கவிதைக்காரர்கள் வீதி
எங்கோ பெய்த மழையை என் ஜன்னலில் விசிறிச் செல்கிறது ஒரு சின்ன குருவி. - எம்.ஸ்டாலின் சரவணன், கரம்பக்குடி.
 கெட்டவர்கள் அரிதாரம் பூசுவதில்லை நல்லவர்கள் முகமூடியைக் கழற்றுவதில்லை. - ப.மதியழகன், மன்னார்குடி.
துரோகத்தின் வாசனை விரவிக் கிடக்கிறது பிரிவிற்கான சாளரம் கொண்டு எழுப்பப்படும் ப்ரியத்தின் கூடெங்கிலும்... - சக்தி கிரி, சிந்தம்பாளையம்மேடு.
தட்டாம்பூச்சி தூக்கிச் செல்லும் இரையின் சுமை கால்களில் மட்டுமல்ல சிறகுகளிலும் இருக்கிறது குழந்தைகள் தூக்கிச் செல்லும் புத்தகச் சுமை தோள்களில் மட்டுமல்ல மனங்களிலும் இருக்கிறது - நாகேந்திர பாரதி, சென்னை-24.
மழைக்குப் பிறகான பொழுதில் மரத்தினடியில் நின்றிருந்த என்மீது மரம் தேக்கி வைத்திருந்த நீரை சிறுமழையெனப் பொழிந்தது கிளையொன்றில் வந்தமர்ந்த பறவை. பறவைகளாலும் மழை பொழியலாம்! - கீர்த்தி, சென்னை-99.
|