மகாசக்தியின் மகத்துவமிக்க நான்கு வடிவங்கள்



அம்பிகைசதுராத்மாவாக இருக்கிறாள். ஆத்மோபதிஷத்தில் ஆத்மா,அந்தராத்மா, ஞானத்மா, பரமாத்மா என்ற நான்கு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளேதேவி. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட இவளைநான்கு முக தேவியாக சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். அன்னை ஸாம தான, பேத, தண்டம் என்கிற நான்கு வித உபாய வடிவாக உள்ளவள். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்ற நான்கு வாக்காக அம்பிகை விளங்குகிறாள். நாம் பேசுவதற்கு அம்பிகையின்அருள்இல்லையேல் ஊமைதான்.

மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்குஅருள்புரியும் போது நான்கு வடிவங்களைக் கொண்டு அருள் புரிகின்றது. இதற்குச் சதுர்த்த வடிவங்கள் என்று பெயர். சைவர்கள் ஆதிசிவமானது உயிர்கள் உய்யும் பொருட்டு சிவபெருமான், உமை, விநாயகர், முருகன் என்ற நாற்பொருளாக வெளிப்பட்டு அருள் பாலிக்கின்றது என்பர்.

வைணவர்கள் மகாவிஷ்ணுவின் நான்கு வடிவங்களாக வாசுதேவன், அச்சுதன், மாதவன், கேசவன் என்ற வடிவங்களைக் கூறுவர். சூரியனைத் தலைவனாகக் கொண்டவர்கள் பாஸ்கரன், பானுமூர்த்தி, ஆதித்யன், ரவி என்கின்ற நான்கு திருவடிவங்களைத் தாங்கி, வந்து மகாசூரியன் அருள்பாலிக்கின்றான் என்பர்.

இதுபோன்ற சிவசக்தியும்நான்கு வகை வடிவமாகத் திருவுருவம் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். சிவபெருமானின் அருளே, பெண் வடிவங்கொண்டு வெளிப்பட்டு பராசக்தியாக அருள்கின்றாள்.பராசக்தி சிவபெருமானின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் போது ‘பவானி’ என்று பெயர்பெறுகிறாள்.

அச்சக்தியே ஆண்வேடம் தாங்குகையில் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறாள். அதுவே பெண் உருவம் கொள்ளும்போது ‘வைஷ்ணவி’ என்று அழைக்கப்படுகிறாள். அவளேஅசுரர்கள் மீது கோபங்கொண்டு விளங்குகையில் ‘காளி’ என்றழைக்கப்படுகிறாள். சமர்களத்தில் போரிட்டு வெற்றிச் செல்வியாகத் திகழ்கையில் ‘துர்கை’ என்றழைக்கப்படுகிறார். இந்த நான்குவடிவங்களே தேவியின் சதுர்த்த வடிவங்களாகும்.

பவானி

தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கும் ஸ்ரீபெரிய பாளையத்தம்மன் ‘ஸ்ரீபவானி’ என்றே அழைக்கப்படுகிறாள்.‘பவானி’ என்றால் ‘உயிர் கொடுப்பவள்’ என்றுபொருள். கருணா மூர்த்தியாய் விளங்கும் ஸ்ரீபவானி, மராட்டியர்களின்குல தெய்வமாய் வழிபடப்படுபவள். மகாராஷ்டிராவில் உள்ள ‘துல்ஜாபூரில்’ அன்னை பவானி திருக்கோயில் கொண்டு விளங்குகிறாள். மராட்டிய மன்னன்‘சிவாஜி’யின் குலதெய்வமும் இவளே, இவளை வணங்காமல் மாவீரன் சிவாஜி எந்தவொரு வேலையையும் துவங்குவதில்லை. 12ம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட இத்திருக்கோயிலில் தன் எட்டு கரங்களிலும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு அழகிய பளிங்குச்சிலையில் வீற்றிருக்கிறாள் அன்னை பவானி.

 மராட்டியத்தில் நான்கு சக்தி பீடங்கள் உள்ளன. அவை துல்ஜாபூரில் உள்ள பவானி ஆலயம், கொல்ஹாபூரில் உள்ள மகாலட்சுமி ஆலயம், மாகூரில் உள்ள மகாமாயா ரேணுகாவின் ஆலயம் மற்றும் சப்த சிருங்கியில் உள்ள ஜகதாம்பா ஆலயம் ஆகும்.துல்ஜாபூரில் உள்ள ஸ்ரீபவானி ஆலயம் ஷோலாப்பூருக்கு அருகில் யமுனாசலா என்ற குன்றில் அமைந்துள்ளது. படிகளில் ஏறி கோயிலை அடைந்ததும் ‘கல்லோலா’ என்ற பெரிய திருக்குளத்தைக் காணலாம். இத்திருக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப்பட்டதென்றும், பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, எல்லா புண்ணிய நதிகளும், ‘கல்லோலா’ தீர்த்தத்தில் வசிப்பதாகவும் இத்தல புராணம் கூறுகிறது.

இந்ததீர்த்தத்தில் ஸ்நானம் செய்யாமல், கண்ணால் பார்த்தாலேயே பாவங்கள் தீரும் என்ற பெருமையுடன் பேசப்படுகிறது.இங்குள்ள மற்றொரு தீர்த்தம் கோமுக் தீர்த்தமாகும். இதில் கங்கையே வசிக்கிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இவைகளைத் தாண்டி உள்ளே சென்றால் ஸ்ரீசித்தேஷ்வரின் சந்நதியை அடையலாம். இங்குள்ள நடு மண்டபத்தின் அருகில் த்வரிதா, துரஜா, துலஜா, அம்பா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பவானி தமது வலது காலை மஹிஷனின் தலை மீது வைத்துக் கொண்டு சிம்ம வாகனத்தில் அமர்ந்து கொண்டு தன் எட்டு கரங்களிலும் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உடல் ஆபரணங்களை அணிந்து கொண்டு, பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள். இந்த சிலை ‘சுயம்புவாக’ கருதப்படுகிறது.

இந்த தேவியின் சக்தியை பறைசாற்றும் சரித்திர நிகழ்வு ஒன்று உண்டு. முகாலாய மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் சிவாஜியை எதிர்க்க, முகலாய மன்னன் அப்ஸல்கான் மராட்டித்தின் மீது படையெடுத்தான். சிவாஜியை வெற்றி கொள்ள முடியாமல் போன அவன், சிவாஜியின் குல தெய்வமான துல்ஜாபூரில் நுழைந்து கோயிலை சிதைத்தான். (பந்தபூர், பாலி மற்றும் அவுந் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களையும் சிதைத்ததாகவும் கூறுவர்). அன்றிரவு அவன் அசரீரி ஒன்றைக் கேட்டான். இன்னும் மூன்று வாரங்களில் அவன் இறந்து விடுவான் என்பது தான் அது.அசரீரி ஒலித்த இரண்டு வாரங்களிலேயே ‘சிவாஜியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருவேன்’ என சூளுரைத்த
அப்ஸல்கான், கொலையுண்டான்.

சிவாஜியின் குருவான ஸ்வாமி ராமதாசரும், ஸ்ரீ பவானியின் பக்தராவார். சிவாஜிக்குப் பின் அரசாண்ட பீஷ்வாக்களும் துல்ஜாபூர் பவானியை தங்கள் குல தெய்வமாகக் கொண்டனர். அன்னை பவானி ஆலயத்திற்காக நிலங்களையும், பொருட்களையும் தானமாக வழங்கினர். இவர்களைப் பின்பற்றி மராட்டியர் பலருக்கும் அன்னை குலதெய்வமானாள்.

பவானி திருக்கோயிலின் வடகிழக்கில், ஸ்ரீமாதங்கி கோயில் கொண்டுள்ளாள். மதங்கன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீ பவானி, மாதங்கியாக இங்கு விளங்குகிறாள்.கோவைக்கருகில் உள்ள பவானியில், பவானி ஆறும் காவிரியும், சங்கமிக்கும் இடத்தில் ஸ்ரீ சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அன்னைபவானி, வேத நாயகியாய் கொலுவீற்றிருக்கிறாள்.
 
வைஷ்ணவி தேவி

வைஷ்ணவி விஷ்ணு அம்சமுள்ளவள். மகாவிஷ்ணுவின் சகோதரி. இதனாலேயே இவளுக்கு நாராயணி என்ற பெயரும் உண்டு.
தேவியைப் பற்றிய குறிப்புகள் மார்க்கண்டேய புராணத்திலும், வராஹ புராணத்திலும், துர்கா சப்தசதியிலும் காணப்படுகிறது. தேவர்களுக்கு அச்சத்தைத் தந்த அரக்கர்களை அழித்த மஹா சக்தியாகேவே அவளை எங்கும் வர்ணித்திருக்கிறார்கள். காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி ஆலயம் ஒரு குகைக் கோயில், இங்கு மூன்று தேவிகள் மஹாகாளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி கோயில் கொண்டுள்ளாள்.

இத்தேவியின் ஆலயம் செல்ல மலை உச்சிக்கு ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கு செல்லும் பக்தர்கள் எழுப்பும் ‘‘ஜெய்மாதா’’ என்ற கோஷம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். வைஷ்ணவி தேவியை குகைக்குள் சென்று தரிசிக்க நீண்ட மக்கள் வரிசை காத்திருக்கும். இங்குள்ள தடாகத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த வைஷ்ணவிதேவி ஸ்ரீ ராமபிரானுடைய ஆணையின்படி இங்கே கல்கி அவதாரத்தைத் தரிசிப்பதற்காகவே தவம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரத்னாஸாகர் என்பவருக்கு பெண்ணாகப் பிறந்த வைஷ்ணவி தென்னிந்தியாவில் போய் வசிக்க விரும்பினாள். வனவாசம் செய்த ஸ்ரீராமனை அங்கு சந்தித்தாள். ராமனுடனேயே இருக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தான். ‘‘சீதையை மீட்டு வரச்சென்று கொண்டிருக்கிறேன். திரும்பும்போது உன் குடிசை வழியாகச் செல்வேன். அப்போதும் நீ என்னை யாரென்று தெரிந்து கொண்டால் என்னுடனேயே தங்கலாம்’’ என்றார் ஸ்ரீராமர். சீதையை மீட்டுக்கொண்டு திரும்பிய ஸ்ரீராமர் கிழவர் வேஷத்தில் வைஷ்ணவியின் குடிசைப் பக்கம் வந்தார். அந்த மாறிய கோலத்தில் வைஷ்ணவியால் அவரை யாரென்று அறியமுடியவில்லை. பிறகு வந்திருப்பவர் ராமர் என்றறிந்து தன் அறியாமைக்கு வருந்தினாள்.

கலியுகத்தில் தான் கல்கி அவதாரம் எடுக்கும்போது அவளைத் தன் சக்தியாக ஏற்பதாக எராமர் வாக்களித்தார். ‘‘வட இந்தியாவில் மூன்று சிகரங்களையுடைய திரிகூட மலையில் உள்ள குகையில் மூன்று மஹாசக்திகள் இருக்கிறார்கள். அங்கு போய் தவம் செய்,’’ என்றார் ஸ்ரீராமர். அதற்கேற்ப தேவி இங்கு வந்து தவம் செய்கிறாள்.

 காஷ்மீர் வரை சென்று அன்னையை தரிசிக்க முடியாதவர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள வைஷ்ணவியை தரிசித்து பயனடையலாம். இங்கு குகைக் கோயிலல்ல. இந்த அன்னை கையில் வைத்துள்ள ஜபமணி மாலை அவள் தவத்தை மேற்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. சிலை, சிற்பம் முதலியவற்றை சேகரிப்பதில் அதிக நாட்டமுள்ளவர் ஸ்ரீபார்த்தசாரதி. யாரோ ஒருவன் காஷ்மீரிலிருந்து இந்த சிலையைக் கொண்டு வருவதாகக்கூறி அவரிடம் விற்றுச் சென்றான்.

இவர் தன் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் வைத்திருந்தார். வள்ளிமலை சுவாமிகள் அடிக்கடி இவர்வீட்டிற்கு வருபவர். இந்தச் சிலைமேல் தன் மனதைப் பறிகொடுத்து தான் உபாசித்து வரும் பொங்கியம்மனை இதில் ஆவாஹனம் செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் நைவேத்யம் செய்ய ஏற்பாடு செய்தார் இந்த சாது. பார்த்தசாரதி அம்பிகைக்கு ஒரு ஆலயத்தை அம்பத்தூரில் ஏற்படுத்தி அங்கு பிரதிஷ்டை செய்து அனைவரும் அன்னையை வணங்கி வழிபட செய்தார்.

 வைஷ்ணவி கருட வாகனம் கொண்டவள். பசுமை நிறத்தாள். ஆறு கரங்களை உடையவள். துளசி, மாலை ஆழி, சங்கு, அபயம் ஏந்தி விளங்குபவள். இந்த தேவியின் உபாசனை மனதில் அமைதியையும், வாழ்வில் ஆனந்தத்தையும் தருவதாகும்.

காளிதேவி

சதுர்த்த வடிவங்கள் ஒன்றான காளிதேவி உலக நன்மையின்பொருட்டுச்சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட‘‘காளிதேவி’’ தனிப்பெரும் ஆற்றலுடையவள். இவளே தென்னக மக்களுக்கு காவல் தெய்வம். சக்தி வழிபாட்டில் காளிவழிபாடு மிகத் தொன்மையானதாகும். இவள் தன்னைப் படைத்த சிவபெருமானையே ஆடற் போட்டிக்கு அழைக்கும் அளவிற்கு நிகரற்ற ஆற்றல் பெற்றவள். சிவபெருமான் காளியோடு ஆடி காளியை நடனத்தில் சிவபிரான் வென்றதையும், காளிதேவி சிவனை வழிபட்டு மகிழ்ந்ததையும் தேவாரம் முதலான திருமுறை நூல்கள் குறிப்பிடுகின்றன.

சிவபெருமான் தன்னுடைய கண்டத்திலிருந்தும், கைநெருப்பிலிருந்தும், நெற்றிக்கண்ணிலிருந்தும் பலசமயம் காளிதேவியைத் தோற்றுவித்து அன்பர்களைக் காத்துள்ளார். அவரால் உண்டாக்கப்பட்ட காளியர் சிவந்த பவழம்போல் உடல் பெற்றவர்கள். இதனால் ‘பவளக்காளி’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களைச் சிவகாளி என்றும் கூறுவர். சிவபிரானைப் போலவே சிவசக்தியான பார்வதியும் தனது உடல் வண்ணத்திலிருந்தும், நிழலிருந்தும் பல சமயம் காளிதேவியரைத் தோற்றுவித்து அன்பர்களுக்கு உதவி செய்ய அனுப்பியுள்ளாள். சக்தி அருளால் தோன்றிய இவர்கள் பச்சை வண்ணம் கொண்ட வர்களாதலால் ‘பச்சைக்காளி’ என்று அழைக்கப்படுகிறாள்.

 மதுரை மாவட்டத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.  சிவபெருமானின் படைப்பால் காளி எட்டு வடிவம் கொண்டு விளங்குகிறாள். இதன் விளக்கம் ‘அஷ்ட சக்திகள்’ என்ற தலையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நவகாளிகள்: இந்த ஒன்பது காளியர் வழிபாடு வட இந்தியாவில் சிறப்புடன் நடைபெறுகின்றது. இவர்கள் ஸித்திக்காளி, மகா காளி, மயான காளி, குஹ்ய காளி, தட்சிண காளி, சாமுண்டி காளி, தன காளி, காம உலா காளி ஆவர்.

உலகில் அடையத்தக்கதான பதினாறு செல்வங்களையும் ஒருவன் அடைந்தாலும் அவற்றை வைத்துக் காப்பாற்றி அனுபவிக்க உதவும் காவல் தெய்வமாக இருப்பவள் மகாகாளி. தென்னாட்டில் வணங்கப்படும் காளிதெவி சிவபெருமானின் கண்டத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள். இவள் காற்றின் தத்துவமாக விளங்குகின்றாள். இவள் ஓயாது நிகழும் அழிவையும் மாறுதலையும் குறிக்கின்றது.

வேதாரண்யத்தை அடுத்துள்ள அகத்தியான் பள்ளியில் மகா மண்டபத்தின் தெற்குச் சுவரில் ஒரு ஜன்னல் அமைந்துள்ளது. இந்த ஜன்னலில் தவழ்ந்துவரும் காற்றே காளிதேவியாக வழிபடப்படுகிறது. இந்த ஜன்னலுக்கு ஆடை அணிவித்து விளக்கேற்றி உச்சி வேளையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
 
துர்கை

போரில் வெற்றி பெற்று வெற்றிச் செல்வியாகத் திகழும் துர்கை, அம்பிகையின் சதுர்த்த வடிவங்களில் ஒன்று. ஒரு காலத்தில் திதி என்பவளின் புதல்வி எருமை வடிவம் கொண்டு மகன் வேண்டித் தவம் புரிந்தாள். சுபாரிசு என்ற முனிவர் அவனுக்கு இரங்கி பிள்ளை பிறக்க அருள் புரிந்தார்.
 மிகுந்த பலசாலியாக இருந்த பிள்ளைக்கு விக்ரமன் என்று பெயர் சூட்டினார். இவன் பிரம்மதேவனைக் குறித்து தவமிருந்து அரிய வரங்களைப் பெற்றான். அசுரர் போலவே தன் மந்த புத்தியால் தேவர்களைச் சிறையிலிட்டு துன்புறுத்தினார்.

மக்கள் அவனது ஆட்சியில் எல்லையற்ற துன்பத்தை அடைந்தனர். திருமால் சிவபெருமானை வேண்டினார். சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு பொறியை உண்டாக்கித் திருமால் மீது செலுத்தினார். அப்பொறி திருமால் உடலினின்று ஒரு பெண்வடிவில் வெளிப்பட்டது. அவள் உருத்திரனின் போத்தையும், வலிமையையும், திருமாலின் அழகையும், பெண்மையையும் ஒருங்கே பெற்றிருந்தாள். அவள் சிவபெருமானைப் போலவே சடாமுடிதாித்து அதில் சந்திரனை சூடியிருந்தாள். நெற்றியில் மூன்றாவது கண் விளங்க, எட்டு கரங்களைக் கொண்டு திருமாலைப் போலவே, சக்கரம், வில், வாள், கேடயம் என்ற ஐந்துஆயுதங்களைத் தாங்கியிருந்தாள். உருத்திரர்களின் சோலைக் குறியீடான கிளி அவள் கரத்தில் திகழ்ந்தது. தேவர்கள் அனைவரும் போற்றித் துதித்தனர்.

அவள் தானே தனக்குரிய சக்தி கணங்களைத் தோற்றுவித்து மகிஷ முகம் கொண்ட விக்ரமன் மீது படையெடுத்து ஒன்பது நாட்கள் கடும் யுத்தம் செய்து, இறுதியில் தேவி மகிஷனின் தலையை வெட்டி வீழ்த்தினாள். அதனையே பீடமாக்கிக் கொண்டு அதன் மீது ஏறிநின்றாள். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அசுரனின் அழிவால் உலகத்தில் மீண்டும் இன்பம் தழைத்தது. மகா பக்தனும் முற்பிறவியில் வரமுனியாகத் திகழ்ந்த அசுரனைக் கொன்ற பாவம் அன்னையைச் சேர அவள், பல தலங்களுக்குச் சென்று சிவவழிபாடு செய்தாள்.

இறுதியில் திருவண்ணாமலையில் தேவி சிவவழிபாடு செய்கையில் சிவபெருமான் தோன்றி, சிவபக்தர்களுக்கு காவலாக இருக்கும் வரத்தை அருளி பாவம் நீங்கச் செய்தார்.அன்று முதல் துர்கா தேவி சிவ ஆலயங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

துர்கையின் அவதாரம்:

துர்கமன் என்ற மஹாசுரன் கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். அவன் அந்தணர்கள் மற்றும் மகரிஷிகளிடமுள்ள எல்லா மந்திர சக்திகளும், மந்திரங்களும் தன்னை வந்தடைய வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தான். அதன் காரணமாக அந்தணர்கள் மற்றும் மகரிஷிகளிடமுள்ள மந்திரங்கள் மற்றும் மந்திர சக்திகள் துர்கமனை வந்தடைந்தன. மந்திரங்களை மறந்த இவர்கள், தாங்கள் செய்ய வேண்டிய கர்மாக்களையும் செய்ய மறந்தனர்.
ஜபம், கோபம் இதர கர்மாக்கள் நடைபெறாதபடியால் தேவர்களுக்கு அவர்களுடைய ஆவிர்பாகம் செல்லவில்லை. இதனால் தேவர்கள் தங்களுடைய சக்தியை இழந்தனர்.

மழை இல்லாததால் ஆறு, கிணறு, குளம் முதலான நீர்நிலைகள் எல்லாம் வற்றிபஞ்சம் தாண்டவமாடியது. இதனால் தேவர்களும், ரிஷிகளும் ஜெகன்மாதாவை துதித்தனர்.கருணைக்கடலான ஜெகன்மாதா, தேவர்கள் மற்றும் ரிஷிகள் முன்பு பல கண்களுடன் தோன்றியதால் சதாக்ஷீ என்ற பெயரையும், தேவி தன் கையில் புஷ்பம், காய், கிழங்குகள், கீரையுடன் தோன்றியதால் சாகம்பரீ என்ற பெயரையும் அடைந்து தேவர்களையும், ரிஷிகளையும் மற்றவர்களையும் காத்தபடியால் அவர்கள் மீண்டும் சக்தி பெற்றனர்.

இதனைக்கண்ட துர்கமன், தேவியுடன் கடும் போர் செய்தான். தேவி துர்கமனை வதம் செய்தாள். துர்கமனை வதம் செய்த காரணத்தால் துர்கா என்று அழைக்கப்பட்டாள்.அசுரன் துர்கமனிடம் இருந்த மந்திர சக்திகள் ஜோதியாக தேவியை வந்தடைந்த படியால் ஸர்வமந்த்ரமயீ என்ற பெயரைப் பெற்றாள்.தேவி துர்கமனை வதம் செய்தாள். துர்கமனை வதம் செய்த காரணத்தால் துர்கா என்று அழைக்கப்பட்டாள்.

ரஞ்சனா பாலசுப்ரமணியன்