அன்று மலம் அள்ளும் தொழிலாளி... இன்று சமஸ்கிருத பேராசிரியர்!



ஒரு தலித் பெண்ணின் சாதனைக் கதை

-ச.அன்பரசு

‘‘உன் அப்பா துப்புரவு வேலை செய்பவர்தானே? போய் கழிவறையைக் கழுவி விடு. அதை விட்டுவிட்டு வகுப்பில் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?’’ கேட்ட ஏழாம் வகுப்பு சமஸ்கிருத ஆசிரியரின் அமில வார்த்தைகள் அந்த தலித் சிறுமியை தீயாய் சுட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்து பின்வாங்கவில்லை. விளைவு? இன்று அச்சிறுமி மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியை! ஹரியானா மாநிலம், கைதல் மாவட்டத்தில் இருக்கும் ராஜூண்ட் கிராமம்.

இங்கு பால்மிகி சாதியில் மலமள்ளும் தொழிலாளிக்கு மகளாகப் பிறந்த கௌஷல் பன்வார், மேலே சொன்ன சம்பவம் நடந்த அடுத்த நாளும் வகுப்புக்குச் சென்றார். அச்சுறுத்தியும் அடித்தும் அசராதவரை வேறுவழியின்றி ஆசிரியர் வகுப்பில் சேர்த்துக் கொண்டாலும் கடைசி வரிசைதான் அவருக்குக் கிடைத்தது. ‘‘ஏழாம் வகுப்பின் முதல் நாள் சமஸ்கிருத வகுப்பில் கிடைத்த அவமானத்தை என்றும் என்னால் மறக்க முடியாது. இன்று நான் சமஸ்கிருத பேராசிரியையாக இருக்கிறேன் என்றால் அதற்கு அந்த ஆசிரியரே காரணம்..!’’

புன்னகையுடன் பேசுகிறார் கௌஷல் பன்வார். தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது என்று கூறப்பட்ட தொன்மை மொழியான சமஸ்கிருதத்தை கற்கத் தொடங்கியபோது, தம் மக்கள் மீது சுமத்தப்பட்ட சாதி இழிவு குறித்து ஆழமாக அறியத் தொடங்கினார். ‘‘ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, டெல்லியில் முனைவர் படிப்பு உட்பட எங்கும் என்னை விட்டு எனது சாதி நீங்கவேயில்லை.



நிழலைப் போல தொடரவே செய்தது...’’ என துயரத்தை அசைபோடும் கௌசல் பன்வார், இப்போதும் தன் பெயருக்குப் பின்னால் தன் சாதியைக் குறிக்கும் சொல்லை வைத்திருக்கிறார். அதை நீக்கும்படி பலர் வற்புறுத்தியும் அவர் மறுப்பதற்குக் காரணம், இளமையில் அவர் பெற்ற அனுபவங்கள்தான். அவரது கிராமத்திலிருந்த குளத்தில் எருமைகளைக் குளிப்பாட்டலாம். துணிகளைத் துவைக்கலாம். ஆனால், தலித்துகள் மட்டும் குளிக்க அனுமதியில்லை.

இதை மீறி கௌஷலும் அவரது நண்பர்களும் குளித்தபோது, தூய்மை கெட்டுவிட்டது என ராஜபுத்திர மக்கள் ஒன்று திரண்டனர். ‘‘தூய்மையில்லாத குளத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எங்களுக்கே அதை கொடுத்துவிடுங்கள்!’’ என நெஞ்சை நிமிர்த்தி பேசியது அப்போது சிறுமியாக இருந்த கௌஷல் பன்வார் மட்டுமே. இத்தனைக்கும் அப்போது அவரது குடும்பமே பிழைப்புக்கு உயர் சாதியினரின் நிலங்களைத்தான் நம்பியிருந்தது!

‘‘இந்தியாவின் சாதி அடுக்குகள் அசாதாரணமானவை. ஒரு சிறுமி பாலின வேறுபாட்டையும், சாதி, தீண்டாமையையும் சமூகத்திடமிருந்துதான் அறிகிறாள் என்பது பெரும் துயரம்...’’ ஆற்றாமையுடன் சொல்லும் பேராசிரியை கௌஷல் பன்வார், தன் வகுப்பு நணபர்களின் வீடுகளில் கழிவுகளை அகற்றும் பணியால் கேட்க நேர்ந்த சாதி வசைகள், விடுதியில் தனிமை, வகுப்பில் கிண்டல்கள்... என அனைத்து அவமானங்களையும் ஒவ்வொருநாளும் எதிர்கொண்டிருக்கிறார்.
  


எம்.ஃபில் முடித்ததும் ரோதக் பல்கலைக்கழகத்தில் பி ஹெச்.டி சேர முயற்சித்தார். ‘இலக்கியத்தில் சூத்திரர்கள்’ என்ற அவரது தலைப்பை கடுமையாக எதிர்த்த ஆசிரியர்கள், அவரது அட்மிஷனை நிராகரித்து வேறொரு பெண்ணை அனுமதித்தனர். அப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து ‘தலித்துகளின் சமூக பொருளாதாரம்’ குறித்து உரையாற்ற கைதல் நகருக்கு வந்த பேராசிரியர்கள் பூல் பதான், மலாகர் ஆகியோருக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.

கெளஷலுக்கு ஆதரவாக இவர்கள் நின்றனர். அதனால்தான் ஜேஎன்யூவில் பிஹெச்.டி படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. 2012ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில், ‘The Situations of Shudras in Vedas’ என்ற உரை, நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜயதே’ உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது... ஆகியவை எல்லாம் கெளஷலின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசுகள்.  

‘‘என் தந்தையின் தொழில் சார்ந்த சாதி இழிவுகளை சகித்து படித்த சமஸ்கிருத மொழிதான், இந்து சமுதாயத்தின் சமச்சீரற்ற சாதி அமைப்பைப் பற்றி எனக்கு முழுமையாகப் புரிய வைத்தது!’’ என்று சொல்லும் கௌசல் பன்வார், படிப்பினூடே பல்வேறு முக்கிய ஆளுமைகளின் உரைகள், இலக்கியக்கூட்டங்கள் என பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கேற்று தன் சமூகம் குறித்த தன் அறிவை பட்டை தீட்டிக்கொண்டு 3 புத்தகங்களை எழுதியுள்ளார்.

‘‘தலித் பெண் சமஸ்கிருத பாடம் நடத்துகிறாள் என்பதை ஜீரணிக்க முடியாத பலர், பாடங்களை சரியாக நடத்துவதில்லை என என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர். அது தவறு என்பதை என்னுடைய பணியின் மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறேன்..’’ என்று சொல்லும் கௌசல் பன்வார், தலித் இலக்கியங்களை தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.      



மலம் அள்ளும் தொழிலாளர்கள்!

2011ம் ஆண்டு கணக்குப்படி மலமள்ளும் தொழிலாளர்கள் - 1,82,505
தென்னிந்தியா (16,362).

கையால் மலமள்ள தடைவிதிக்கப்பட்ட ஆண்டு 1993
(உலர் கழிப்பறை)

2013 (தொழிலாளர் மறுவாழ்வு).

உத்தரப்பிரதேசம் - 10,301
கர்நாடகா - 737
தமிழ்நாடு    - 363
ராஜஸ்தான் - 322
ஒடிஷா - 237
அசாம் -191
பீகார் - 137

(13 மாநிலங்களில்).
உலர் கழிப்பறைகளின் எண்ணிக்கை - 26 லட்சம்.

பாதாள சாக்கடையில் இறந்த தொழிலாளர்களுக்கான இழப்பீடு 10 லட்சம்  (உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2014)

(Socio Economic and Caste Census 2011, Social Justice and Empowerment Department 2017)

2015ம் ஆண்டு மலமள்ளும் தொழிலாளர்கள் - 12,226