ஜாக்கெட்டுக்குள்ள என்ன இருக்குனுதான் பலபேர் சினிமா எடுத்துட்டு இருக்கான்!



கொதிக்கிறார் வேலுபிரபாகரன்

-மை.பாரதிராஜா

சிலரிடம் பேட்டி கண்டால் பத்து பதினைந்து பக்கத்துக்குக் கூட எழுதிக் குவித்துவிடலாம். ஆனால், ஒரேயொரு தலைப்பு வைப்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். வேறு சிலர் இதற்கு நேர் எதிர். முழுப் பேட்டியுமே தலைப்பாக கொதிக்கும். இயக்குநர் வேலுபிரபாகரன் இதில் இரண்டாவது ரகம். தந்தை பெரியாரின் கொள்கைகளில் பிடிப்புள்ளவர் என்பதால் எப்போதும் மனதில் பட்டதை பளிச்சென்று கொட்டி விடுவார்.

‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தை எழுதி, இயக்கி முடித்துவிட்டு ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம். ‘‘நான் திடீர் திடீர்னு காணாமப் போக காரணங்கள் இருக்கு. முற்போக்கு கருத்தாளர்கள்னு சொல்றாங்களே... அந்த மாதிரி ஆட்களால நான் முடக்கப்படறேன். ‘புரட்சிக்காரன்’ படத்தை தணிக்கை செய்யவே ஆறு மாசம் ஆச்சு.

80 துண்டுகளா அதை வெட்டி கைல கொடுத்தாங்க. ‘காதல் அரங்கம்’ ரெண்டு வருஷம் சென்சாரால தடை செய்யப்பட்டது. நேர்மையான ஆட்களை நான் சினிமாவுல தெரிஞ்சு வைச்சுக்கலை. பிஸினஸ் பத்தின அவேர்னஸ் இல்லை. ‘காதல் அரங்கம்’ படத்தை வாங்கினவர் ஒரு அக்ரீமென்ட் அடிச்சு என் கையெழுத்தை வாங்கினார்.

ஐம்பது லட்சத்துக்கு வாங்கிக்கறதா அக்ரீமென்ட் போட்டுட்டு, முப்பது லட்சத்தை கைல கொடுத்தாங்க. மீதியை படம் நல்லா ஓடினா பாதி அமவுன்ட் தர்றேன்னு சொன்னார். அந்தப் படம் நல்லா ஓடி அஞ்சு கோடி வரை வசூலாச்சு. சரி, ஒரு கோடியாவது எனக்குத் தருவாங்கனு சந்தோஷப்பட்டேன். ஆனா, வெறும் அஞ்சாயிரம் ரூபாய்க்கு அவர் ஆபீஸ்ல என்னை மூணு நாள் உட்கார வைச்சாங்க.

இப்படிப்பட்ட சமூகத்துல என்னை மாதிரி ஆட்களால எப்படி சர்வைவ் ஆக முடியும்? வேற மாநிலத்துல வாழ்ந்திருந்தா இப்படி யாரும் என்னை சீட்டிங் செய்திருக்க மாட்டாங்க...’’ மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டே பேசுகிறார் ஒளிப்பதிவாளரும் இயக்கு நருமான வேலுபிரபாகரன்.

‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’னு பகுத்தறிவு சிந்தனைகள்... விஞ்ஞானம் சார்ந்த கதைகள்னு பயணப்பட்ட நீங்க இப்ப செக்ஸ் வட்டத்துக்குள்ள சுத்த ஆரம்பிச்சிட்டீங்களே..?
உண்மைதான். ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ ரெண்டுமே ஒரு லட்சம் நாத்திகர்களை உருவாக்குச்சு. சினிமா அவ்வளவு பவர்ஃபுல் மீடியா. அது வழியா கத்துக் கொடுக்க வேண்டிய செய்திகள் நிறைய இருக்கு. ஒழுங்கான ஒரு சமூகத்தைக் கட்டமைக்க அது அவசியம். அதே நேரத்துல செக்ஸ் பத்தின விழிப்புணர்வு இங்க இல்லாததை பெரும் பிரச்னையா பாக்கறேன். இந்தியா முழுக்க தினமும் நூறு பெண்களாவது கொல்லப்படுறாங்க. Unawareness of sexதான் அதுக்கு காரணம். காதல் என்கிற பெயர்ல செக்ஸை வியாபாரமாக்கறாங்க.

‘காதல் ரொம்ப புனிதம்’ மாதிரி சொல்றப்படுற விஷயங்கள்தான் ஒருத்தனை தவறான வழில போக வைக்குது. ‘சோளி கே பீச்சே கியா ஹை...’தான். ஜாக்கெட்டுக்குள்ள என்ன இருக்குனு தான் பலபேர் சினிமாவா ஓட்டறான். மேலை நாடுகள்ல அடலசன்ட் ஏஜ்ல இருக்கிற ஆணும், பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க எளிதா அனுமதிக்கறாங்க.

உயிர் என்கிற விதையோட ஒரே வேலையே செக்ஸ்தான். இப்ப வரை இந்த உலகம் உயிர்ப்போட இருக்க அதுதான் காரணம். அடுத்த இணையைத் தேடுறதுதான் ஒரு விதையோட வேலையே! அதனால முறையான செக்ஸ் கல்வி தேவை. அப்பதான் வாழ்க்கையோட அடுத்தகட்டத்துக்கு வேலை செய்யத் தோணும்.

டீன் ஏஜ்ல படிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இங்க வாழ்க்கை முழுக்க படிச்சிட்டிருக்கோம். இதைத்தான் என் படங்கள்ல தொடர்ந்து வலுயுறுத்துறேன். உலகத்துலயே இந்தியாலதான் பெண்களை திருட்டுத்தனமா படமெடுக்கறது அதிகம்னு புள்ளிவிபரம் சொல்லுது.

செக்ஸ் கல்வி தேவை என்கிற விஷயத்தைத்தான் என்னுடைய அனுபவங்கள், என் நண்பர்களிடம் பார்த்த விஷயங்களைக் கலந்து ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’யா உருவாக்கியிருக்கேன். எல்லாருமே புதுமுகங்கள். பாண்டிச்சேரிய சேர்ந்த பிரெஞ்சு சிட்டிசனும் டான்சருமான ரகுநாத் மேனட், பொன்சுவாதினு எல்லாருமே பிரமாதமா நடிச்சிருக்காங்க. இளையராஜா சார் இசையமைச்சிருக்கார்.

என்ன சொல்றார் இளையராஜா?
என்மேல அளவுகடந்த அன்பும் அக்கறையும் உள்ளவர்னா அது ராஜா  சார்தான். அவரோட உண்மையான பக்கம் இன்னும் வெளில வரலைனு சொல்வேன். குழந்தைத்தனம் மிக்கவர். நேர்மையும் அதிகம். தன்னை சந்திக்க வர்றவங்ககிட்டயும் இதே நேர்மையும் குழந்தைத் தனமும் எதிர்பார்ப்பார்.

‘அழகா கதை எழுதுற... அருமையா ஷாட் வைக்கறே... உனக்கு எல்லாமே தெரியுது... அப்புறம் எதுக்குயா இந்த மாதிரி படங்கள் எடுக்கற? பொழைக்கற வழியை பாரு. அழகா சினிமா பண்ணு. சந்தோஷமா வாழு’னு உரிமையா சொல்லுவார்.

அவர் பேச்சை இனியாவது கேட்பீங்களா?
முயற்சி பண்றேன். நான் செக்ஸ் பட இயக்குநர் இல்ல. ஒரு விதத்துல இங்க வர்ற எல்லா படங்களுமே செக்ஸ் படம்தான். பயங்கரமான காரமும், உப்பும், புளியும் கலந்த உணவையே சினிமாவா எடுத்து பழக்கப்படுத்திட்டாங்க. வேற மாதிரியான சாலட்டை கொடுத்து சாப்பிடச் சொன்னா நம்மாளுங்க சாப்பிடவே மாட்டான். அந்தளவுக்கு சினிமாவை மோசமா நாம சிதைச்சிட்டிருக்கோம்.

இப்படி சிதைக்கப்பட்ட ஒரு மீடியாலதான் நல்ல விஷயத்தை சொல்ல முயற்சி பண்ணிட்டிருக்கேன். கெடுக்கப்பட்ட ஒரு மீடியால நானும் படம் பண்ணும்போது ரொம்ப லைட்டாவோ வேற மாதிரியோ சொல்ல முடியாது. இங்க உள்ள அடிப்படையை வச்சுதான் நானும் பண்ண முடியும். ஆபாசத்தை நானும் திணிக்கறேங்கறதை ஏத்துக்கறேன்.

99% படங்களோட பாடல்காட்சிகள்ல பெண்களோட உடலைத்தான் காட்டறாங்க. ஒரு வினோதம் பாருங்க... இங்க செக்ஸை பாடலா காட்டினா கண்டுக்காம விட்டுடுவாங்க. விஜய், அஜித்தே நடிச்சாலும் குத்துப்பாட்டு அவசியம். எனக்கே கூட ‘செக்ஸ் பட டைரக்டர்’னு முத்திரை குத்தி வைச்சிருக்காங்க. மூன்றாம் தர நடிகை கூட என் படத்துல நடிக்க மறுக்கறாங்க.

நான் இயக்கின பத்து படங்கள்ல ஒன்பது ஹிட்டு. வேற எந்த இயக்குநருக்கும் இப்படியொரு பெருமை கிடையாது. என் படம்னா தைரியமா தியேட்டருக்கு வர்றாங்க. இதுக்கு முன்னாடி நான் இயக்கின ‘காதல் அரங்கம்’ பார்க்க அவ்வளவு பேர் தியேட்டருக்கு வந்தாங்க. சந்தோஷம்தான். கோடிக்கணக்குல வசூலாச்சு.

ஆனா, கடைசில எல்லாருமே அதை செக்ஸ் படம்னு சொன்னதுல எனக்கு ரொம்பவே வருத்தம். இப்பக்கூட ஃபேஸ்புக்ல என்னை ‘பிட்டு படம் எடுக்கறவன்’னு சொல்றதா கேள்விப்பட்டேன். அவங்க லெவல் அவ்வளவுதான். அதுக்காக ஃபீல் ஆகலை. அவங்களையும் என் வழிக்கு கொண்டு வர்ற வரைக்கும் அவங்க வழிக்கு நான் போய்த்தான் ஆகவேண்டியிருக்கு!

ஹீரோயினை எப்படி கண்டுபிடிக்கறீங்க..?
அதை ஏன் கேட்கறீங்க... விஜய், அஜித்தோட பாட்டுப்பாடி ஆடணும் இல்லைனா குறைஞ்சபட்சம் விஜய் சேதுபதியோட டான்ஸ் ஆடணும்னு நினைச்சுட்டிருக்காங்க. மத்தபடி பேசி, நடிக்க யாரும் முன்வர்றதில்ல. அந்தளவுக்கு யாரும் முறையா எஜுகேட் ஆகலை. சில ஹீரோயின்கள் வெளிப்படையா, ‘முப்பது நாட்கள் ஷூட்டிங் நடக்குதா? அந்த எல்லா நாட்களும் உங்களை அட்ஜஸ் பண்றேன்.

ஆனா, என் முந்தானை விலகாம படம் எடுங்க. வெளில எனக்குனு ஒரு இமேஜ் இருக்கு’னு சொல்றாங்க. ஏன் சார் என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? அது மாதிரி எல்லாம் எங்களுக்கு பழக்கமில்ல. ஸ்கிரீன்ல என்ன வரணுமோ... கதையும் காட்சியும் எதை கேட்குதோ... அதை மட்டும்தான் வாங்கிக்க நினைக்கறோம். இதுக்கு எந்த நடிகையுமே சம்மதிக்கறதில்லை.

இன்னிக்கு நிறைய நடிகைகளோட நிர்வாணப் படங்கள் சமூக வலைத் தளங்கள்ல வந்துட்டிருக்கு. இதுக்குக் காரணம் சோஷியல் அவேர்னஸ் இல்லாததுதான். அதனாலதான் ஹீரோயின்களுக்கு வேலுபிரபாகரன் யாருன்னு தெரியலை. ஆனா, ஒரு விஷயம். இன்னும் அஞ்சு வருஷத்துல எல்லா ஹீரோயின்களும் டாப்லெஸ்ஸா நடிப்பாங்க. பார்த்துக்கிட்டே இருங்க.

இயக்குநர் சங்கத்துல ஏன் இன்னும் உறுப்பினரா ஆகாம இருக்கீங்க?
சேர்த்துக்கவே மாட்டேங்கறாங்க சார். நூறு முறை முயற்சி பண்ணிட்டேன். ரெண்டு லட்சம் கட்டுங்கறாங்க... மூணு லட்சம் கொடுனு சொல்றாங்க. ‘சந்தா கட்ட வேண்டியிருக்கும்’னு ஒருத்தர் சொல்றார். இன்னொருத்தர், ‘உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு..? இனிமே மெம்பரா நீங்க ஏன் சேரணும்னு விரும்புறீங்க’னு கேட்கறார்.

சினிமாவே தெரியாதவங்க சுலபத்துல உறுப்பினரா ஆகிடறாங்க. சந்தா கட்டினா போதும். ‘நீயும் உறுப்பினர். உனக்கு வேண்டியதை செய்யுறேன்’னு சொல்றாங்க. எவ்வளவு மோசமான நிலைல திரையுலகம் இருக்கு பாருங்க! என்னை மாதிரி ஒருத்தனை மெம்பரா வைச்சுக்க வேண்டியது அவங்க கடமை. சினிமாகாரங்களோட மரியாதையை ஓரளவுக்காவது காப்பாத்தறது நான்தான்.

சினிமா வழியா இந்த சமூகத்துக்கு நல்லதுதான் சொல்றேன். ஆனா, என்னை உறுப்பினரா சேர்த்துக்க மாட்டேன்னு சொல்றாங்க. அப்ப யூனியன்ல இருக்கறவங்களோட கொள்கைதான் என்ன? ஒரு இயக்குநர் மிகச்சிறந்தவனாக இருந்தாதான் தயாரிப்பாளரை அழிக்காம இருப்பான்.

வேலையே தெரியாதவன் மெம்பராகி யாரையாவது கவிழ்த்து படம் பண்ணி அப்புறம் அவர் சம்பளம் கொடுக்கலைனு யூனியன்ல பஞ்சாயத்தை கூட்டறான். புதுசா வர்ற இயக்குநர்களுக்கு சினிமா பத்தி கத்துக் கொடுக்கணும். இல்லைன்னா புத்தி சொல்லி அனுப்பணும். அப்படியும் இல்லையா... பொழப்புக்கு வேற வழியைக் காட்டணும். இதான் நல்ல சங்கத்துக்கு அழகு!