கவிதைக்காரர்கள் வீதி
தான் விரும்பிய அசைவ விருந்துக்கு அழைக்காத கோபமாகவும் இருக்கலாம், அமாவாசை சோறு வைத்து வெகுநேரமாய் அழைத்தும் வராத காகத்துக்கு! - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
மரத்தின் கடைசி இலை உதிரும்போதே சருகாகத்தான் இருந்தது! - ச.துரைமுருகன், மண்டபம்.
கொடுக்காப் புளி மர நிழலில் கோலிக் குண்டு விளையாட்டு வேப்ப மர நிழலில் வெட்டுக் கிட்டி விளையாட்டு அரச மர நிழலில் ஆடு புலி விளையாட்டு எல்லா மரங்களும் எரிபொருளாய் ஆனபின் கிராமத்தில் எப்போதும் வெக்கை - நாகேந்திர பாரதி, சென்னை-24.
உடைந்த புல்லாங்குழலில் வாசிக்க யாருமற்று வெளியே அலைந்துகொண்டிருக்கின்றது காற்று. - ந.கன்னியக்குமார், நல்லரசன்பேட்டை.
தரையை வந்து தொட்ட கோடை மழைத்துளி சூடு தாங்காமல் துடித்துப் போனது. - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தலை வாரி விடுகையில் அம்மாவை நினைவுபடுத்துகிறார் சலூன் கடைக்காரர் - சுகுமார் சூர்யா, திருவண்ணாமலை.
|