மஹாலக்ஷ்மியின் வாகனம் எது தெரியுமா?



தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும் லட்சுமி பூஜை மேற்கொள்ளப்படுகிறது. இச்சமயத்தில் ஒரு தகவல். அது, திருமகளாம் மகாலட்சுமிக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என்பதுதான். பலருக்கு வியப்பாக இருக்கும் இந்தத் தகவல், வட இந்திய பக்தர்கள் பலருக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான்.

நம் கடவுளர் அனைவருக்குமே வாகனம் இருக்கிறது. சரஸ்வதி-பிரம்மாவின் வாகனம், அன்னப் பறவை; பார்வதி-பரமேஸ்வரனின் வாகனம் ரிஷபம். இதைப்போலவே, லட்சுமி-மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடன் உள்ளது. ஆனால், லட்சுமிக்கென்றே பிரத்யேக வாகனம் ஆந்தை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

தீபாவளி தின இரவில் தம் வீட்டிற்கு ஆந்தை வருவதை சுப சகுனமாக அவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களிலும் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், மேற்கொள்ளப்போகும் செயலில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர். தீபாவளி தினம் என்றில்லை; சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் விரைவில் பொருளாதார அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தாலோ அல்லது அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் இப்படி நிகழ்ந்தாலோ, அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம்.

பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று அங்கே கணித்திருக்கிறார்கள். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை நம்பிக்கை இதுதான்:

ஒரு முறை குரல் கொடுத்தால்: சூரியனின் எண். ஆயுள் விருத்தியடையும்.
இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். விரைவில் ஒரு செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று முறை: குருவின் எண். காத்திருப்போருக்கு விரைவில் திருமணம் கைகூடும் நடக்கும். குடும்பத்தில் புதிய நபரின் வருகை உண்டு.நான்கு முறை: ராகுவின் எண். எதிர்பார்த்த முன்னேற்றம் விரைவில் கிட்டும்.ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம்.

அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.ஆறு முறை: சுக்கிரனின் எண். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருவர். அவர்கள் பழகியவர்களாகவோ புது அறிமுகமாகவோ இருப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. ஏழு முறை: கேதுவின் எண். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.எட்டு முறை: சனியின் எண். நோயுற்றவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்திகள் வரும்.இரவில் அலைந்து திரிந்து இரை தேடும் பறவை, ஆந்தை  பகலில் அதற்குக் கண் தெரியாது. கூட்டுக்குள் உறங்கி ஓய்வெடுக்கும். பட்சி சாஸ்திரப்படி ஆந்தை விஷமத்தனம் நிறைந்த அறிவுள்ள பறவை.

மனிதனைப் போன்ற சமதள முகம்; அமைதி, தீவிரம் உடைய கம்பீர முகச்சாயல் கொண்டது. சிமிட்டாமல் உற்றுப் பார்க்கும் இரு கண்கள்; பின்புறம் 270 டிகிரி வரை செலுத்தி நன்கு பார்க்கவல்லது. பறவைகளில் ஆந்தைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு ‘இரவின் அரசன்’ என்றே பெயர். விவசாயத்துக்குத் தீங்கு செய்யும் எலிகள், பூச்சிகள், நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி அழிப்பதால் அதை ‘விவசாயியின் நண்பன்’ என்றும் சொல்வார்கள்.

இந்தியில் ஆந்தைக்கு ‘உல்லு’ என்று பெயர். அதே சொல் முட்டாளையும் குறிக்கும். எனவே அவர்கள் ஆந்தையை முட்டாள் பறவை என்றே வழங்குகின்றனர். இருப்பினும், அது திருமகள்
லட்சுமியின் வாகனம் என்பதால் அவர்கள் மனதில் தனிச் சிறப்பிடம் வகிக்கிறது. ஐரோப்பாவில் ஆந்தை அறிவுடைமைக்கு அடையாளம்.தீபாவளியன்று லட்சுமி தேவி பூஜிக்கப்படுவதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.

கோவிந்த்