சித்தா சமாஜின் கம்யூன் லைஃப்
செக்ஸ் என்பது இயல்பான ஒன்று...இரு பாலினத்தவரின் விருப்பப்படி நிகழும் உறவில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இந்தியா காலங்காலமாகவே ஆன்மிக பூமி. பக்தி மார்க்கம் இங்கு எவ்வளவு தீவிரமோ ஞான மார்க்கமும் அதே அளவு தீவிரத்துடன் பேசப்படும் நிலம் இது. மனிதன் முக்தியடையவும் முழுமை பெறவும் தேவையான ஆன்மிக சாதனைகளை அந்தக் காலம் முதலே பற்பல குருமார்கள் போதித்துவந்துள்ளனர். ஒவ்வொரு குருவுக்கும் தனித்தனி மடங்களும் இருந்திருக்கின்றன. பழங்காலத்தில் தொடங்கப்பட்ட மடங்களில் இன்று மிகச் சிலவே காலத்தைக் கடந்து இயங்கிவருகின்றன.
 அப்படியான தொன்மையான மடங்களில் ஒன்றுதான் சித்தா சமாஜம். கேராளாவின் கோழிக்கோட்டில் வடகரையில் அமைந்துள்ளது இந்த மடம். இங்கு, இன்றும் மக்களின் ஆதரவுடன் 300க்கும் மேற்பட்ட துறவிகள் ஆன்மிக வாழ்க்கையை லயம் பிறழாமல் வாழ்ந்துவருகின்றனர். சித்தா சமாஜத்துக்கு கேரளாவில் நான்கு கிளைகளும் தமிழ்நாட்டில் ஒன்றும் உள்ளன. சித்தா சமாஜத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? சாதி, மதம், கடவுள் போன்ற நம்பிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நெருக்கடி இங்கு கிடையாது.
அவரவர் விருப்பத் தேர்வாகவே பாலுறவும் இருப்பதுதான் சமாஜத்தின் வாழ்வில் முக்கிய அம்சம். இறைவனை அடையும் லட்சியத்தில் கண்ணாய் உள்ள துறவிகள் தாங்கள் பங்கேற்கும் ஸ்பெஷல் பிரார்த்தனைக் கூட்டத்தில் நிர்வாணமாகப் பங்கேற்கிறார்கள். பொதுவான சமூகத்துக்கு மாற்றாக மலர்ந்துள்ள சித்தா சமாஜத் துறவிகளை இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தொன்மையான கம்யூனிஸ்ட்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமாஜத்தின் டிசைன்! 96 வயதான நாலுகட்டு டிசைனில் உள்ள கட்டடத்தின் இரு வாசல்களுக்கும் செக்யூரிட்டிகள் கிடையாது. மாடிகளில் உள்ள டஜன் தங்கும் அறைகளோடு, பிரார்த்தனைக்கான திறந்தவெளி கூடமும் இங்குள்ளது. 60 ஏக்கரில் பரந்து விரிந்த சமாஜத்தின் நிலத்தில் உணவுக்கு என காய்கறிகளும், மருத்துவ சிகிச்சைகளுக்கு என மூலிகைகளும் விளைவிக்கப்படுகின்றன.
 சமாஜத்தின் செயல்பாடு, தனிநபர் நன்கொடைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழியாகப் பெறப்படும் கட்டணங்களின் மூலம் தொய்வின்றி நடைபெறுகிறது. சமாஜத்தின் இரண்டாவது வாசல் தினசரி திறந்து மூடப்படுகிறது. இங்குள்ள ஹாஸ்டலில் வெளியூர் பக்தர்கள் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள். வலதுபுறம் உள்ள பாதையில் கோயில் அமைப்பில் பெரும் தூண்கள் கொண்ட இடம், சமாஜத்தைத் தொடங்கியவரான சிவானந்தாவுக்கானது. இங்கு எந்தவித சடங்குகளும் செய்ய அனுமதி கிடையாது.
அருளாற்றலின் தொடக்கம்! முதலில் போலீஸ்காரராக பணியாற்றத் தொடங்கிய சிவானந்தா, வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு ஊசிமுனை நெருக்கடிகளால் தன்னைப் பற்றிய தீவிர தேடல்களைத் தொடங்கினார். தேடலின் முடிவில் பெற்ற ஞானத்தை மக்களுக்குப் பகிர, சித்தா சமாஜத்தைத் தொடங்கினார். சாதி, மத மூடநம்பிக்கைகளற்ற, சோசலிஷ யோகி என குரு சிவானந்தாவை இங்கு உள்ள கல்வெட்டுகள் பாராட்டி உச்சிமுகர்கின்றன.
பிரார்த்தனையில் நிர்வாணமாக ஈடுபடுவது இயற்கையானது என்று சிவானந்தா நம்பியதுதான் பிரணாயம் எனும் சடங்குக்கு முக்கியக் காரணம். இங்குள்ள பொருட்களைத் தங்கியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனத் தனியுடைமையை மறுத்த சிவானந்தா, தன் சிந்தனைகளைத் தொகுத்து ‘சித்தா வேதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். ஐந்தாவது வேதம் இது என்று சூளுரைத்த சிவானந்தாவின் எழுத்தில் சோசலிஷ சமுதாயத்தின் நம்பிக்கை ஒளி வீசுவது ஆச்சர்யம்.
 சுதந்திர விதிகள்! இங்குள்ள ஆண், பெண் இருபாலரும் விரும்பினால் உடலுறவுகொள்ளலாம். தனியுடைமை மறுப்பு விதிப்படி, உறவு கொண்டவரையும் அவருக்குப் பிறக்கும் பிள்ளையையும் சொந்தம் கொண்டாட முடியாது. பிள்ளைகள் சமாஜத்தின் சொத்தாக 16 வயது வரை வளர்க்கப்படுவார்கள். பின்னர் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி வாழ்க்கையை வாழ சமாஜம் அனுமதிக்கிறது.
இயற்கையே குழந்தைகளுக்குத் தாய் என்பதோடு, சிவானந்தாவின் ‘எஸ்’ என்ற இனிஷியல் பிள்ளைகளின் பெயரில் இணைக்கப்படுகிறது. கம்யூனில் பிறந்து இங்கேயே வாழ்ந்துவரும் தனஞ்செயனிடம் பேசினோம். ‘‘நாங்கள் சிறையில் வாழ்வதாக சிலர் நினைக்கலாம். ஆனால், சிறையில் மாட்டிக்கொண்டது அவர்கள்தான்...’’ எனப் புன்னகையுடன் பேசுகிறார். சித்தா வேத நூலைக் கற்ற சித்தா வித்யார்த்தி என்னும் பயிற்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சித்தா சமாஜத்துக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள்.
கர்மயோகப் பணிகள்! தினசரி சமாஜத்தின் பணிகள் வேலை, தியானம், தூக்கம் என மூன்று பிரிவாக 8 மணி நேரங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. காய்கறி உணவுகளைச் சாப்பிடும் இத்துறவிகளுக்கான பிரார்த்தனை கூட்டத்தில் மக்களுக்கு அனுமதி கிடையாது. துறவிகள் தாம் அணிந்திருக்கும் ஒற்றை முண்டினையும் களைந்து நிர்வாணமாவது அந்த நிகழ்வில்தான். ஆண் மற்றும் பெண் இருவரும் பாலுறவுத் தேவையை அங்கு நிகழ்த்துவதும் சாதாரண நிகழ்வு. '‘செக்ஸ் என்பது இயல்பான ஒன்று. இரு பாலினத்தவரின் விருப்பப்படி நிகழும் உறவில் வெட்கப்பட என்ன இருக்கிறது?’’ என்கிறார் தனஞ்செயன். இங்குள்ள பெண்களுக்குப் பணிகள் விருப்பத் தேர்வு என்றாலும், பெரும்பாலும் சமையல், சுத்தம் செய்யும் பணிகளையே செய்துவருகிறார்கள்.
 கற்பதும் கற்பிப்பதும் ஒருவரே எனும் முறையில் வாழ்வின் அடிப்படைகளை, தானே கற்பது இயல்பான கற்றல்முறையாக இங்குள்ள சிறுவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. தனஞ்செயன் கம்ப்யூட்டர் இயக்கவும், வாகனங்களை ஓட்டவும் கற்றது அப்படித்தான். இங்குள்ள வரலாற்றுத் தகவல்கள், புகைப்படங்கள் அயல் மனிதர்களுக்கு காட்டப்படுவதில்லை. தேவைக்கு உலகுடன் தொடர்புகொண்டு ஆன்மிக அனுபவத்தை அடைவது இன்றைய நுகர்வு யுகத்திலும் சிலருக்கேனும் சாத்தியமாவது அதிசய நிகழ்வேதான்.
- ச.அன்பரசு
|