பொருள் பொதிந்த சடங்குகள்



வணக்கம் நலந்தானே!

இது இன்ன மதம். இது இந்த சம்பிரதாயம். இவர்கள் இந்த மரபின் அடிப்படையில் வருபவர்கள் என்பதை எல்லாம் அவரவர்கள் செய்துகொண்டு வரும் சடங்குகளை வைத்துத்தான் சொல்ல முடியும். சடங்கு என்கிற சொல் பெரும்பாலும் இங்கு கேலியாகத்தான் பார்க்கப்படுகின்றது. உண்மையில் சடங்குகளுக்குள் மதங்களின் வரலாறு இருக்கும்.

சடங்குகளுக்குள் மதத்தின் தத்துவக் குறியீடு இருக்கும். தினமும் ஒருவர் நெற்றிக்குத் திருமண்ணையோ, குங்குமத்தையோ, விபூதியையோ தரிக்கும்போது அவர் எந்த சம்பிரதாயத்தில் தன்னுடைய ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார் என்பது தெரியவரும்.

ஒரு சடங்கை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் பரவாயில்லை. அந்த மரபை அவர் அவரையும் அறியாமல் காப்பாற்றியபடி அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் சென்று கொண்டிருப்பதை பார்க்கலாம்.

அடுத்ததாக, என்றோ ஒரு நாள் தான் ஏன் இம்மாதிரி விபூதி பூசிக் கொள்கின்றோம் என்று ஆழமாக யோசிக்கும்போது தத்துவத்தை நோக்கி நகர்ந்து விடுவார். ஞான யோகத்தில் விபூதி என்பது எல்லாம் அழிந்த பிறகும் அழியாத ஆத்ம சொரூபமாக மிஞ்சி நிற்பதுதான் விபூதி என்று இன்னும் ஆழமாக அறியும்போது, விபூதியைத் தரிக்கும்போதே அந்தத் தத்துவமும் அவருள் அகக் கதவுகளைத் திறக்கும்.

எல்லோரும் இப்படி புரிந்துதான் செய்கிறார்களா என்றால் என்றோ ஒருநாள் நிச்சயம் புரியும் என்பதுதான் உண்மை. நாம் தொடர்ந்து செய்யும் காரியங்கள் நம்முள் நம்மையும் அறியாது ஒரு ஆழத்திற்குள் சென்று கொண்டேயிருக்கும். அந்தச் சடங்கு எதைக் குறிக்கின்றதோ அந்த இலக்கானது மேல் மனதிற்கு தெரிய வரும்.

அதுதான் ஜென்மாந்திரமான உபாசனை. ஒரு உபாசனையில் அந்த தெய்வமும் அந்த தெய்வத்திற்கு சாற்றக் கூடிய பூக்களும், வில்வதளங்களும் எத்தனை ஆழங்களுக்குள் செல்கின்றன என்று பாருங்கள். நீங்கள் நேரடியான வாராஹி உபாசனத்தில் பூண்டு, வெங்காயம் போட்ட மசால் வடையைத்தான் நிவேதனமாக வைக்க வேண்டும். இதுதான் உபாசனா விதி.

நீங்கள் எதை உபாசிக்கிறீர்களோ, உங்களின் இயல்புக்கு உபாசனா தெய்வம் எதுவோ அது காலக்கிரமத்தில் தெரியவரும். நீங்கள் புறக் கிரியைகளை செய்து செய்து உங்களின் சுயத்தில் உறையும் தெய்வத்தை வளர்த்தெடுப்பீர்கள். நீங்கள் புறத்தே செய்யும் முத்திரைகளும், சிட்டிகை போன்ற சப்தங்களும் எதிரே உள்ள பிரதிமைக்கு என்றுமட்டும் எண்ண வேண்டாம். உள்ளுக்குள் இருக்கும் சக்திக்கும் சேர்த்துத்தான் அடக்கம்.

நீங்கள் சில உபாசகர்களை பாருங்கள் முத்திரை போட்டுத்தான் பூஜையை ஆரம்பிப்பார்கள். அதுபோல கோயிலிலுள்ள தெய்வங்களின் கைகளையும் விரல்களையும் கவனியுங்கள். அந்த முத்திரையே அது எப்பேர்ப்பட்ட பெரும் நிலையை குறிக்கின்றது என்பதைக் காட்டும். இந்து மதத்தில் நிறைய சடங்குகள் மிகவும் தொன்மையான காலத்திலிருந்து வருவதாகும்.எல்லா சடங்குகளும் இப்படித்தானா?

இல்லை. அது உங்களின் ஆராயும் ஆழத் திறனை பொறுத்தது. பல சடங்குகள் காலத்தில் தானாக அதன் செறிவின்மை காரணமாக உதிர்ந்துவிடும். அதனால், ஒரு சடங்கை ஏற்றுக் கொள்வதற்கும், விட்டு விடுவதற்கும் தனி மனிதருக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்கு முன்பு சடங்குகளை முன் முடிவுகளோடு எதிர்க்காதீர்கள். மெல்ல உற்று நோக்கி அது என்ன சொல்ல வருகின்றது என்று பாருங்கள். அதன் ஊற்றுக் கண் நோக்கி நகருங்கள். அப்போது சடங்குகளுக்குள் ஆயிரம் வருடத்து சரித்திரம் சுருள் சுருளாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பதும் தெரியும்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)