வெறும் கொண்டாட்டமல்ல; சமுதாயத் திருவிழாதான் தீபாவளி!



இடையாறு

காலங்காலமாக பாரதமெங்கும் உள்ள மக்களின் உள்ளத்திலே ஊறி நின்ற இன உள்ளுணர்வு ஏதோ ஒரு காரணத்தை, ஒரு வரலாற்றை, ஒரு கதையை முன்னிறுத்தி தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது நாட்டு மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் உன்னத பண்டிகையாகும். இதுவே வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்துமதத்தின் தனிப்பெருஞ் சிறப்பாகும்.

இதிகாசங்களிலும் புராணங்களிலும் தீபாவளிப் பண்டிகைக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. பாகவத புராணமான பவிஷ்யோத்தர புராணத்தில் தீபாவளிகா என்றும், காலவிவேகம் என்ற நூலில் சுகராத்திரி என்றும், ராஜமார்த்தாண்டம் எனும் நூலில் சுக்ராத்ரி என்றும், வட மொழி நூல்களில் வாசக்த்ரியகவுமுதி, திருத்யத்வம் என்றும் நாகநந்தம் எனும் நூலில் தீபப்ரதீபனுஸ்தவம் என்றும் நீலமேக புராணம் என்ற நூலில் தீபோத்சவம் என்றும் பல பெயர்களில் தீபாவளிப் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

*****
உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். ராமரும், கிருஷ்ணரும் அவதரித்த பூமி. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிக சிரத்தையுடன் மிக விமரிசையாகக் கொண்டாடு கிறார்கள். தீபாவளி நாளை ராமர் ராவணனை வதம் செய்து வெற்றி வாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்லீலா என்ற நாடக வடிவக் கூத்து நடைபெறும்.

மேலும் தீபங்கள் ஏற்றி ஒளிதரும் நாளாக இவர்கள் இந் நாளைக் கருதுவதால் தீப ஒளியையே தீபாவளி என்கிறார்கள். தீபாவளியன்று குடும்பத்திலுள்ளவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வீடு திரும்பி விடுகின்றனர். வனவாசம் முடிந்து திரும்பி வரும் ராமரை  தீபங்கள் ஏற்றி வரவேற்றது போல, வீட்டை விட்டுப் போனவர்கள் திரும்பிவரும் இச்சமயத்தில் வீட்டையே ஒளிமயமாக்கி வரவேற்கின்றனர்.

தீபாவளி அன்று காலை லட்சுமி பூஜை செய்து இனிப்பு மற்றும் பரிசுகளைப் பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் பல வகை உணவுகளை சமைத்து விருந்துண்டு களிக்கின்றனர். அன்று மாலை விநாயகர், லட்சுமி படங்களை வைத்து பஜனைகள் பாடி ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பூ வகைகளைக் கொளுத்திக் கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு மறுநாள் ‘பையாதூஜ்’ என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து சகோதரனின் நலனிற்காகப் பிரார்த்திக்கின்றனர். சகோதரன் அவர்களுக்குப் பரிசுகள் தருகிறார்.

மங்கள நாளான தீபாவளியன்று செல்வத்தை அளிக்கும் அன்னபூரணியை வணங்கி, புதுக்கணக்கைத் தொடங்குகிறார்கள். அவர்கள் அன்னபூரணியைத் தங்கமயமாக காசியில் தரிசிக்கும் திருநாள் தீபாவளி. தனதிரயோதசி தினத்தன்று அன்னபூரணிக்கு பூஜைசெய்து திரையிட்டு விடுவார்கள்.

மறுநாள் தீபாவளியன்று தரிசனத்திற்கு திரையை விலக்குவார்கள். குபேரலட்சுமி பூஜை நடக்கிறது. பூப்போன்ற சாதத்தை மலைபோல் வடித்துக் கொட்டுகிறார்கள். அதையே அன்னக்கூடம் என்கிறார்கள். அன்னபூரணிக்குப் படைத்துப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தீபாவளி இப்படி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

******
மகாராஷ்டிரத்தில் தீபாவளிப்பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதை நரக சதுர்த்தசி என்று அழைக்கிறார்கள். முதல் நாள் எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்கிறார்கள். வீட்டை வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கிறார்கள். தரையில் விதவிதமான அழகிய மண்பொம்மைகள் வைத்து தோரணம் கட்டுவார்கள். புதிய ஆடை அணிகலன்களை அணிந்து பெரியோர்களை வணங்கி ஆசி பெறுவார்கள்.

இரண்டாவது நாள் லட்சுமி பூஜை. அன்று லட்சுமி வீடு தேடி வரும் நாள். அதைப் புதிதாக ஒரு பொருளை வாங்கிக் கொண்டாடுவார்கள். முக்கியமாக எல்லோருமே ஒரு புதிய துடைப்பம் வாங்குவார்கள். துடைப்பத்தை லட்சுமி என்றே சொல்லி விற்பார்கள். வீட்டில் அதை வைத்துப் பூஜைசெய்து, குங்குமம் இட்டு உபயோகிப்பார்கள். அன்று புதிய கணக்குத் தொடங்குவார்கள்.

மூன்றாம் நாள் பண்டிகை, தீபாவளி பட்வா எனப்படும். இது மனைவி கணவருக்காக நோன்பு நோற்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து கணவரைப் பணிந்து ஆரத்தி எடுத்து வணங்குவார் மனைவி. கணவருக்கு நீண்ட ஆயுளுடன் இணை பிரியாமல்  இருக்க வேண்டும் என்று தேவியை மனமாற வேண்டிக்கொள்வர். நான்காம் நாள் பண்டிகை பாவ்-பீஸ் எனப்படும்.

இது சகோதர சகோதரிகளுக்கு மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. சகோதரிகள் உடன்பிறந்த வர்களுக்கு ஆரத்தி எடுத்து நல்விருந்தளிப்பர். சகோதரர்களிடமிருந்து பணமும் பரிசும் பெற்று மகிழ்வார்கள். பண்டிகை நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் பலகாரங்கள் செய்வதில் போட்டி இருக்கும். பலவிதமான இனிப்புகளும் காரங்களும் செய்து மகிழ்வார்கள். வீடெங்கும் ரங்கோலி கோலம் போடுவதிலும் பலத்த போட்டி நிலவும்.

*****
குஜராத்தில் தீபாவளிதான் வருடத்தின் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அவர்களின் வருடப்பிறப்பும் அத்துடன் சேர்வதால் இப்பண்டிகையை ஐந்து நாட்களுக்கு கொண்டாடு கிறார்கள். முதல்நாள் பண்டிகை ‘தன்தோஸ்’ எனப்படும். அன்று தங்கம் வெள்ளி நாணயங்களுடன் லட்சுமி பூஜை நடைபெறும். இரண்டாம் நாள் ‘காளி சௌதாஸ்’ எனப்படும். அன்று நோன்பு நடக்கும். செல்வம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க பூஜை செய்து வேண்டிக்கொள்வார்கள்.

மூன்றாவது நாள் தீபாவளிப் பண்டிகை. அன்று விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும். கணக்குப் புத்தகங்களை வைத்து வியாபாரிகள் பூஜை செய்வார்கள். அது முடிந்த பிறகுதான் வாண வேடிக்கைகள் செய்யவேண்டும் என்பது ஐதீகம், எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யும் வழக்கம் இல்லை.

 பூஜை கணேசருக்கு வழிபாடு செய்வதுடன் தொடங்குகிறது. தொடர்ந்து லட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடைபெறும். நான்காம் நாள் பண்டிகை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று நல்ல செயல்களை புதிதாகச் செய்யத் தொடங்குவார்கள்.

வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு சிறு தொகையையாவது மரியாதைக்காகப் பெறுவது வழக்கம். ஐந்தாம் நாள் விழா பாய்-பீச் எனப்படும். அன்று சகோதரர்கள் தமது சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்று விருந்துண்டு மகிழ்வர். அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். அன்றுடன் ஐந்து நாள் தீபாவளிப் பண்டிகை முடிகிறது.

ஐந்து நாட்களும் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஒரு வகை இனிப்பு தயாரித்து உண்பார்கள். கோதுமையை உடைத்து சர்க்கரைப்பொங்கல் போலச் செய்வார்கள். புத்தாண்டு தினத்தில் உப்பு விற்பனை ஜோராக நடக்கும். சிறு குழந்தைகள் கூட உப்பு விற்பது வழக்கம். அதை வாங்கி சிறிது வாயில் போட்டு வைத்திருந்து பிறகு சுவைப்பது அவர்கள் வழக்கம்.

*****

மேற்கு வங்காளத்தில் பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் மேற்கொள்கின்றனர். மகாளய அமாவாசையன்று தொடங்கி துர்க்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர். மகாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. அச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி இரவில் மாவிலைத் தோரணங்கள் கட்டி பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள்.

மாலையில் லட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாய் புட்கோ’ என்ற பெயரில் பெண்கள் சகோதரர்கள் நலன் வேண்டி சகோதரனுக்கு சந்தனப்பொட்டிட்டு புதிய ஆடை பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

வங்காளத்தின் பல பகுதிகளில் பண்டிகையன்று பதினான்கு வித கீரைகள் சமைப்பது ஒரு சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. விஜயன் என்ற அசுரனை வதம் செய்தவள் காளி என்றும், கோபம் நிறைந்த காளி தேவியின் உக்ரத்தை சங்கரன் தணித்த நாளாகக் கருதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.

*****

ராஜஸ்தானில் தீபாவளிப் பண்டிகையை ‘தீவாளி’ என்றும் ‘தீப மாலிகா’ என்றும் அழைக்கிறார்கள். தீபாவளி ஆண்டு என்றே ஆண்டு கணக்கு வைக்கிறார்கள். தீபாவளியை மார்வாடிகள் ‘லட்சுமி பூஜை’ என்று தான் கொண்டாடுகிறார்கள். முதல்நாள் மாலையே பூஜையைத் தொடங்கி விடுவார்கள்.

இரவு முழுவதும் பூஜை தொடர்ந்து நடைபெறும். பூஜைக்குப் பயன்படும் லட்சுமிதேவியின் படம் வெள்ளித் தகட்டில் இருக்கும். அதை ஒவ்வொரு குடும்பத்தினரும் வம்சாவழியாக வைத்துப் பாதுகாத்து பண்டிகை நாளில் பூஜை செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதும், புதுக்கணக்கு தொடங்கு வதும், புது முண்டாசு அணிவதும் இங்கே தனிச்சிறப்பாகும்.

முத்துரத்தினம்