குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்-மாசி மகம் 6-3-2023



அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா. மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா.

பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார். படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது. ஏனெனில் பிரளய கல்பத்தில் தானும் கரைந்து விடுவோமோ எனும் எண்ணம் அவரிடத்தில் தீவிரமாகிக் கிடந்தது.

சகலத்தில் உறைந்திருக்கும் சர்வேஸ்வரனான ஈசனிடத்தில் இவ்விஷயத்தை உரைக்கச் சென்றார், பிரம்மா. கயிலை மல்லிகை போன்ற பனித்துகளால் போர்த்தியிருந்தது. ஈசனின் தட்பமான அருட்கண்கள் அண்ட பேரண்டத்தை அணைந்தபடி இருந்தது. வேத சொரூபனான பிரம்மா சிவத்தின் திருவடியில்  பணிந்தெழுந்தார். மெல்ல உதடு பிரித்து பேச ஆரம்பித்தார்.
‘‘பிரளயப் பேரழிவில் சிருஷ்டியின் பீஜங்கள் அழியுமோ எனும் கவலை என் நெஞ்சத்தை தணலாக எரிக்கிறது.

மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டி தொடர காத்தருள வேண்டும்’’. ஈசனின் தாள் பணிந்து திருவடியை தம் கண்ணீரால் நனைத்தார். சிவனும் அந்நீரில் கரைந்தார். கருணை மயமானார். ஏனெனில் சிருஷ்டி இருக்குமிடத்தில் பிரம்மனும் ஜீவித்திருப்பார். பிரளயத்தின்போது சிருஷ்டியின் மூலத்தோடு தானும் கரையாது இருக்க வேண்டுமே என உள்ளம் நெகிழ்ந்து கேட்டார். ஈசனின் பூப்பாதத்தில் தன் நாற் சிரசையும் பணிந்தேற்றும்போது ஈசன் பூலோகத்தின் பரத கண்டம் எனப்படும் பாரதத்தின் ஒரு கோணத்தின் மீது தன் திருப்பார்வையை வீசினார்.

சிவம் சுழன்று சூறாவளியாக அந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்துக் கொண்டது. அத்தலத்தினூடே ரகசியமாக அருவமான அமுதத்தின் சாரல் அலையாக எழுந்தது. சிவச் சக்தி கொப்பளித்துப் பெருகத் தொடங்கியது. சிவன் இப்போது பிரம்மனைப் பார்த்தார்.

பிரம்மா கலங்கிய கண்களினூடே மகாதேவனை பார்த்தார். பிரம்மனின் வேத சிரசுகள் மெல்ல அதிர்ந்தன. ஈசனும் அதில் மயங்கினார். பிரம்மனைப் பார்த்து ‘‘கவலை கொள்ளாதே நான்முகா. யாம் உறையும் புண்ணிய தலங்களிலிருந்து திருமண் கொணர்ந்து, அமுதத்தையும், புனித தீர்த்தமும் கலந்து அழியாத கும்பம் எனும் குடத்தை செய். அதன் மையத்தின் சிருஷ்டியின் பீஜங்களை வைத்து மூடு.

உன்னுடைய நான்முகத்தினின்றும் எதிரொலித்துத் தெறிக்கும் வேத வரிகளை அதில் அலை அலையாக அனுப்பு. ஆகமங்களை ஆனந்தமாக கலந்து, புராண இதிகாசங்களை நாற்புறமும் வைத்து, இன்னும் நிறைய அமுதம் பெய்து மாவிலை சொருகி, தேங்காய் வைத்து தர்ப்பையை படரவிட்டு, பூணூலைச் சார்த்தி, வில்வ தளங்களால் அர்ச்சித்து உறியிலேற்று.

மேருவின் மேல் பகுதியில் சாயாமல் தரித்திடு. ஆழி ஊழிக்காலம் அசைந்து வரும்போது மேருவின் மேலிருக்கும் கும்பமும் அசையும். மெல்ல நகர்ந்து பாரத வர்ஷத்தின் தென் திசையில் சென்று தங்கும். அங்கு சென்று கும்பத்தினின்று பெருகும் அமுத கலையான பீஜங்களை உமக்குள் ஏந்தி சிருஷ்டியை தொடரலாம்’’ என்றார், சிவன். அதனைக் கேட்ட பிரம்மனின் திருமுகம் சிவப் பிரகாசமாக ஜொலித்தது.

பிரம்மா யுகம் தோறும் நிலைபெறப்போகும் அரும்பெரும் விஷயமான கும்பத்தை செய்தார். பிரளயப் பேரலை ஹா... என வாய் பிளந்து விண்ணுற நிமிர்ந்து வந்தது. மேரு மெல்ல அதிர்ந்தது. அமுதக் கும்பம் சிறு நாட்டியத்தின் அசைவுபோல ஒய்யாளியாக இடதும் வலதும் அசைந்தது. பேரலை பெருவாய் பிளந்து வந்தாலும் அதன்மேல் படகுபோன்று கும்பம் மிதந்து ஈசன் திருப்பார்வை பதிந்த அவ்விடத்தில் நின்றது.

அசைந்து வந்தது சுழன்று நின்றது. பம்பரமாக சுழன்ற கும்பக் கலசம் பிற்காலத்தில் திருக்கலச நல்லூர் எனும் தற்போதைய தலமான சாக்கோட்டையாக மாறியது. குடம் சில காத தூரம் சென்று தங்கியது. பிரளயங்கண்டோர் அதிசயத்தனர். அரைக் கணத்தில் ஊழி அடங்கி  ஒடுங்கியது கண்டு விழி விரித்தனர்.

ஏனெனில் சிருஷ்டி வளரும் தலத்தில் பிரளயம் மறையும். இங்கும் அதுபோன்று பிரளயத்தின் சுவடு மெல்ல மறைந்தது. காந்தத்தினால் கவரப்பட்ட இரும்புபோன்று அமுதமும், சிருஷ்டி பீஜமும் கலந்திழைந்த கும்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டார், பிரம்மா. ஒரு புறம் பிரளயத்தின் பேரிரைச்சல் அடங்க, கசிந்து வரும் அமுத வாசத்தின் இடையறாத பொழிவு அந்தப் பிரதேசத்தையே குளிர்வித்துக் கொண்டிருந்தது. கும்பத்தினுள் ஈசன் தம்மை நிறுத்திக் கொள்ள கருணையோடு தவித்தான்.   

சிவன் அத்தலத்தை அடையும் பொருட்டு ஓர் வேடரூபம் தாங்கி கணநாதர் யாவரும் பரிவாரத்தோடு தொடர்ந்தனர். உமாதேவியோடு தென் திசை நோக்கிச் செல்லுகையில் இடைமருதூர் எனும் திருவிடைமருதூருக்கு அருகில் நகர்ந்தனர்.

அமுதக் குடத்தை கண்ணுற்றனர். அருகிலிருந்த சாஸ்தாவுக்கு காட்டி கும்பத்தை ஓரம்பால் சிதைத்து அமுதத்தை நாற்புறமும் வழியச் செய் என்றனர். சாஸ்தா இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் பொருட்டு அழியா அந்த மாயக் குடத்தை குறிவைத்து பாணம் தொடுத்தார். ஆனாலும், கும்பத்தை பிளக்க முடியவில்லை. ஈசன் இப்போது முன் வந்தார். பாணாதுறை எனும் இடத்தில் இன்றும் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.   

சிவபெருமான் வேறொரு திக்கிலிருந்து பாணம் தொடுத்தார். இந்த கும்பத்திற்கு வாய் தவிர மூக்கும் இருந்தது. கமண்டலத்திற்கு இருப்பதுபோல, அது வழியாகத்தான் புனித தீர்த்தத்தை செலுத்த முடியும். அப்படிப்பட்ட மூக்கு வழியாக அமிருதம் வெளியேற வேண்டுமென்று பரமேஸ்வரன் நினைத்தார். பாணம் மூக்கை துளைத்தது. அந்த மூக்கு வழியாகத்தான் அமுதம் மலர்ந்து வெளிவந்தது.

கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. தேவாரத்தில் இத்தலத்தை குடமூக்கு என்றே அழைத்தனர். அமுதப் பெருவூற்று புகுபுகுவென பொங்கியது. அதன் வாசச் சாரல் எண்திக்கும் பரவியது. அமுதம் தனித்தனி குளமாக திரண்டன. ஒன்று மகாமக குளம் என்றும், மற்றொன்று பொற்றாமரை என்றும் அழைக்கப்பட்டன.

பிரம்மா நடக்கும் ஈச லீலைகள் கண்டு கண்ணீர் மல்க நின்றார். கும்பேஸ்வரர் ஆலயத்தைச் சொல்லும்போது அதை மட்டும் சொன்னால் போதாது. கும்பேஸ்வரர் அமரும்போது தன்னைச் சுற்றிலும் சில தலங்கள் உருவாவதற்கு காரணமானார். ஏனெனில் பூரணக் கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கிய விஷயம். பிரம்மன் அதையும் புரிந்து வைத்திருந்தான். அவைகள் என்ன ஆகின்றன என்று இமைகொட்டாது பார்த்தான். அடுத்தடுத்த ஆச்சரியங்கள் தொடந்து நிகழ்ந்தன. கும்பத்தின் வாய் விழுந்த தலமே குடவாயில் எனும் குடவாசல் ஆகும். அங்கு கோணேஸ்வரராக நிலை கொண்டார்.

கும்பத்தினின்று நழுவிச் சென்று விழுந்த பொருட்கள் ஒவ்வொன்றும் தனித் தனி லிங்க சொரூபம் பெற்றன. தேங்காய் விழுந்த அருகிலே உள்ளதுதான் இன்றைய மகாமகக் குளம். இதுவே அமுதத் தடாகம். தேங்காய் லிங்க உருபெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயிலுக்கு நாரிகேளேஸ்வரர் என்று பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள். அது மேற்கு பார்க்க இருப்பதால் அபிமுகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

மாவிலை விழுந்து இத்தலத்தின் விருட்சமாக வன்னிமரமாக மாறிற்று. அதுபோல இன்னொரு மாவிலை விழுந்த இடமும் பிரளயத்தை மீறியிருந்தது. பிரளயத்திற்கு புறம்பாக நின்றதால் இன்றும் இத்தலத்திற்கு திருப்புறம்பியம் என்று பெயர். கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பெயர். அங்கே கௌதம முனிவர் பூசித்ததால் கௌதமேச்வரர் ஆலயம் என்றே அதை வழங்குகின்றனர்.

வேடரூபம் கொண்ட மகாதேவன் இத்தலத்திலேயே தன்னொளி வீசி கருணை மயமாக அமர ஆவலுற்றார். கும்பத்தை குறுக்கி அமுதத்தை அத்தல திருமண்ணையும் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவஞ் செய்தார். ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரரானது.

பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனும் பல்வேறு திருநாமங்களோடு அருளாட்சி செய்தார். பிரம்மா மழலையொன்று மாமலையைப் பார்ப்பதுபோன்று நிகழ்ந்தவற்றை பிரம்மிப்போடு பார்த்தார். ஐயனே... என் சிவனே... என கும்ப லிங்கத்தை பூசித்தார். வேதப்பாக்களால் வேதகிரீசனை தொழுதார். வானவரும், தேவர்களும் கும்பேஸ்வரத்தை அடைந்தனர்.

கும்பேசருக்கு பிரம்மோற்சவம் நடத்தினர். எத்தனை யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர் இன்றும் பேரருள் பொழிகின்றார். புராணங்கள் பாவங்கள் நீங்கும் தலமாக காசியைக் குறிப்பிட்டு, அதைவிட ஒரு படி மேலேற்றி கும்பகோணத்தில் செய்த பாவம் கூட காசியில் கரையாது. கும்பகோண மகாமக தீர்த்தம்தான் பாவ நிவர்த்தி என்கின்றன அப்பேர்ப்பட்ட மகா கும்ப மூர்த்தி உறையும் ஆலயத்தை வலம் வருவோமா...

 சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது. கலைகளும், செல்வ வளங்களும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு படர்ந்தது கிடப்பது இத்தலத்தில்தான்.

ஆன்றோர்களும், சான்றோர்களும், பல்வேறு ரிஷிகளும் அவதரித்தது இங்குதான். அப்பேர்ப்பட்ட இத்தலத்தின் மையத்தே நெற்றியில் இட்ட திருநீற்றைப்போல், செஞ்சிவத்தின் தழல்போல கும்பேஸ்வரரின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது. நான்கு கோபுரங்களும் நான்கு வேதங்களை நினைவுபடுத்துகிறது. கோயிலின் விஸ்தீரம் மலைக்க வைக்கிறது.

கல்கல்லாக தடவித் தெரிந்து கொள்ள சில ஆண்டுகளாவது பிடிக்கும். சோழர்களுக்கு முன்பிலிருந்து நாயக்கர் காலம்வரை எத்தனை மன்னர்கள் மனமார நேசித்து உருகி உருகி இக்கோயிலைச் செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் அதை பாங்காக வெளிப்படுத்துகின்றன. மிகப் பெரிய கோயிலாதலால் உள்ளிருக்கும் உள்சுற்றுப் பிராகாரத்திலுள்ள சில சந்நதிகளையும், தெய்வத் திருவுருக்களையும் தரிசித்துவிட்டு ஆதி கும்பேஸ்வரரை அடையலாம்.

முதற்பிராகாரமாகிய மூலவர் சுற்றுப் பிராகாராத்தின் கீழ் வரிசையில் தென்பகுதியில் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்திகளும், வட பகுதியில் கால பைரவர், சுரகரேசுவரர், சாஸ்தா, கோவிந்த தீட்சிதரின் லிங்க உருவும், அவருடைய பத்தினி நாகம்மாளும் அருட்கூட்டி வீற்றிருக்கின்றனர். இதற்கு அடுத்து சந்திரன், சூரியன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

தெற்கு திசையில் சைவ சமயாச்சார்யார்கள் நால்வரும், அறுபத்து மூவரும், சப்த கன்னியர்களும் உள்ளனர். மேற்கு திசையில் விநாயகரும், தொடர்ந்து பிட்சாடனர், சுப்ரமணியர் இதையடுத்து தேஜோலிங்கம், அட்சய லிங்கம், கோடி லிங்கம் என சிவச்சக்தி சீராக பரவியிருக்கிறது. சுவாமி அம்பாளின் பள்ளியறையும், கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி எனும் வேடனாக வந்த சிவன் வில், அம்பு ஏந்தியவாறு தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இவரே இத்தலத்தின் மூர்த்தியாவார்.

உட்பிராகாரத்தின் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே மெல்லிய குடச் சாயலைக் கொண்டிருக்கிறது. காலக் கணக்குகளாக அகப்படாத மூர்த்தி நாம் உய்யும் பொருட்டு அமர்ந்திருப்பது பார்க்க நெஞ்சில் ஒரு விம்மிதம் பரவுகிறது. அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார். அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்.

உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது. எங்கு கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். சந்நதியை அடைத்துக் கொண்டு எப்போதும் ஒரு அருவமாக அமுதப் பிரவாகம் பாய்ந்தபடி இருக்கிறது. சற்று நேரம் நின்றாலே வெளியுலகத்தை மறைத்து அக உலக அமுதத்தை பீறிட்டுக் கொண்டு வரும் அற்புதச் சந்நதி அது. நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.

மங்களத்தை விருட்சம்போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப்பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன.

ஆகவே மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தை பெற்றிருக்கிறது. இங்கோ சகல சக்திகளையும் தன் திருவுருவத்திலேயே பெற்று தலையாய சக்தி பீடமாக விளங்குகிறது. இவளை தரிசித்த மாத்திரத்தில் சகல பலன்களையும் அளித்து விடுவதில் முதன்மையானவள்.  முத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயக, நாயகியைப் பற்றிய அழகான கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதியுள்ளார்கள்.

 சித்தர்களில் முதன்மையான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான். வெளிப் பிராகாரத்தில் இவர் அமர்ந்த தனிச் சந்நதியில் ஆதி விநாயகரை பிரதிஷ்டை செய்து எழுந்தருள வைத்துள்ளனர். மொத்தம் பதினான்கு தீர்த்தங்களை தன்னகத்தே கொண்ட கோயில் இது. யுகாந்திரங்கள் கடந்த தலம், பல நூறு தெய்வத் திருவுருவங்கள் பொலிந்து விளங்கும் சந்நதிகள். மாமன்னர்களால் இழைத்து இழைத்து வார்க்கப்பட்ட சிற்பங்கள், புராணங்கள் சொல்வதை தூணுக்குத் தூண் கொண்டு வந்த சிற்பிகளின் இறை பக்தி என்று மனம் இக்கோயிலை வியந்து வியந்து மாய்ந்து போகிறது.

எதைச் சொல்வது எதை விடுவது என்று உள்ளம் உவகையால் திணறுகிறது. தரிசிப்போர் பெரும்பாக்கியமுறுவர் என்பது உறுதி. அது மட்டுமல்லாது ‘‘கும்பகோணமாம் குபேரப் பட்டணமாம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. இத்தல நாதரை தரிசிக்க குபேர வாழ்வு வாழ்வர் என்பதும் திண்ணம். கும்பகோணத்திற்கு சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் என்று பல்வேறு நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கிருஷ்ணா