ஓஷோ மறைந்திருக்கும் உண்மைகள்



தாயின் பராமரிப்பில் வளராதவரால்  பெண்களை நேசிக்க முடியாது!

விண்மீன்கள் தகர்ந்து போனாலோ, புதிய விண்மீன்கள் பிறந்தாலோ, பிரமாண்ட மான ஓசைகள் பிறக்கும். அவை பூமியருகிலும் கேட்கும். அதை நாம் கேட்க முடியுமானால், உடனே நாம் செவிடாகி விடுவோம். அதைக் கேட்க முடியாமல் போவதாலேயே நம் காதுகள் பாதுகாப்புடன் இருக்கின்றன. நமது செவிப்புலனின் திறன் ஒரு எல்லைக்குள்தான்.மனமும் அப்படித்தான்; எல்லைக்குள் அடங்கியது. நம்மைவிட நாய்கள் அதிக மோப்ப சக்தியுடையன.

அது உணரும் வாசனையை நம்மால் அறிய முடியாது. நம்மால் கேட்க முடியாத ஓசையை ஒரு குதிரை கேட்டு விடும். ஒன்றரை மைல் தூரத்திற்கு அப்பால் சிங்கம் வருவதைக் குதிரை, வாசனை யால் அறிந்துகொண்டுவிடும். நம்மால் அது முடியாது. நாம் ஒரு வகைக் கூட்டுக்குள் இருக்கிறோம்.

வானொலியில் பல ஊர்களின் ஒலிபரப்புகளைக் கேட்கலாம். பொத்தானை அழுத்திய பிறகுதான் அதில் இசை பிறந்ததா? நாம் திறந்தாலும், திறக்காவிட்டாலும், பல ஊர்களின் பாட்டும், பேச்சும், அலைகளாக அலைந்துகொண்டுதான் இருக்கின்றன. எங்கும் வானொலி மூலமே அவற்றைக் கேட்க முடிகிறது.

எல்லா நாடுகளின் வானொலி ஒலிபரப்புகளும் நம் அறையில் தொடர்ந்து அலையடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கேட்க முடிவதில்லை. வானொலி பாடாத போதும் அவை அங்கே இருக்கவே செய்கின்றன.இந்த உலகில் நம்மைச் சுற்றி ஏராளமான ஒலிகள், ஒரே ஆரவாரம்தான், என்றாலும் நமக்குக் கேட்பதில்லை. என்றாலும், அவற்றின் பாதிப்பிலிருந்து நம்மால் தப்ப மடியாது. நமது, தசை நார், நரம்பு, இதயத்துடிப்பு - எல்லாவற்றையும் அவை பாதித்துக்கொண்டே இருக்கின்றன.

நமது கவனத்திற்கு வராமலேயே, நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன பல அம்சங்கள்.நம் மூக்கு உணராத சில வாசனைகள் நமக்கு நோயைக் கொண்டு வந்துவிடுகின்றன. அவை வாழ்வதற்கு, உங்கள் அங்கீகாரம் தேவையில்லை.நம்மைச் சுற்றிலும், பல சக்திப் புலங்கள் நம்மைப் பாதித்துக்கொண்டே இருப்பதாக, சோதிடம் கூறுகிறது. குழந்தை பிறந்தவுடனே, பூமியின் சகல தாக்கங்களுக்கும் அது உள்ளாகிறது. அறிவியல் மொழியில் சொன்னால், பிறப்பு என்பது, ‘பாதுகாப்பற்ற வெளிப்பாடு.’

கேமராவில், வெளிப்படாத, பதிவாகாத படச்சுருள் இருக்கிறது. பொத்தானை அழுத்தியதும், வினாடிக்கும் குறைவான நேரத்தில், ஒரு அடைப்பு, திறந்து மூடிக் கொள்கிறது. அதன் முன்னால் இருக்கும் காட்சி உள்ளே புகுந்து பதிந்து விடுகிறது, படச்சுருளின் ஒரு பாகத்தில். அதை மேலே நகர்த்திவிட்டே, அடுத்தப் படம் எடுக்கிறோம். ஃபிலிம், காட்சியை நிரந்தரமாகப் பற்றிக்கொள்கிறது.

அதேபோல, கருப்பையில் இருப்பதே, குழந்தை யின் முதல் பதிவு, படப்பிடிப்பு! குழந்தை வெளியே பிறப்பது, இரண்டாவது படப்பிடிப்பு! அதாவது, இரண்டாவது வெளிப்பாடு. இந்த இரண்டு பதிவுகளும் குழந்தையின் மனதில், நன்றாகப் பதிவாகி விடுகின்றன.

 உலகம் எப்படி இருக்கிறதோ, அப்படியே பதிந்து விடுகிறது. அந்த நேரத்தில்தான், ‘எம்பதி‘ என்ற உணர்ச்சிக் கலப்பும் ஏற்படுகின்றது.90% மக்கள் இரவில்தான் பிறக்கிறார்கள்! கணித முறைப்படி, இரவிலும், பகலிலும் சரி சமமாகவே பிறப்பு ஏற்பட வேண்டும். நான்கைந்து சதவிகிதம் இப்படியும் அப்படியும் இருக்கலாமே தவிர 90% இரவில் பிறப்பது என்பது எப்படி? பகலில் பிறப்பு 10%தான் என்பது ஏன்? இதற்குக் காரணம் இருக்க வேண்டும்.

ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விளக்குகிறேன்.இரவில் பிறக்கும் குழந்தையின் முதல் உலக அனுபவம் ஒளியல்ல; இருள்!இது ஆழமான விஷயம் என்பதால், சான்றுடன் விளக்க விரும்புகிறேன். அப்போது கதிரவன் இல்லை. அதன் சக்தி இல்லை. எங்கும் உறக்கம் இதுதான் குழந்தை யின் முதல் பதிவு.இதற்கான காரணத்தை புத்தரிடமோ, மகாவீரரிடமோ கேட்டால், உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள் இரவில் பிறக்கின்றன என்று சொல்வார்கள்.

அந்த உயிர்கள் தாம் பிறக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க சக்தியற்றவை. நூற்றுக்கணக்கான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் முக்கியம். பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்; இருளில், செயலற்றுக் கிடக்கிறார்கள்.உதய காலத்தில் பிறப்பவர்கள் ஆற்றலுடன் பிறக்கிறார்கள். பகலவன் மறைந்த பிறகு, இரவின் இருளில் பிறப்பவர்கள் தூங்கு முஞ்சிகளே. காலையில் பிறப்பவரே சக்தி ஏறப் பெற்றவர்கள். பகலில் படம் எடுப்பதற்கும் இரவில் படம் எடுப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் அது.

‘வெளிப்படுதல்’ பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சோதிடம் இந்த அம்சத்தோடு ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கிறது. ஆய்வுகள் மேற்கொண்ட விஞ்ஞானிகளும் இதைத்தான் அதிகம் வலியுறுத்துகிறார்கள்.

கோழிக்குஞ்சு பிறந்தவுடன் தாயின் பின்னால் ஓடுவதைப் பார்க்கிறோம். ஆனால், தாய்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது குஞ்சின் முதல் பதிவோடு சம்பந்தப்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக நூற்றுக்கணக்கான சோதனைகள் செய்து பார்த்த பின்பே இப்படிக் கூறுகிறார்கள்.

அதில் ஒரு சோதனை... குஞ்சு இன்னும் பிறக்கவில்லை. முட்டைச் சுவரை உள்ளிருந்தபடி கொத்திக் கொண்டிருக்கிறது... பிறகு, முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது... அந்தச் சமயம் பார்த்து, தாய்க் கோழியை அகற்றி விட்டு, அங்கே ஒரு பலூனை வைத்துவிட்டார்கள்!

கோழிக்குஞ்சு கண் திறந்ததும் முதலில் பார்த்தது பலூனைத்தான். அதன்பிறகு குஞ்சுகள் அதைத்தான் தாயாக நேசித்தன. பலூன் காற்றில் நகர, அதைத் துரத்திக்கொண்டு குஞ்சுகள் ஓடின. களைத்தபோது பலூனை ஒட்டிப் படுத்துக் கொண்டன! தாயைத் தேடவே இல்லை!

கோன்ராட் லோரென்ஸ் என்ற விஞ்ஞானி இத்துறையில் நிறைய ஆய்வுகள் நடத்தியவர். வெளிப்படும் காலம் மிக முக்கியமானது என்பது அவர் முடிவு. பிறக்கும் முதல் கணமே பிரதானமானது. பிறந்தவுடன் முதல் பதிவு தாயின் உருவம். அதனால் தான் குஞ்சுகள் அதன்பின்னே ஓடுகின்றன.

ஆண் குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளராமல் போய்விட்டால், பெண்களை நேசிக்கும் பண்பை இழந்துவிடும். அதன் மூளையில் பெண்ணின் உருவம் சரியாகப் பதியாமல் போவதே அதன் காரணம். ஆண் ஓரினச் சேர்க்கை மேல் நாடுகளில் பெருகி வருகின்றது. தாயின் வடிவம் அழுத்தமாக மனதில் படியாமையே காரணம். ஆண், பெண் காதல் அங்கே குறைந்துகொண்டே போகிறது.

ஒரே பால் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. இயற்கைக்குப் புறம்பானது அது. ஆனால், அங்கே அப்படித்தான் ஆகும்!இனக்கவர்ச்சி, இன்னொரு வகையில் நிலைப்படுத்தப்படுகிறது. குழந்தை பிறந்ததும் முதலில் யாரைப் பார்க்கிறது என்பது முக்கியம். பிறந்தவுடன் தாயின் முகம் பார்க்கும் பெண் குழந்தை வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்காது! அது முதலில் ஓர் ஆண் முகம் பார்க்க வேண்டும். அது தந்தையின் முகமாகவும் இருக்கலாம். அப்போதுதான் அது பிற்காலத்தில் ஓர் ஆணை நன்றாக நேசிக்க முடியும்.

பெண்களைவிட ஆண்கள் சிறந்து விளங்குவதற்குக் காரணம், பையன்கள் பிறந்ததும் தாய் முகம் பார்ப்பதால்தான்! அவள் பார்வையில் அவன் வளர்க்கப்படுவதால்தான், மேலுயர்கிறான். ஆண் பிள்ளைக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு. முதல் பதிவு, பெண் பிள்ளைக்குக் கிடைப்பதில்லை.பெண் குழந்தை முதலில் தன் தந்தை முகம் பார்க்காதவரை, அவள் ஆணுக்கு நிகராக முடியாது.

அரசியலிலோ, வேலை வாய்ப்புகளிலோ, பொருளாதாரச் சுதந்திரத்திலோ ஆணுக்கு நிகராக வரமுடியாமல் அவள் பலவீனமடைவதற்கான அடிப்படைக் காரணம், மனோதத்துவ ரீதியான அந்த முதல் பதிவுதான்! இந்தப் பலவீனத்தை, இதுவரை எந்தச் சமுதாயமும் வென்றதாகத் தெரியவில்லை.

ஒரு சிறிய பலூனே கோழிக்குஞ்சை அவ்வளவு பாதிக்கிறது என்றால், அது அதன் மனதில் அழுத்தமாய்ப் படிகிறது என்றால், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் நம்மைப் பாதிக்காதா? பிறக்கும் கணத்தில், நமது மூளையின் படச்சுருளில், பிரபஞ்சமே பதிவாகி விடுகிறது. உங்கள் முழு வாழ்வின் விருப்பு வெறுப்புகளை அதுவே தீர்மானிக்கிறது.

அந்தக் கணப்பொழுதில் கிரகங்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன. ஓர் ஆழமான வகையில், அவையெல்லாம் பிறக்கும் குழந்தையின் மூளையில் படிந்து விடுகின்றன, அந்தக் கிரகங்கள் முக்கியத்துவம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அவற்றிலிருந்து எவ்வகைக் கதிர் வீச்சு, எந்த அளவு பூமியின் மேல் பாய்கிறது, என்பதைப் பொருத்து அமைகிறது.

வானத்துக் கிரகங்கள் எல்லாம், தனித்தன்மை கொண்ட கதிர் வீச்சை வெளிவிடுபவை. வெள்ளிக்கிரகத்தின் கதிர்கள் சாந்தமானவை. நிலாவின் கதிர்கள் வேறானவை. ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சும், அதைச் சுற்றியுள்ள புகை மண்டலத்தைப் பொருத்து அமைகிறது.அந்தக் கிரகங்கள், விண்மீன்கள், விண்மீன் குடும்பங்கள், வெகு தூரத்து அதிசூரியர்கள் எல்லாம் அடி வானத்தில் இயங்கிக் கொண்டிருக்கையில், ஒரு குழந்தை பிறக்கும்போது, அவை, அதைப் பாதிக்கின்றன.

அந்தக் கணப்பொழுதின் பிரபஞ்சச் சூழலின் பலம், பலவீனம், தகுதி, எல்லாம் அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுதும் பாதித்துக் கொண்டே இருக்கும்.அணுகுண்டு வீச்சின் விளைவுகள் என்ன என்பதை அறிவது போன்றது அது. மக்கள் நிறைந்த ஹிரோசிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் சாவார்கள் என்பது மட்டும், வீசுவதற்கு முன்பு தெரிந்திருந்தது. ஆனால், பல தலைமுறைகளாக, எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பது அப்போது தெரியவில்லை.

ஹிரோசிமா, நாகசாகி  நகர்களில் உயிர் விட்டவர்கள், ஒரு நொடிப் பொழுதில் இறந்து போனவர்கள். ஆனால், உயிர் தப்பிய மக்களும், தாவர வர்க்கமும், விலங்கு, பறவைகளும், மீன்களும், முன்னறியாத ஏதோ ஒன்றால் நிரந்தரமாகப் பாதிப்படைந்தன. அதன் கொடிய பாதிப்பு என்ன என்பது பத்துத் தலைமுறைகளுக்குப் பின்னால்தான் சரியாகத் தெரியும்! அணுக்கதிர் வீச்சு, அந்த அளவுக்கு ஆழமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

உயிர் பிழைத்த பெண்களின் கரு முட்டைகள் அணுக்கதிர் வீச்சுக்குள்ளாயின. அந்தக் கருக்களிலிருந்து சாதாரண குழந்தைகள் உருவாக முடியவில்லை. குழந்தைகள் குருடாய், முடமாய்ப் பிறந்தன. சிலவற்றிற்கு நான்கு கண்கள், எட்டுக் கண்கள்கூட இருந்தன! அதை விளக்க முடியாது. வினோத வடிவில் குழந்தைகள் சிதைந்தும், மாறுபட்டும் பிறந்தன.

நோய் கொண்டு, மூளை சிதைந்தும், அதிபுத்திசாலியாகவும், முன்னறியா முறையில் பிறந்தன. ஒன்று மட்டும் நிச்சயம். அவை இயல்பாக இல்லை. சாதாரண மனிதக் குழந்தைகளாக இல்லை.

கதிரவனுடைய ஆற்றலோடு ஒப்பிடும்போது, அணுகுண்டு அற்பம்தான். இந்த அற்பமானதே பூமியின் மேல் இவ்வளவு நாசத்தை உண்டாக்குமானால், கதிரவனின் சக்தியை கற்பனை செய்து பாருங்கள். ஹிரோசிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு, ஒரு லட்சத்து இருபதாயிரம் பேரைக் கொன்றது என்றால், கதிரவனின் கதிர் வீச்சைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

நான்கு லட்சம் கோடி ஆண்டுகளாகக் கதிரவன் பூமியைக் காய்ச்சிக்கொண்டிருக்கிறது! அது குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை, பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும்! சுமார் பத்துக்கோடி மைல்களுக்கு அப்பாலிருந்து, ஒவ்வொரு நாளும் பூமியின் மேல் எவ்வளவு வெப்பத்தைக் கொட்டுகிறது!

ஹிரோசிமாவில் ஏற்பட்ட நாசம் பத்து மைல் சுற்றளவிற்குத்தான். ஆனால், பத்துக்கோடி மைல் தொலைவிலிருந்து இவ்வளவு காலமாக இவ்வளவு வெப்பம் வீசியும், அது தீர்ந்துபோகவே இல்லை. ஆனால், பிரபஞ்ச வெளியில் உள்ள மற்ற கதிரவன்களுடன் ஒப்பிட்டால், நமது கதிரவன் மிகக் சிறிய நட்சத்திரம் மட்டுமே! நாம் வானில் பார்க்கும் சிறிய விண்மீன்கள், கதிரவனைவிடப் பல்லாயிரம் மடங்கு பெரிய கதிரவன்கள்! அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மை கொண்ட கதிர் வீச்சு இருக்கின்றது. அவை எல்லாம் நம்மீது பாய்ந்து கொண்டிருக்கின்றன!

பிரபஞ்ச சக்திகள் பற்றி ஆராய்ந்தவர்களில் முக்கியமானவர் மைக்கேல் காக்குலின். பெரிய விஞ்ஞானி அவர்.  நம்மீது பாயும் பிரபஞ்ச சக்திகளில் ஒரு சதவிகிதத்தைக்கூட நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் அவர். பூமிக்கு வெளியே பல செயற்கைக் கோள்களை நாம் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம்.

அவையும் நிறைய தகவல்களை அனுப்புகின்றன. ஆனால், அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விளக்கவும் வார்த்தைகள் இல்லை. நம்மைச் சுற்றிலும் இவ்வளவு சக்திகள் இருப்பதை இதுவரை நாம் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை.

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.