்கப்பட்டு, ரஜனீஷ்புரத்தில் அதை ஆய்வகம் ஒன்றில் பெரிய அளவில் தயாரித்தார்களாம்.

இதை சிறிய உணவகங்களில் தங்கள் ஆட்கள் மூலமாகக் கொண்டுசென்று உணவுப்பொருட்களில் சேர்த்து ‘டிரையல்’ பார்த்தார்களாம். இந்த டிரையலிலேயே 751 பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று போலீஸ் சொன்னது. அது மட்டுமின்றி சுற்றுவட்டாரத்துக்கு நீர் சப்ளை செய்யும் வாட்டர் சிஸ்டத்தையும் விஷமயமாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்றும் பகீர் தகவலைச் சொன்னது.

பாதிக்கப்பட்ட 751 பேரின் மெடிக்கல் ரிப்போர்ட்டும் நீதிபதிகள் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது.மக்களுக்கு லேசாக ‘விஷம்’ தருவதற்கு ரஜனீஷிடம், தான் அனுமதி பெற்றதாக ஷீலா விசாரணையில் சொன்னார்.எனினும், இந்த விஷம் வைத்த வழக்கில் ரஜனீஷ் மீது எந்தவொரு வழக்கையும் அமெரிக்க அரசு பதிவு செய்யவில்லை.

விஷம் வைத்த குற்றச்சாட்டு மட்டுமின்றி பகவான் மீது போடப்பட்டிருந்த இடப்பெயர்வு சட்ட மீறல் தொடர்பான சில வழக்குகளையும் ஷீலாவும், பூஜாவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடைசியாக அவர்களுக்கு மூன்று முதல் இருபது ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஏக
காலத்தில் அனுபவிக்கக் கூடியதாக கிடைத்தது.

இருவருமே சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டனர். ஷீலாவுக்கு அமெரிக்கா கொடுத்திருந்த க்ரீன் கார்டு திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகே அவர் சுவிட்சர்லாந்துக்குப் பறந்து அங்கே மறுமணம் செய்துகொண்டு புதுப்பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

(தரிசனம் தருவார்)  

மீண்டும் சிலுவையில் அறையப்பட்டார் இயேசு!

அமெரிக்காவில் சுமார் 7 வாரங்கள் சிறையில் இருந்தார் பகவான். 12 நாளில் தன்னை 6 நகரங்களில் இருந்த வெவ்வேறு சிறைகளுக்கு அலைக்கழித்தார்கள் என்று குற்றம் சாட்டினார். இதன் மூலமாக தன்னுடைய உடல்வலிமை, மனவலிமையை அழிக்க முயற்சித்தார்கள் என்றார். தனக்கு உணவில் விஷம் வைத்திருப்பார்களோ என்றும் அவர் சந்தேகித்தார்.

தான், தங்குவதற்கு கவுரமான அறைகளை போலீஸ் அதிகாரிகள் வழங்கவில்லை. கரப்பான்பூச்சிகள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த மோசமான லாக்கப்புகளில் அடைக்கப்பட்டாராம். குளிருக்கு போர்த்திக்கொள்ள போர்வைகூட கொடுக்காமல் சித்திரவதைப்படுத்தினார்களாம்.

“அவர்கள் என் உடலில் விஷம் செலுத்தியிருக்கலாம். என் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய இருப்பை அவர்களால் தகர்க்க முடியவில்லை. என் உடலை, என் மனதை நானே ஊடுருவிப் பார்க்கும் வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். சிறையிலிருந்த ஏழு வாரங்கள் எனக்கு அக்னிப்பரீட்சை. இப்போது புடம் போட்ட தங்கமாய் வெளிவந்திருக்கிறேன்...” என்று தன் பக்தர்களிடம் சொன்னார்.

அமெரிக்கா தன்னை சிறைப்படுத்தி அவமானப்படுத்தியதை அழகான இலக்கிய வார்த்தைகளில் விமர்சித்தார். “ரொனால்டு ரீகனின் ஆட்சியில் இயேசுவை மீண்டும் கிறிஸ்தவர்களே சிறையில் அறைந்திருக்கிறார்கள்!”

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்