மகர லக்னம் சனி - கேது சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 100

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

மயிர் நீத்தால் உயிர் நீங்கும் தன்மானச் சிங்கங்கள். தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள். எண்ணெயில் போட்ட வடை மாதிரி கொதிப்பார்கள். குடும்பத்தோடு சட்டென்று ஒட்டாத ஒரு குணம் இருக்கும். அதிகாரம், பணிவு, கற்றுக்கொடுத்தல் என்ற மூன்று குணங்களும் சமமாக இருக்கும். எந்த கருத்தைச் சொன்னாலும் அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று பார்ப்பார்கள்.

பிரபலமானவரோடு தன்னை இணைத்துப் பேசுவதில் மிகுந்த விருப்பமிருக்கும். எனக்கும், அவருக்கும் ஒரே நட்சத்திரம்... என்று ஒப்பிட்டுக் கொண்டு பெருமைப்படுவார்கள். வார்த்தைகளை விட காட்சிகளாக விஷயங்களை நினைவிற்குள் கொண்டு வந்து நிறுத்துவார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் சனியும், கேதுவும் நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

மகர லக்னத்திலேயே அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல இருப்பார்கள். தலைமைப் பொறுப்பு கைக்கு வந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை வழிநடத்த யோசித்துக் கொண்டே இருப்பார்கள். சிறந்த ஆன்மிகவாதிகளாகவும் அலங்காரமான பேச்சு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள். அதனாலேயே பணவரவும் குறைவாகத்தான் இருக்கும். தொழில் அதிபர்களாகவும், சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களாகவும் விளங்குவார்கள். இரண்டாம் இடமான கும்பத்தில் சனியும், கேதுவும் சேர்ந்திருந்தால் நிறைய விஷயங்களை அடுக்கடுக்காக பேசும் திறமை பெற்றிருப்பார்கள். சிறந்த வசன கர்த்தாவாகவும் வரும் வாய்ப்புகள் உண்டு. பழமையான மொழிகளை வளர்த்துக் கொள்வதில் தீவிரம் காட்டுவார்கள்.

எவ்வளவு கோபமானாலும் நல்லோரைத் தேடி ஓடும் மனோபாவம் உண்டு. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பதற்கும் இவர்கள்தான் உதாரணம். மிக முக்கியமாக நரம்புத் தளர்ச்சி, காதில் சீழ் வடிதல், தேவையற்ற நடுக்கம் என்றெல்லாம் இருக்கும். பணத்தைவிட அறிவைத்தான் அதிகம் சம்பாதிப்பார்கள்.

மூன்றாம் இடமான மீனத்தில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் இளைய சகோதர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். முயற்சியைத் தவிர தெய்வத்தின் அருளும் வேண்டும் என்று பல இடங்களில் உணர்ந்திருப்பதாக கூறுவார்கள். ஒரு செயலை செய்வதற்கு முன் அதற்கான முயற்சிகளை மிகச் சிறிய அளவில் செய்து பார்த்துவிட்டுத்தான் இறங்குவார்கள். நீங்கள் பார்க்க ஏங்கிய மனிதர்களெல்லாம் உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள்.

எத்தனை சொத்து, சுகங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி தேடலும், தவிப்புமாக இருப்பார்கள். நான்காம் இடமான மேஷ ராசியில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருப்பதால் விவாதம் செய்வது என்பது இவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்போல இனிக்கும். தாய் வழி உறவுகளில் விரிசல்கள் ஏற்படும். அம்மாவிற்கு கை, கால்கள் மரத்துப்போகும். வயதுக்குத் தகுந்த நண்பர்களைவிட தன்னைவிட இருபது வயது குறைந்தவரோடு தான் நட்பாக இருப்பார்கள்.

மனிதர்களை எப்படி அணுகுவது, நான்கு பேரிடம் எப்படிப் பழகுவது போன்ற விஷயங்களில் உங்களுக்கு இணை எவருமில்லை. ஐந்தாமிடமான ரிஷபத்தில் சனியும், கேதுவும் இருந்தால் சொந்த ஊர் தெய்வம், மரபு, இனம் குறித்து மிக விரிவாக ஆராய்ச்சி செய்வார்கள். சிலருக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும். பொதுவாக நீங்கள் கொஞ்சம் செட்டிலாகி விட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். அவ்வப்போது மருத்துவரையும் கலந்தாலோசிப்பது நல்லது.

நகரத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அவ்வப்போது வாரிசுகளை அழைத்துக்கொண்டு ஊர் விசேஷங்களில் கலந்து கொள்ள தவற மாட்டார்கள். எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்தால்தான் உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆறாம் இடமான மிதுனத்தில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றால், எதிரியென்றால், அவர் எதிரிதான். திரும்ப வந்து எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் உங்கள் நட்புப் பட்டியலில் இடம்பெற முடியாது. எதிராளி கொஞ்சம் புகழ்ந்தால், தானாகவே தன்னை நிறைய மெச்சிப் பேசும் வழக்கமும் இவர்களிடத்தில் உண்டு.



நறுக்கென்று பேசுவதால் ஆங்காங்கு எதிரிகள் முளைத்த வண்ணம் இருப்பார்கள். பேசக் கூடாத விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு, மனசை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். ஆறாம் இடத்திற்கு புதன் அதிபதியாக வருவதால், ‘எது வேண்டுமானாலும் ஆகட்டும். அத்துமீறிப் பார்’ என்கிற எண்ணம் எப்போதும் வலுத்து இருக்கும்.

ஏழாம் இடமான கடகத்தில் சனியும், கேதுவும் இருந்தால் சிலருக்கு திருமணமான உடன் உத்தியோகம் அல்லது வியாபாரத்தின் பொருட்டு வாழ்க்கைத் துணையை பிரிந்து பின்னர் சேர வேண்டி வரும். ஐம்பது வயதை நெருங்கும்போது எதிர்ப்படும் பெண் தொடர்புகளை தவிர்த்து விடுங்கள். மனைவி, பிள்ளைகள் மீது பாசம் இருந்தாலும் விவாதம் செய்து கொண்டே இருப்பார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி ஏற்பட்டு நீங்கும். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் கலைகளில் மிகவும் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள்.

எட்டாமிடமான சிம்மத்தில் சனியும், கேதுவும் இணைந்திருந்தால் எல்லாமே எளிமையாகக் கிடைத்துவிட்டது என்கிற அலட்சியம் அதிகமாக இருக்கும். எப்போதுமே ஆதாரத்தைத் திரட்டிவிட்டுத்தான் செயலில் இறங்குவார்கள். கலையார்வம் இருந்தாலும் பெரும்பாலும் பழமையான விஷயங்கள்தான் பிடிக்கும். அடிக்கடி பயணப்பட்டபடியே இருப்பார்கள். சேமித்தல் என்கிற குணமே இவர்களிடம் இருக்காது.

ஒன்பதாம் இடமான கன்னியில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் உயர் கல்வி திட்டங்கள் குறி தவறும். வேறொரு வாழ்க்கைப்பாதையை தற்செயலாக தேர்ந்தெடுப்பார்கள். பத்து குடம் பாலூற்றி பல மணிநேரம் ஆராதனை செய்வதைவிட, பத்து நிமிடம் ஆத்மார்த்தமாக அமர்ந்து தியானிப்பதே சிறந்தது என்று நினைப்பார்கள். இவர்களின் பலவீனங்களை மறைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் காரணம் தந்தைதான் என்று முடிவுக்கு வருவார்கள்.

பத்தாம் இடமான துலா ராசியில் சனியும், கேதுவும் சேர்வதால் எவருமே துணியாத தொழிலில், ஏற்ற இறக்கங்கள் அதிகமுள்ள தொழிலில் இறங்கி வெற்றி பெறுவார்கள். சிறிய வயதிலேயே ஓவியப் போட்டி, மாற்றுடைப் போட்டி, மேடை நாடகம் என்று ஈடுபடுவார்கள். நடிகராகும் தகுதியை சிறிய வயதிலேயே வளர்த்துக் கொள்வார்கள். ஹோமியோபதி, வாஸ்து, உணவு விடுதி, மருந்துக்கடை, தையல் கலை என்று சில துறைகளில் ஈடுபட்டு புகழடைவார்கள். வியாபாரமெனில், நர்சரி கார்டன் , டெக்ஸ்டைல்ஸ் போன்ற தொழிலில் இறங்கினால் பெருத்த லாபம் பெறலாம்.

துலாச் சுக்கிரன் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக வருவதால், ‘‘எங்கிட்ட சொல்லாம யாரும் எந்த காரியமும் செய்ய மாட்டாங்க’’ என்று நாலு பேரிடம் சொல்வார்கள். மகர லக்னமோ அல்லது மகர ராசியிலோ பிறந்தவர்களுக்கு மாமனார், மாமியாருக்குள் எப்போதும் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அதை அதிகம் கவனிக்காமல் இருவரிடமும் பேசிக்கொண்டு ஒட்டியும், ஒட்டாமலும் இருந்து விடுவது நல்லது.

பதினோராம் இடமான விருச்சிக ராசியில் சனியும், கேதுவும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரரால் பிரச்னைகள் வந்து நீங்கும். ஆனால், அதுவே சகோதரி எனில் நல்லது. பங்குச்சந்தை மூலம் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் உருப்படியாக எதுவும் செய்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, இனத்திற்கோ ஆலோசனை கூறியபடி இருப்பார்கள்.



பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிகத்தையே விஞ்ஞானப் பார்வையாக பார்க்கும் விவேகம் இருக்கும். நிறைய சொத்து சுகங்கள் இருந்தாலும் எதிலும் ஒட்ட மாட்டார்கள். பெரிய பங்களா இருந்தாலும் பகவான் கொடுத்த குடிசை என்பார்கள். ஊருக்கு ஒரு சாமியார் வந்திருக்கிறார் எனில் தர்க்கம் செய்ய கிளம்பி விடுவார்கள்.

அறிஞர்களையும், ஆன்மிகவாதிகளையும் ஆழம் பார்ப்பதற்கு இவர்களைத்தான் அனுப்ப வேண்டும். மணிக்கணக்கில் பேசினாலும் அடிமனதை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டமாட்டார்கள். தாடி வளர்த்து, தவம் செய்தால்தான் சித்தாந்த வேதாந்தங்களை அறிய முடியுமா என்று நினைப்பார்கள்.

சனியும், கேதுவும் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் ஆன்மிகத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் ஒருசேரக் காட்டும் அமைப்பாகும். அகவாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்குமிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே, இந்த அமைப்பிலுள்ளோர் மக்களுக்கும், ஆன்மிக வாழ்க்கையில் பயணிப்போருக்கும் சேர்த்து உதவும் ஞானியர் மற்றும் சந்நியாசிகளை தரிசித்து வருதல் நல்லது.

அப்படிப்பட்ட ஒரு ஞானியே திருக்கோவிலூரில் உறையும் ஸ்ரீ ரகோத்தம தீர்த்த சுவாமிகள் ஆவார். ஸ்ரீமத்வாச்சார்யர் ஸ்தாபித்த மடங்களில் ஒன்றான, ஸ்ரீஉத்தராதி மடத்தின் 14-வது அதிபதியாக, கி.பி.1556-ஆம் ஆண்டு பீடத்தில் அமர்ந்தார். விழுப்புரத்தில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோவிலூர்.

இந்த ஊருக்கு முன்னதாக பெண்ணையாற்றின் பாலத்தை அடுத்து உள்ளது மணம்பூண்டி கிராமம். இங்கே, ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனம். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வரும் பேருந்தில் பயணித்தால், மணம்பூண்டி பஸ் ஸ்டாப் அருகிலேயே ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனம் உள்ளது..

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்