குத்து



சுப்ரபாரதிமணியன்

மாட்டுக் கறி சாப்பிடும் திருவிழாவிற்கு கலையரசன் அழைப்பு விடுத்து பிரசுரங்களை பேருந்து நிறுத்தங்களில் விநியோகித்துக் கொண்டிருந்தார். ‘‘யாரு என்ன சாப்புடறதுன்னு யார் யாருக்கு யார் சொல்றது? சாப்பிடறது அவங்கவங்க உரிமை. பழக்கம்!’’ என்றார். தெற்குத் தெருவில் சென்றாண்டு முதல் பிரதான இடத்திலேயே மாட்டுக் கறி கடை வந்துவிட்டது.

முன்பு ஞாயிற்றுக் கிழமை மட்டும் தெற்குத் தெருவில் மாடு அறுத்து பிரித்துக் கொள்வார்கள். இப்போது நாலைந்து நாட்களாவது மாட்டுக் கறி சுலபமாக கிடைத்துவிடுகிறது. செந்நிறத்தில் எங்காவது தொங்கிக்கொண்டிருக்கும். ‘‘கறி வாங்க காசில்லடா. இதுதான் வேணும் எங்களுக்கு...’’ என்று சுப்பையா கூட உறக்கப் பேசினான். பத்து வருடங்களுக்கு முன்பு அரிசிக்கு வரி போட்ட ‘வரி’ நாடகத்தை குறும்படமாக எடுக்க வீடியோகிராபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவர் கல்யாண விசேஷத்திற்குப் படம் எடுக்கும் கேமிரா செலவைச் சொல்லிக் கொண்டிருந்தார். அதுவே இப்போதைக்கு போதும் என்றான். ‘‘லோ பட்ஜெட்ல...’’ ‘‘அப்பா... ரெஜிஸ்ட்ரேஷன் கல்யாணம் மாதிரிதான். சிம்பிளா... அது மாதிரிதான்...’’ சிங்கப்பூர் போய் பார்க்கும் வாய்ப்பைப் பற்றி முன்பெல்லாம் கோபிநாத் சொல்லிக்கொண்டிருந்தான். ‘‘அங்க பல குரூப்ங்க இருக்கு.

யாரு கிட்டையாச்சும் உன்னெப் பத்தி சொல்லி கூட்டிட்டு போக நெனச்சேன். மூணு மாசம் முந்தி டிக்கெட் போட்டா ரொம்பவும் கம்மியா வரும். யார் ரூம்ல யாச்சும் தங்கிக்கலாம். ரெண்டு பக்கம் நாடகம், பேச்சுன்னு போன செலவு செரியாயிரும். சந்தோசமா இருக்கும்...’’ தங்கமணியைப் போலவே சுப்பையாவிற்கும் கோபிநாத்துடன் சிங்கப்பூர் போகும் கனவு இருந்தது.  

‘‘தண்ணின்னா அங்க பீர்தானே?’’ ‘‘ஆமா. ஹோட்டல்ல தண்ணி வேணுமான்னு கேட்டுட்டு டேபிள்ல வெப்பாங்க. அப்புறம் அதை பில்லிலயும் சேர்த்துக்குவாங்க...’’ சிங்கப்பூரிலிருந்து வந்த போது கைகளிலும் தொழிலும் ‘ஹல்க்’ குத்திக் கொண்டிருந்தான் கோபிநாத். அவன் அம்மா ‘‘இதல்லாம் என்னடா?’’ என்றாள். ‘‘நம்ம அம்மாச்சி நெத்தி, கைகளிலெல்லாம் அந்தக் காலத்தில குத்தியிருப்பாங்க.

பச்சை குத்தற குறத்திய பாத்ததும் எல்லோரும் ஓடி ஒளிஞ்ச கதையை அம்மாச்சி சொல்லியிருக்காங்க...’’ ‘‘அந்தக் காலத்தில பச்சை குத்துனா தாங்க முடியாத வலி வரும். ஒரு வாரம் காய்ச்சலா படுத்திருக்கணும்...’’ ‘‘இந்த ட்ராகனை பச்சை குத்தறப்போ வலியெல்லாம் இருக்காதும்மா. அந்தக் காலத்தில புருஷன் பேரை சொல்ல பொம்பளைகளுக்கு கூச்சமா இருந்திருக்கும். அதனால மஞ்சள், விளக்கெண்ணெய், காரியான்தழைச்சாறுன்னு எல்லாங் கலந்து மூங்கில் குச்சியால் குத்தியிருக்காங்க.



அங்க ட்ராகன் மாதிரி எல்லாம்தான் குத்திக்கு வாங்க...’’ ‘‘நீயும் இதுக்கெல்லாம் பதிலா உம்பொண்டாட்டி பேரைக் குத்திக்கலாம்...’’ ‘‘அப்புறம் பொண்டாட்டி தாசன்னு சொல்ல மாட்டீங்களே!’’ ‘‘எங்கெங்கே குத்துறாங்கடா?’’ ‘‘எங்க வேண்ணா குத்தலாம். ஒருத்தன் ஆண் குறியில பொண்டாட்டி பேர் குத்தச் சொன்னானாமா... ஒரு மாசத்திலேயே டைவர்ஸ் பண்ணிக்கிட்டு அதை அழிக்கணும்னு வந்து நின்னான்னு ஒரு நியூஸ் அங்க வந்தது. சிரிப்புதான்!’’

‘‘காதுலெ குத்தலீன்னா சவக்குழிக்குள்ள போட்டு மூடமாட்டங்களாம். அதனாலே சுடுகாட்டுல காது குத்தியிருக்கான்னு பாத்துட்டுதான் புதைப்பாங்க... அது மாதிரி எமன் பச்சக் குத்திருக்கான்னு செக் பண்ணுவான்னு ஒரு கதை இருக்கு!’’ மனிதர்கள் இறந்துபோய் மேல் உலகத்திற்கு செல்கிறார்கள். எமன் எரித்து விடுவது போல் கேட்டான்.

‘‘பூமியிலிருந்து என்ன சீதனம் கொண்டு வந்தாய்?’’ ‘‘ஒரு பிடி பச்சை கொண்டு வந்துள்ளேன்!’’ ‘‘சரி சொர்க்கம் போ...’’ ‘‘இல்லீன்னா?’’ ‘‘நரகந்தான்...’’ அந்தக்கதையை பலரிடமும் சொல்லியிருக்கிறான். ‘‘சுப்பையா... உன்னெ அங்க கூட்டிட்டு போயி பாரதி வேஷம் போட்டு நிறுத்தணும்டா..!’’ ‘‘நடிகர் சுப்பையா போட்ட பாரதியார் வேஷம் ரொம்பவும் சூட் ஆகும்னு எங்கப்பா சொல்லியிருக்கிறார்.

உனக்கும் ரொம்பவும் சூட் ஆகுதுடா...’’ ‘‘கலை இரவுல பாலாஜி சக்திவேல், தங்கர் பச்சானெல்லாம் என்னோட பாரதி வேசத்தைப் பார்த்து பாராட்டியிருக்காங்க... நடிக்கவான்னு கூப்பிட்டிருக்காங்க. எனக்கென்னவோ டைரக்‌ஷன்தான்... அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கன்!’’ ‘‘செரி... செரி... பெரிய கனவு தான்...’’ ‘‘சிங்கப்பூர் சிராங்கூன் தெருவிலே பாரதி வேஷம் போட்டுட்டு நான் நடந்து போகணும்...’’ ‘‘செரிடா... உடம்பைப் பார்த்துக்க.

நான் அங்க போனன்னா குறும்படம் எடுக்கறது கூட சுலபம். கேமிரா கெடைக்கும். ஃபிரியா நடிக்க ஆள் இருப்பாங்க. லிட்டில் இந்தியாவில நீ பாரதியா நடமாடுவே...’’ அந்தக் கனவு சுப்பையாவிற்குள்ளும் இருந்தது. இந்த வருடம் பாரதி பிறந்த நாளில் ஒரு நாள் முழுக்க பாரதி வேடத்துடன் இருக்கவேண்டும் என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டான். அது சுலபமாக நிறைவேறிவிடும்.

“ஆமா. பாரதியார் மாட்டுக்கறி சாப்புட்டிருப்பாரா?’’ “தெரியலே... ஆனா, புத்தர் பன்னிக்கறி சாப்புட்டதுனால தான் வயித்தால போயி செத்ததா சொல்வாங்க... கலையரசனக்  கேட்டா சொல்வார்...’’ மாட்டுக்கறி சாப்பிடும் போராட்ட நாளின் அதிகாலையில் கலையரசன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கலையரசனின் அம்மா பக்திமயமானவள். அவருக்கு கலையரசன் நடவடிக்கைகள் பிடிக்காமல்தான் இருந்தன. “வாயிலே வயித்திலே போயி செத்திருந்தாலும் வெசனம் இருக்காது. பன்னிக்கறி கூறு போட்டாமாதிரி கெடக்குறானே...’’ என்றாள். பிணம் வீதியில் கிடக்கப் போராட்டம் தொடர்ந்தது பிறரால். போராட்டத்தின் போது பேசியவர்கள் கலையரசனின் அம்மாவின் அபிப்ராயத்திற்கு பதில் சொன்னார்கள். கலையரசனின் அம்மா காது கேட்கும் திறனை இழந்து பதினோரு ஆண்டுகள் ஆகியிருந்தன.



பேலன்ஸ் செய்யும் நாய்கள்!

டெல்லியின் விகாஸ் மார்க்கில் இரண்டு நாய்களை பின் சீட்டிலும் ஒரு நாயை முன்னேயும் வைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் சர்தார்ஜி பெருசு ஒன்று சீறிப்பாயும் வீடியோதான் இன்று மெர்சல் வைரல். ஒருதுளி கூட கால் தவறாமல் பயணிக்கும் நாயின் துணிச்சல் அளிப்பது செம பீதி!

ப்ரூஸ்லீ போலீஸ்!

கரப்பான் பூச்சிக்கெல்லாம் பிரேக் டான்ஸ் ஆடி பீதியானால் எப்படி இன்டர்நேஷனல் போலீஸ் ஆவதாம்? ஃபேஸ்புக் வீடியோவில் ஆமையைப் பிடித்து பெட்டிக்குள் போட முயற்சித்து போலீஸ் ஒருவர் பீதியாகி ஆடிய கராத்தே கபடிதான் இணையத்தில் அமேசிங் வைரல். 13 மில்லியன் பேர் இதனை ரசித்துள்ளனர். காமெடி துரை சிங்கம்!

ஒரே வாரத்தில் ரெண்டு லாட்டரி!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன் ஏஜ் லேடி ரோஸா டோமிங்யூஸ், அரிசோனா போகும் வழியில் வாங்கிய லாட்டரிக்கு 5 லட்சம் டாலர்கள் ஜெயித்தது அதிர்ஷ்டம் என்றால், க்ரீன்ஃபீல்டில் வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா? 1 லட்சம் டாலர்கள்! கரன்சி வேட்டை!

பாட்டியின் பரவச டான்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸின் கான்சாஸ் நகரில் லாஸ் ஏஞ்சல்ஸ், கான்சாஸ் சிட்டி என இரு டீம்களுக்குமான பரபர பேஸ்பால் போட்டி. மேட்ச் பரவசத்தில் எழுந்த பாட்டி போட்ட குத்து செம மாஸாகி அனைவரும் ரசிக்க, திடீரென டி ஷர்ட்டை கழற்றிப்போட்டு உள்ளாடையோடு ஆடத் தொடங்கினார் பாட்டி. மெகா ஸ்க்ரீனில் டான்ஸ் ஒளிபரப்பாக, 42,225 ஆடியன்ஸ் நிறைந்த மைதானமே சிரித்துவிட்டது.

மிளகாய் தந்த இளமை!

அமெரிக்காவின் டெக்‌சாஸைச் சேர்ந்த மரியா லோபஸ் தன் பர்த்டேவை வீட்டருகே இருந்த கஃபேயில் கொண்டாடினார். வயது ஜஸ்ட் 110தான். எப்படி? பர்கர், பன், பட்டர்பிஸ்கட் என அனைத்துக்கும் சூடான மிளகாய் சாஸ், பெப்பர் மட்டும் தடவி ஸ்பைஸியாக லபக்குவதுதான காரணம் என்பது மகள் ரோஸ்மேரி வாக்கு.