இந்தியாவில் ஒரு ஸ்காட்லாந்து!



- ச.அன்பரசு

ஃபாரீன் டூர்தான் எப்போதும் பரவசமா என்ன? என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று கேட்பது போல் நம் நாட்டிலேயே டிஸ்னிலேண்டை விட பரவசம் தரும் பல்வேறு ஃபேன்டஸி உலகங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மேகாலயா. இதைச் செல்லமாக கிழக்கு ஸ்காட்லாந்து என்று வர்ணிக்கிறார்கள் சுற்றுலாப் பிரியர்கள். இங்குள்ள ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள டாகி நகரின் உமன்காட் நதி பளிங்கு போன்ற தூய்மையானது. இந்த நதியில் படகுச் சவாரி செய்வதுதான் பரவசமான அனுபவம். இந்தியா, வங்காளதேசம் என இரு நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் இடமும் இந்த நதிதான்.

மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து சில்லிடும் காற்று வெளியிடை 85 கி.மீ. பயணித்தால் கிழக்கு ஜெய்ன்டியா மலைத் தொடரில் உள்ள டாகி நகரை அடையலாம். வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்துக்கு நெருக்கமான ஏரியா இது. இந்தியா, வங்காள தேசம் என இரு நாட்டுக்குமான முக்கிய வணிக நகரம் டாகி. மேகாலயா - வங்காளதேசம் என இரு நாடுகளையும் இயற்கையாக உமன்காட் நதி பிரிக்கும் இடம். பாரம்பரிய பழங்குடிகளின் பிர தேசமான மேகாலயாவில் அருவிகள், ஏரிகள், பச்சைப் பசேல் நிலக்காட்சிகள் எல்லாம் சேர்ந்து மனதைக் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் ஆக்கிவிடும்.

வங்காளதேசம் - இந்தியா பார்டர் என்றால் குற்றங்கள் இல்லாமலா? மணல், கற்கள், பசுக்கள் இங்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதோடு, வங்காள தேச மக்களின் இடப்பெயர்வும் இந்திய அரசுக்குப் பெரும் தலைவலி. இந்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையின் கிடுக்கிப்பிடி சோதனைகளால் சட்ட விரோத கடத்தல்கள் தற்போது தடைபட்டுவிட்டன. இங்கு பாதுகாப்புப் படையினரின் செக்போஸ்ட் தமபில் என்ற நகரில் அமைந்துள்ளது என்றாலும் புகைப்படத்துடன் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் இருந்தால் அதிகக் கேள்விகள் இருக்காது.

நீலமும் பச்சையுமாக எமரால்டு நிற உமன்காட் நதியில் படகுகள் செல்வது பார்க்க நீருக்கு மேலாக காற்றில் பயணிப்பது போன்ற அற்புதக் காட்சி. பலர் படகுகளில் ஆங்காங்கே ஜென் நிலையில் நின்று ஆற அமர தூண்டில் போட்டு காத்திருந்து மீன் பிடிக்கின்றனர். காசி பகுதி படகுக்காரர்களிடம் வாடகை பேசி படகில் ஏறி அமர்ந்தால் துடுப்பசைவிலும் நம்முள் எழும் ஆச்சர்ய திகைப்பு கலைவது இல்லை. படகுகளில் குழுவாக நின்று மீன் பிடிப்பவர்கள் சடக்கென தூண்டிலை இழுக்க, நிஜமாகவே பிடிபட்ட மீன் 4 கிலோ தேறும் சைஸில் மிரட்டுகிறது.

வங்காளதேசத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஆங்கிலேயரால் 1932ம் ஆண்டு கட்டப்பட்டது. இருபது நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை படகு சவாரி செய்யலாம். ஒரு படகில் நான்கு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. நதி வாட்டர் டயமண்டாய் மின்னுவதால் 20 அடி வரை நீரைத் துல்லியமாகப் பார்க்கலாம். மார்ச் - ஏப்ரல் சீசனில் இங்கு படகுப் போட்டிகள் நடைபெறும் என்பதால் சம்மரில் கூட்டம் அள்ளும். பொதுவாகவே டாகி நகர் ஆல் சீசன் டிலைட் ஏரியாதான்.

நவம்பர் - ஏப்ரல் மாதங்கள் டாகி நகரில் டூர் போக சரியான காலம். பருவ காலங்களில் உமன்காட் நதியில் வெள்ளம் எகிறும் என்பதால் போட்டிங் இருக்காது. மேலும், கடந்தாண்டே பிரதமர் மோடி - வங்காளதேச பிரதமர் ஹஸீனா ஆகியோர் குவகாத்தி - ஷில்லாங் - டாகி இடையிலான மலிவு விலை பஸ் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துள் ளதால் செலவுகள் மேக்சிமம் உங்கள் பர்ஸைக் கரைக்காது.

எப்படிச் செல்லலாம்?
ரயில் என்றால் குவகாத்தியில் இறங்கி பஸ், கார் பிடித்து டாகி, ஷில்லாங் செல்லலாம். பஸ் என்றால் குவகாத்தியின் ரயில்வே ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பஸ்களில் குவகாத்தியிலிருந்து ஷில்லாங் வரை செல்ல வசதி உண்டு. ஷில்லாங்கில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளன. குவகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஜமாய் டிஷ்கள்! ஜாடோ, டொனெய்ஹாங், மாஹம் பிசி, ஜூர் சிதே ஆகிய சூப்பர் டிஷ்களோடு, டாகி நகரின் ஸ்பெஷல் ஆரஞ்சு பழங்கள் நீங்கள் மிஸ் செய்யக்கூடாதவை

ஜமாய் டிஷ்கள்!
ஜாடோ, டொனெய்ஹாங், மாஹம் பிசி, ஜூர் சிதே ஆகிய சூப்பர் டிஷ்களோடு, டாகி நகரின் ஸ்பெஷல் ஆரஞ்சு பழங்கள் நீங்கள் மிஸ் செய்யக்கூடாதவை

சுற்றுலா ஸ்பாட்கள்
ரூட் பிரிட்ஜ் (ட்ரைனா கிராமம்), கிரைம் பைல்யுட் குகை, மாலிநாங் (காசி மாவட்டம்), கிரெம் மாஸ்மாய் குகை, நோகலிகாய் அருவி, இகோ பார்க், மாஸ்மாய் அருவி, வகாபா அருவி, நோக்ரெக் பார்க், தாங்க்காரங் பார்க், டெய்ன்த்லென் அருவி