அம்பிகை அருளால் அகிலம் வசப்படும்
* ஒளிமுகம் நட்சத்திர மண்டலம் ஒளிரும் முழுநிலவு கண்கள் கடல் ஒடுங்கும் பொற்பாதம் கனல் விழுங்கிய செவ்வாய் நிலமாளும் வளைக்கரம்-மன எல்லைக்காவல் அம்பிகையே, தாயே!
* நிறைமதி கலைவாணர் சூழ அரியணையில் புன்னகை பூப்பவளே! குறைமதி குழந்தை என்னை குறைநீக்கி மடிசேர்த்த குணவதியே! குவளை கண்கள் அருள்நோக்கால் குங்கும அறிவு மணம்வீசும்! * தாயின் அருகமர்ந்து அவள் வீரத்திருவழகை ரசிப்பது தியானம்! மந்திரம் ஆயிரம் திருநாமம் மனதில் உருகுதல் தவம்! அசையா சுடரென நானிருக்க ஆடுவதும், ஆடவைப்பதும் அம்பிகையே! * ஆடிமாதம் மனநோய் அச்சமகற்ற வேப்பிலை ஏந்திவரும் அருள்மாரி! அம்பிகையருளால் அகிலம் வசப்படும் அறிவுப்பொருள் விளங்கி மெய்ப்படும்! அன்பு பெருந்தெய்வம் துணையால் நாளும் நலமே விளையும்! * இளமை, செல்வம், செல்வாக்கை இன்புறும் காதலி அவளல்ல! மாசற்ற மாறாதமனம் கண்டு மகிழ்ந்து செல்வம் தந்து பெருமைசூழ் வாழ்வை மாலைசூடி பெருமிதம் கொள்வாள் அம்பிகை! * மாஞ்சோலை பறவையாகி மாட்டுத்தொழுவ மதில் கறவையாகி மகத்தான மனித பிறப்பெடுத்தோம்! மீனாட்சி பாதம் சரண்புகுவோம்! வாழ்க்கை சகதியில் உழல்வதுவீண்! சுழலும் பிறவி தொலைப்போம்! * செடி, கொடிகளில் பசுமைதீட்டி உயிர்தந்து விதிவகுத்து- மண்ணில் அடிபரந்து வேராகி நிற்கிறாள்! இயற்கை மூச்சாகி, உணவாகி நிலமாகி, நீராகி, நெருப்பாகி அழியாத வடிவெடுத்து சிரிக்கிறாள்! * பிறந்தோம், தவழ்ந்தோம், நடந்தோம் உண்டோம் சுகம் கண்டோம்! நரை தரித்து நடை தளர்ந்தோம்1 நோயால் படுக்கை கிடந்தோம்! அருள்விழி அம்பிகையை வணங்கி ஒளிவாழ்வு, இளமை பெறுவோம்!
- விஷ்ணுதாசன்
|