பிள்ளைப் பேறளிக்கும் பிரம்மராட்சசி அம்மன்



ஜமீன் கோயில்கள் 8

சிங்கம்பட்டி-நெல்லை மாவட்டம்


சிங்கம்பட்டி ஜமீன்தார் வாரிசுகள் தங்களுடைய அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தமது அலுவலுக்குத் தக்கவாறு மூன்று இடங்களில் அமைத்திருந்தனர். அரண்மனை அருகே ஆலயங்கள் அமைத்து வணங்கி வந்தனர். அயன் சிங்கம்பட்டி பூதத்தார் கோயிலுக்கு பின்புறம் முதல் அரண்மனை இருந்துள்ளது. தினமும் ஜமீன்தார் ஏவலர்கள் புடை சூழ மகாதேவர்  கோயிலுக்கு செல்வார்.

சிவனை மனமுருக வணங்கிய பிறகே அன்றைய செயல்களைத் தொடங்குவர்.  அம்மையையும்,  ஐயனையும் திருவிழாக்காலங்களில்  பொன்னாலும் பூவாலும் அலங்கரித்து தங்களது தோளில் சுமந்து வருவர். அரண்மனை இடம் மாறிய பிறகும்கூட இந்த வழக்கத்தை அவர்கள் விட்டு விடவில்லை.

சிவபெருமான் உலகத்துக்குப் படியளக்கிறாரா இல்லையா என்று  பார்வதி தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை சோதித்துப் பார்க்க ஒரு எறும்பை பிடித்து ஒரு ஜாடிக்குள் அடைத்து வைக்கிறார். படியளந்து விட்டு வந்த சிவபெருமானை பார்த்து, “ஐயனே எல்லோருக்கும் படியளந்து விட்ட நீங்கள், ஒரே ஒரு உயிர் மட்டும் பட்டினியால் கிடப்பதை  அறியவில்லையா?” என்று தேவி கேட்டார்.

 சிரித்தார் சிவபெருமான்.  “தேவி, நீ எறும்பை அடைத்து வைத்திருக்கும் ஜாடியைத் திறந்து பார்,’’ என்றார்.பார்வதிதேவி திறந்து பார்த்தபோது, எறும்பு ஒரு அரிசி மணியைத் தன் வாயால் பற்றியிருந்தது! ஈசன் எல்லா உயிருக்கும் படியளக்கிறார் என்பதை அம்பிகை புரிந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி, கார்த்திகை 6ம் தேதி வைக்கத் தஷ்டமி  விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் ஆலயத்துக்கு இணையானது இந்த சிங்கம்பட்டி மகாதேவர் ஆலயம்.

சிவபெருமான் அன்னம் வழங்கும் இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் எல்லோருக்கும் அன்னம் வழங்கும் அளவுக்குப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். தங்களது மக்களுக்கு வாரி வழங்கும் அளவுக்கு பொன் பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜமீன்தார்கள் மகாதேவர் ஆலயத்தில் இத்திருநாளில் இறைவனுக்கு அன்னம் படைத்து அன்னதானமும் செய்கிறார்கள்.

இதே ஊரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலும்  ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது தான். இந்தக் கோயிலுக்கு கூரை கிடையாது. இங்கு மார்கழி மாதம்தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கும். சித்திரை மாதம் கோயில் கொடை விழாவின்போது மூன்றாம்  நாள் இங்கு ஜமீன்தார் தனது பரிவாரத்துடன் வருவார். அவருக்கு பரிவட்டம் கட்டி திருவிழாவை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்துவர். 

இரண்டாவது அரண்மனை இருந்த இடம் ஏர்ம்மாள்புரம். மணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பச்சை பசேலேன்று காணப்படும் வயல்வெளிகளுக்கு நடுவே இந்த ஊர் உள்ளது.  இங்கிருந்து பார்த்தால் மலைகளை தழுவிச் செல்லும் வெண்மேகக் கூட்டத்துடன் மணிமுத்தாறு அணை ரம்யமாய் காட்சி தரும். வெள்ளியை உருக்கி விட்டாற்போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 7 ஷட்டர்கள் வழியாக கொட்டும். ஏர்ம்மாள்புரம் அரண்மனை அருகில் முப்பிடாதி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இவரை வணங்கிய பிறகே ஜமீன்தாரின் முன்னோர்கள் தினமும் நகர்
வலம் வருவர்.  இங்குள்ள முப்பிடாதி அம்மன் திரிபுர சுந்தரியின் அம்சம். ஜமீன்தார்கள் இவருக்கு ஒரு ஆலயம் அமைத்து மூலவரை மரச்சிற்பமாக அமைத்து வணங்கி வந்தனர்.

புராதன சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்குள் பூசாரி மட்டும் நுழைந்து செல்லும் வண்ணம் நுழைவாயில் சிறியதாக இருக்கிறது. அம்மனின் கழுத்து, தோள் மற்றும் வயிற்றை சுற்றியபடி நாகப்பாம்புகள்  காணப்படும். உள்ளே செல்லும் அர்ச்சகர் அம்மனை வணங்கி, “தாயே உனக்கு அலங்காரம் செய்து  ஆராதிக்க வேண்டும். தயவு செய்து நாகப் படைகளை அகற்று” என்று  வேண்டி நின்றால்போதும். பாம்புகள் அம்மனை விட்டு இறங்கிச் சென்று விடும். அதன் பிறகே பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் செய்வார். முன்னூறு வருடங்களாக இது தொடர்கிறது!

சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் முப்பிடாதி அம்மனை தங்களது அன்னையாகவே பாவித்தார்கள். திருவிழாக்காலங்களில் அம்மனுக்கு அலங்காரம் முடிந்து திரை விலக்கும்போது, முதல் ஆளாக பக்தி பெருக்குடன் நிற்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு தாயார் காட்சியளிப்பார். பின்னர் பரிவட்டம் கட்டி அவருக்கு முதல் மரியாதை செய்து பிரசாதம் கொடுத்த பிறகே மற்றவர்களுக்கு வழங்கப்படும். 

அடுத்து, ஜமீன்தார் கோயில் வளாகத்தில் அமர்ந்ததும் கலைநிகழ்ச்சி நடைபெறும். கலைஞர்கள் தங்கள் பலவகை கரகாட்டத் திறமைகளைக் காட்டி மகிழ்வார்கள். கலைஞர்களின் திறமைக்கேற்ப ஜமீன்தார் பரிசளிப்பார். இரவு, வாணவேடிக்கையுடன், அன்னை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலா செல்வார். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைப்பார்.

 சித்திரை மாதம் 3வது செவ்வாய் அன்று அம்மனுக்கு கொடை விழா நடைபெறும். பக்தர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகவே, கோயிலைப் பெரிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது, தற்போதைய ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் கனவில் அன்னை தோன்றி, ‘‘நான் இப்போது குடிகொண்டுள்ள இடத்திற்கு அருகிலேயே எனக்குப் புதிதாக ஆலயம் கட்டு,’’ என்று உத்தரவு வழங்கினார். உடனடியாக ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டப்பட்டு 1.06.2012 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 300 வருடங்கள் பழமையான மர விக்ரகம் முன்னோர்கள் வணங்கியதை பறைசாற்றும் வண்ணம் தற்போதும் நினைவுச் சின்னமாக உள்ளது.

இந்த ஆலயத்துக்கு முன்னால் பழமையான ஆலமரம் உள்ளது. உயரமான பலிபீடம் உள்ளது. வெளிப்பிராகாரத்தில் இடதுபுறம் சாஸ்தா, நாகராஜா, பூதத்தார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். வலப்புறத்தில் பட்டவராயர், பொம்மக்கா-திம்மக்காவுடன் வீற்றிருக்கிறார். கோயில் வளாகத்தில் முப்பிடாதி, உஜ்ஜயினி மகாளி மற்றும் சந்தனமாரியும், எதிர்ப்புறம் கற்பக விநாயகர் சந்நதியும் உள்ளன. முப்பிடாதி அம்மன், கேட்டவர்க்கு  கேட்ட வரும் தருபவராக புன்னகை முகத்துடன் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை வணங்கினால்
திருமணம் மற்றும் மழலை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக அரண்மனை இடம் பெயர்ந்த இடம் ஜமீன் சிங்கம்பட்டி. இங்கு அகத்தியர் மற்றும் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. மணிமுத்தாறு நதி, கீழ்ப்புறம் ஓட, வலதுபுறத்தில் இருவரும் அருளாட்சி புரிகின்றனர்.சிவபெருமான்,  பார்வதி தேவி திருமணம் கைலாயத்தில் நடந்த போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன் படுத்த குறுமுனியாம் அகத்தியர்  தென்னகம் வந்தார். பொதிகை மலைக்கு சிங்கம்பட்டி வழியாகச் சென்றார். இவ்வாறு வந்தபோது ஓரிடத்தில் தனது தண்டத்தைத் தரையில் ஊன்றினார்.

அங்கிருந்து பால்போல் தண்ணீர் பொங்கியது. அதை அருந்தி தனது தாகம் தீர்த்துக்கொண்டார். அந்த ஊற்று தற்போதும், ‘ஊத்துக்குழி’ என்று அழைக்கப்படுகிறது. மணிமுத்தாற்றங்கரைக்கு வந்த அகத்தியர் சிவபூஜை செய்வதற்காக மண்ணை குவித்து லிங்கம் உருவாக்கினார். முருகப்
பெருமானை ஆற்றின் வலதுபுறம் பிரதிஷ்டை செய்தார். மிகச்சிறியதான இந்தக் கோயில் ஜமீன்தார் ஆளுகையில் பெரிதாக கட்டப்பட்டது.

காலம் காலமாக ஜமீன்தார்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து அகத்தியரையும், முருகப்பெருமானையும் வணங்கி கீர்த்தி பெற்றனர்.  இக்கோயிலில் முருப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகம் மிகப்பெரிய திருவிழாவாக, விமர்சையாக நடக்கும். முதல் நாளே ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விடுவார். மடப்பள்ளிக்கு மேல்புறம் உள்ள அறையில் தங்கி விரதமிருப்பார். சிறப்பு பூஜையில் கலந்துகொள்வார். முருகப்
பெருமான் வீதி உலாவரும் சப்பரத்தை வழியனுப்பிவைப்பார்.

மிக பிரமாண்ட சுற்றுச் சுவருடன் இக்கோயில் உள்ளது. அதில் சிறப்பு மிக்க கல்தூண்கள் பல உள்ளன. ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர், வடக்கு நோக்கி உள்ளார். முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில் வார்டனைக் கொலை செய்தார். இந்த குற்றத்துக்காக  ஆங்கிலேய அரசு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 17.10.1884ல் தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை!

கந்த சஷ்டி விழாவின்போதும் ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விரதம் இருப்பார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரே அங்கிருந்து  அரண்மனைக்கு கிளம்புவார். சிங்கம்பட்டி ஊர் மக்களும் ஜமீன்தாரின் கோயில்களை வணங்கி வளம் பெறுகின்றனர். தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களைக்கூட ஜமீன்தாரின் வாரிசுகள் மன்னித்து விடுவர்; ஆனால், தெய்வத்துக்கு எதிராக சதி செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

இதை விளக்கும் ஒரு சம்பவம்: சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஒவ்வொரு ஜமீன்தாரும் தத்தமது காலத்தில் திருப்பணிகளைச் செய்துகொண்டே வந்தார்கள். அந்த காலத்தில் அய்யனாருக்கு பொன்னால் ஆபரணம் செய்வதானால், கோயில் வளாத்திலேயே தங்கத்தை உருக்கித் தயாரிப்பார்கள். இந்தப் பணியை சிங்கம்பட்டியை சேர்ந்த ஆசாரி ஒருவர் மேற்கொண்டார்.

இவர் விதவிதமாக அணிகலன்களை உருவாக்கினார். திடீரென அவர் மனதில் சஞ்சலம் உருவானது. இந்த பொன்னில் தன் மகனுக்கு தொட்டிலில் கட்ட சிறு மணி உருவாக்கினால் என்ன என்று எண்ணினார். இதன்படி மணியை உருவாக்கி, யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அரண்மனைக் காவலர்கள் யாரும் இதை பார்க்கவில்லை என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், பெரிய காவலரான பூதத்தார், பொன் திருடிய ஆசாரிக்கு பல சோதனைகளை கொடுத்தார்.

இதை தாங்க முடியாமல் அவர் அரண்மனைக்கு ஓடிச்சென்று நடந்ததை ஜமீன்தார் முன்பு கூறிக் கதறினார். இதைக்கேட்ட அவர். “நீ செய்தது பெரும் தவறு. இதற்கு நான் தீர்ப்பு சொல்ல இயலாது. பூதத்தார்தான் தீர்ப்பு சொல்லவேண்டும்” என்று கூறிவிட்டார்.    தனது வீட்டருகே பீடம் போட்டு பூதத்தாரை வணங்கிய பிறகே ஆசாரியை ஜமீன்தார் மன்னித்தார்.

இதேபோல் கோயில் வளாகத்திலிருந்த பழமையான மரத்தை ஜமீன்தாரின் உறவுக்காரர் ஒருவர் வெட்டி கட்டிலும், பீரோவும் செய்தார். ஆனால், இரண்டையும் வீட்டில் வைக்க முடியவில்லை. பிரம்மராட்சசி அம்மன் அவரது வீட்டுக்கு சென்று படாதபாடு படுத்திவிட்டார். ஜமீன்தாரிடம் வந்து அவர் கதறினார். ‘‘அம்மனுக்கு சொந்தமான பொருளை அவரிடமே ஒப்படைத்தால் பிரச்னை தீரும்’’ என்று பரிகாரம் கூறினார்.

அதன்படியே அயன் சிங்கம்பட்டியில் உள்ள பிரம்மராட்சசி அம்மன் கோயிலில் பீரோவும், கட்டிலும் கொண்டு வைக்கப்பட்டது. இப்போதும் நாம் அவற்றைக் காணலாம்.பிரம்மராட்சசி அம்மன் மீது ஜமீன்தார் குடும்பத்திற்கு எப்போதுமே பற்று அதிகம். முகவை மன்னர் ராமநாத சேதுபதி, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிக்கு மைத்துனர் ஆவார். திருமணமாகி நீண்ட நாட்களாகியும் இவருக்கு குழந்தைப்பேறு இல்லை. இதற்காக  சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்து பிரம்மராட்சசி அம்மனை வணங்கினார்.

அவரது அருளால் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், வயிற்றோட்டம் ஏற்பட்டு அதன் உடல்நிலை மோசமடைந்தது. ஜமீன்தாரின் இளைய தாயாரான கணேச குஞ்சரி நாச்சியார், அந்தக் குழந்தையை தூக்கி நெற்றியில் குங்குமம் இட்டு பிரம்மநாயகி பிரம்ம ராஜேஸ்வரி என்று பெயரிட்டார். அன்று முதல் வயிற்றோட்டம் நின்றது.

அந்தக் குழந்தை வளர்ந்து மணமான பிறகு அவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பிரம்ம அபர்ணா என்று பெயர் சூட்டினார். ஜமீன்தாரின் சிறிய தாயாருக்கு 3 முறை குறை பிரசவம் ஏற்பட்டது. மன வேதனை அடைந்த அவர் அம்மனை நோக்கி விரதமிருக்க, குறைபாடு நீங்கி ஆண் குழந்தை பிறந்தது. சொரிமுத்து அய்யனார், பிரம்மராட்சசி அம்மன் போன்றோருக்கு ஆலயங்கள் கட்டி, அக்கோயில்களை நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும்வகையில் மிகச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார், ஜமீன்தார் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள். 

முத்தாலங்குறிச்சி காமராசு

(தொடரும்)

படங்கள்: பரமகுமார்,
சுடலைமணி செல்வன்