மகள் ஜாதகத்தால் அப்பாவுக்கு பாதிப்பு வருமா?



என்ன சொல்லுது எதிர்காலம்?

?என் மூத்த மகள் தற்போது பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்? அவளுக்கு தற்போது ஏழரைச்சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவளுடைய அப்பாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. 
- பி.அமுதவள்ளி, சிறுகளத்தூர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை ஜாதக சந்திரிகை எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். லக்னத்திற்கு ஒன்பதாவது வீடு முதல் பன்னிரண்டாவது வீடு வரைக்கும் தொடர்ந்து கிரகங்கள் இருப்பதால் மகளின் வாழ்க்கை சிறக்கும். லக்னாதிபதியான செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து சனியின் பார்வைப் பெற்று அமர்ந்திருப்பதால், மகள் வெளிவட்டாரத்தில் இரக்கப்பட்டு ஏமாறாமல் இருக்க வேண்டும்.

பிரபல யோகாதிபதியும் பூர்வ புண்யாதிபதியுமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதாலும் சுகாதிபதி சந்திரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் மகளுக்கு வளமான வாழ்க்கை உண்டு. பாக்கியாதிபதியாகிய குரு நீசம் பெற்றிருந்தாலும் பிரபல யோகாதிபதிகளாகிய சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் குரு அமர்ந்திருப்பதாலும் சனியும், குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் வருங்காலத்தில் தனியார் துறையில் அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும்.

அவளுக்குத் தற்சமயம் ஏழரைச் சனி தொடங்கியிருக்கிறது. பிறக்கும்போதே சனிபகவான் மீனத்தில் அமர்ந்திருப்பதாலும், அடுத்தடுத்து யோக கிரகங்களின் தசைகள் நடைபெற இருப்பதாலும் ஏழரைச் சனி பெரிதாக பாதிக்காது. 13.9.2017 முதல் சூரியதசை தொடங்குவது நல்ல யோக அமைப்பாகும். ஆனால், ஏழரைச் சனியில் சூரியதசை வர இருப்பதால் தந்தையாருக்கு அறுவை சிகிச்சை, சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். மகளுக்கு சுக்கிர தசையில் புதன் புக்தி 12.7.2016 வரை நடைபெறும்.

திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அருணாசலேஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். உங்கள் மகளுக்கு கல்வியில் வெற்றியும், உங்கள் கணவருக்கு ஆயுளும் ஆரோக்யமும் பெருகும். 

? எனக்கு 1998ல் திருமணம் நடைபெற்றது. எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அதனால் நிம்மதி இல்லை. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- பி.எஸ் ஆனந்த்,
அம்பாசமுத்திரம்.

உங்கள் இருவரின் ஜாதகத்தையும் உத்திர காலாமிர்தம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். இருவர் ஜாதகத்திலும் மனோகாரகன் சந்திரனும், சர்ப்ப கிரகமான ராகுவுடன் சேர்ந்திருப்பதால் அடிக்கடி ஈகோ பிரச்னையால் கருத்து மோதல்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன. உங்களின் லக்ன ராசியாதிபதியான சனியும், மனைவியின் ராசிநாதனாக செவ்வாயும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் தன்மை கொண்டிருப்பதாலும் அடிக்கடி வார்த்தைப் போர் இருந்து கொண்டுதான் இருக்கும்.

 உங்கள் ஜாதகத்தில் புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் நீங்கள் எப்போதும் அமைதியை விரும்புவீர்கள். ஆனால், சுக்கிரனுடன் சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் கலவரங்களுக்கு இடையேதான் நீங்கள் அமைதி காண முடியும். உங்கள் ஜாதகத்தில் மனைவி ஸ்தானத்தில் கேது அமர்ந்ததுடன் சப்தமாதிபதி சந்திரனுடன் ராகு நிற்பதாலும் களத்திரகாரகன் சுக்கிரனும் கிரகயுத்த நிலை அடைந்திருப்பதாலும் உங்கள் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.

எனவே, நீங்கள் அனுசரித்துப் போவதுதான் நல்லது. 23.7.2015 வரை உங்களுக்கு குருமகா தசையில் புதன் புக்தி நடைபெறும். 19.8.2016 முதல் உங்களுக்கு மனநிம்மதியும், ஆரோக்யமும் அதிகரிக்கும். மனைவிக்கு 4.3.2013 முதல் சந்திர மகாதசை தொடங்கியிருப்பதாலும் சந்திரன் நீசகதியுற்று பலவீனமாக இருப்பதாலும் தற்சமயம் ஜென்மச்சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் 3.2.2016 வரை ராகுபுக்தி நடைமுறையில் இருப்பதாலும் மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். இருவரும் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி நாட்களில் சென்று வருவது நல்லது. 

? 12.6.2013 புதன் கிழமை ஆறரை மணிக்கு புதுவீடு கட்டி கிரகபிரவேசம் செய்தேன்.
அன்றிலிருந்து பல பிரச்னைகள், செலவுகள். நிம்மதி இல்லை. என் மகள்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- எஸ்.தேவராஜ், காஞ்சிபுரம்.

உங்கள் ஜாதகத்தை ஜாதக சாரதீபா எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். புதன் தசையில் குரு புக்தி 17.7.2015 வரை நடைபெறும். புதன் தன-பூர்வ புண்ணியாதிபதியாக வருவதால் அடுத்தடுத்து யோக பலன்கள் உண்டு. தாராபலம், சந்திரபலம் உள்ள நல்ல நாளில்தான் நீங்கள் கிரகப் பிரவேசம் செய்திருக்கிறீர்கள். கிரகப்பிரவேச லக்னத்திற்கு பன்னிரண்டாவது வீட்டிலே சூரியனும், செவ்வாயும் அமர்ந்திருக்கிறார்கள்.

பன்னிரண்டாம் வீடு விரயஸ்தானம் என்பதால் அதிக செலவுகளும், அதுவே சயனஸ்தானமும் என்பதால் தூக்கமின்மையும், நிம்மதியற்ற போக்கும், அரசு பயமும், வழக்குகளும் வந்து நீங்கும். இதிலிருந்து விடுபட கிரகபிரவேச லக்னத்திற்கு எட்டு, பன்னிரண்டாம் வீடு சுத்தமாக இருக்கும் நல்ல நாளிலும், நேரத்திலும் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து கோ பூஜை செய்து குறைந்தது பதினைந்து பேருக்காவது வாழை இலையில் உணவு அளிப்பது நல்லது. உங்கள் இரு மகள்களின் ஜாதகமும் கிரகஅமைப்புகளும் நன்றாக இருப்பதால்
அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

? என் மகன் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வருகிறான். திருமணம் என்ற பேச்சை எடுத்தால், அப்புறம் பார்க்கலாம் என்றே தள்ளிக் கொண்டு போகிறான்.
அவனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? அவனது எதிர்காலம் இந்தியாவிலா அல்லது வெளிநாட்டிலா?
- நா.ஆனந்தி, சென்னை.

உங்கள் மகனின் ஜாதகத்தை சங்கேத நிதி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். 25.3.2016 வரை குருமகா தசையில் சனி புக்தி நடைபெறும். அதன் பின்னர் வரும் புதன் புக்தி அவருக்கு திருமண வாய்ப்பைத் தரும். லக்னாதிபதி சூரியன் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்திருப்பதாலும் பூர்வ புண்ணியாதிபதி குரு வக்கிரமடைந்திருப்பதுடன் பிரபல யோகாதிபதி செவ்வாயும் வக்கிரமுற்று வக்கிரம் பெற்ற சனியுடன் சேர்ந்திருப்பதால் தன் விருப்பப்படிதான் இவருக்குத் திருமணம் நடைபெறும்.

நீங்கள் பெண் பார்த்து அலைய வேண்டாம். வக்கிரமுற்ற கிரகங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபடவும் விரைந்து திருமணம் முடியவும் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள திருவக்கரை வக்ரகாளியம்மனை வலது புறமாக ஐந்து முறையும், இடது புறமாக நான்கு முறையும் வலம் வந்து எலுமிச்சம்பழ மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். விரைவில் திருமணம் முடியும்.

? எனக்கு வயது 51. கடந்த நான்கு வருடமாகப் வேலைக்குப்போய் வந்தும் வருமானம் சரியில்லை. எனக்கு ஏழு வயதில் ஒரு பையன் உண்டு. அவனுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்? என் வாழ்வில் முன்னேற்றம் உண்டா? பிஸினஸ்
செய்யலாமா? பூர்வீகச் சொத்து எப்போது கிடைக்கும்?
- மகேஷ், சென்னை.

உங்களின் ஜாதகத்தை பாவார்த்த ரத்னாகரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். 9.5.2017 வரை உங்களுக்கு சனிதசையில் சனிபுக்தி நடைபெறும். நவம்பர் 2011 முதல் ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு கடுமையாக இருந்தது. தற்சமயம் ஏழரைச் சனி விலகி விட்டது. இனி நல்லது நடக்கும். 5.6.2015 முதல் வேலை வாய்ப்பு கூடிவரும். 10.5.2017 முதல் தொடங்கும் புதன் புக்தி உங்களுக்கு வியாபார யோகத்தைத் தரும்.

 அதுவரை நீங்கள் ஏதேனும் வேலை பார்ப்பதே நல்லது. சனிதசை தொடங்கியுள்ளதால் எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் வேலைக்கு முயற்சிக்கலாம். புத்திரகாரகன் குரு ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உங்கள் மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்படாதீர்கள். அவர் நல்ல நிலைக்கு வருவார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்து பாகப்பிரிவினை 2017ம் வருடம் நல்ல விதத்தில் முடியும். பரிகாரமாக சென்னை-கொளத்தூரில் இருக்கும் ஸ்ரீ சோமநாதீஸ்வரரை பிரதோஷம், அமாவாசை நாட்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

? கடந்த நான்கு வருடங்களாக எந்தத் தொழிலும் நிலையாக அமையவில்லை. ஒரே மனக்குழப்பம், தூக்கமின்மை. ஆனால், ஏதாவது ஒரு வழியில் செலவுக்கு பணம் கிடைத்து விடுகிறது. இதுதான் எனக்குதந்த தொழில் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. நான் எந்தத் தொழில்தான் செய்யலாம்?
- கே.செல்வகுமார், திருநெல்வேலி.

உங்கள் ஜாதகத்தை பிருகத் ஜாதகம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். தற்சமயம் உங்களுக்கு குரு தசையில் புதன் புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடக லக்னம், ரிஷப ராசியில், சூரியனுடைய நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்திலே பிறந்திருக்கிறீர்கள். ஜாதகத்தில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கிறார். தற்சமயம் குருமகாதசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குருமகாதசையில் புதன்புத்தி 4.4.2017 வரை நடைபெறும். ஜாதகத்தில் குருபகவான் ஆறாவது வீட்டிலே மறைந்து கிடக்கிறார்.

குரு, ராகுவுடன் சேர்ந்து காணப்படுவதால் அலைச்சலையும் கூடவே வருமானத்தையும் தருவார். உத்யோக ஸ்தானாதிபதியாகிய செவ்வாய் சூரியனுடனும், புதனுடனும் சேர்ந்து அமர்ந்திருப்பதால்தான் நிரந்தர உத்யோகம் கிடைக்கவில்லை. சூரியன்-செவ்வாய்-புதன் சேர்க்கை இருப்பதால் ஒரு தொழிலோ, வியாபாரமோ நிலையாக அமையாமல் இருக்கின்றது. எது செய்யப் போனாலும் தடைகளும், நீடித்து நிற்க முடியாத நிலைமையும் இருந்து கொண்டிருக்கும்.

லக்னாதிபதியான சந்திரனும் அஷ்டமாதிபதி சனியுடன் சேர்ந்து காணப்படுவதனால் கமிஷன், புரோக்கரேஜ் வகைகள் உங்களுக்கு லாபம் தரும். மார்க்கெட்டிங், டிரேடிங் வகைகளிலும் முன்னேறலாம். சந்திரனுக்கு பத்தாம் வீட்டுக்குரிய கிரகம் சனி பகவானாக வருவதால் உணவு சம்பந்தப்பட்ட தொழில் ஆதாயம் தரும். குரு ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும், குரு மகாதசை தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் ஸ்டேஷனரி, கிஃப்ட் ஆர்ட்டிக்கல் வகைகளால் பணம் வர வாய்ப்பிருக்கிறது.

எனவே, கவலைப்படாதீர்கள். உத்யோக ஸ்தானாதிபதி வலுவிழந்து காணப்படுவதனால்தான் உங்களுக்கு இத்தனை தடுமாற்றமும் பிரச்னைகளும். 10.8.2016 முதல் எல்லா வகைகளிலும் மேன்மை உண்டாகும். தற்சமயம் கண்டகச் சனி நடைபெறுவதாலும் அடுத்து அஷ்டமத்துச் சனி வர இருப்பதாலும் நீங்கள் முதலீடு செய்து சொந்தத் தொழில் தொடங்காமல் வேலை தேடுவதுதான் நல்லது. உணவு, ஏற்றுமதி-இறக்குமதி அல்லது பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் உங்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்.

எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கவும், வருமானம் தொடர்ந்து வரவும் நீங்கள் பழனி முருகனை வழிபடுவது நல்லது. செவ்வாய்க் கிழமை மாலை நேரத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் பழனி முருகனை வணங்குங்கள் தினசரி கந்தசஷ்டி கவசம் படியுங்கள். தொழிலும் அமையும். நீங்கள் எதிர்ப்பார்த்த எல்லாம் சிறப்பாக நடக்கும்.
 
? என் சகோதரரின் ஒரே பையனுக்கு 6 வருட திருமண வாழ்க்கையில் குழந்தை பாக்யம் இல்லை. எங்கள் வம்சம் மேலும் மேலும் பெருக வேண்டும். என்ன பரிகாரம்? எனக்கும் குழந்தை இல்லை.- ஆர்.கௌசீகன், சென்னை.

உங்கள் சகோதரனின் மகன், மருமகள் இருவரின் ஜாதகத்தையும்  மானசாகரி எனும் நு£லினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மகன் மேஷ லக்னம், கன்னி ராசியிலே பிறந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியன் பாதக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னத்துக்கு ஐந்தாம் இடத்தில் குழந்தை ஸ்தானத்தில் சனிபகவான். சனி, தாமதித்து எதையும் தரக்கூடிய மந்த கிரகமாவார். சனி ஐந்தாம் வீட்டில் குழந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதனால் குழந்தை பாக்கியமும் தாமதமாகத்தான் கிடைக்கும்.

அதோடு சனி, பாதகாதிபதியாகவும் இருப்பதனால் இயல்பாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. மருத்துவத்தின் உதவியுடன் குழந்தை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. புத்திரகாரகனான குருபகவானும், பாக்கியாதிபதியுமான குருபகவானும் மூன்றாவது வீட்டில் சென்று மறைதல் கூடாது. அந்தவகையில் பார்க்கும்போதும் இவருக்கு சந்தான பாக்கியம் கிடைப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், 10.3.2014 முதல் குருமகாதசை தொடங்கியுள்ளது. 27.4.2016 வரை குருமகாதசையிலே குருபுக்தி நடைபெறும்.

இதனால் குழந்தை பாக்யம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கோச்சார கிரகங்களின் அடிப்படையிலும், ஏழரைச் சனி இப்போது விலகியிருப்பதனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். எனவே, நீங்கள் மருத்துவரை நாடுவது நல்லது. இவருடைய மனைவிக்கு ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதனால் குழந்தை பாக்யம் சிறப்பாக இருக்கிறது.

 புத்திரகாரகன் குரு எட்டாவது வீட்டிலே மறைந்தாலும் சந்திரனின் பார்வையை பெற்றிருப்பதனால் சந்திரனுக்கு ஏழாவது வீட்டில் குரு அமர்ந்து யோக அமைப்புடன் காணப்படுவதனாலும் குழந்தை பாக்யம் உண்டு. இப்போது இவருக்கு மிக நல்ல நேரம் நடந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் குருமகாதசையில் சுக்கிரபுக்தி நடைபெற்று வருகிறது. 13.4.2016 வரை குருமகாதசையிலே சுக்கிர புக்தி நடைபெறும்.

சுக்கிரன் பிறக்கும் போது லக்னாதிபதியுடன் சேர்ந்திருப்பதனாலும் குழந்தை பாக்கியம் அவசியம் உண்டு. எனவே, மனைவியின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. மகனின் ஜாதகமும் நன்றாக இருக்கிறது. பரிகாரமாக திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நவதிருப்பதிக்கு இவர்கள் இருவரும் சென்று ஒவ்வொரு ஸ்தலத்திலும் நெய் தீபமேற்றி வணங்கி வருவது நல்லது. அதன் மூலமாகவும் குழந்தை பாக்யம் கிட்டும்.

சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் இவ்விருவருக்கும் உண்டு. மகனுக்கு ஏழரைச்சனி முடிவுற்றதால் தாராளமாக மேற்படிப்பு தொடரலாம். உங்கள் சகோதரரும் அவருடைய மனைவியும் ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் மனநிம்மதி அடைவார்கள்.  அதோடு அனுமன் சாலிசா படிப்பதும் மிக நல்லது. குடும்பம் நிம்மதியும் அடையும், வம்சமும் தழைக்கும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்