பத்துமலை முருகன்



பத்துமலை முருகன் குறைவிலா வாழ்வளிக்கும் குகைக் குமரன்

குன்று உச்சியில் குமரன் கோயில் கொண்டிருக்கும் அமைப்பை, ‘குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று சொல்வார்கள். ஆனால், மலேசியாவில் ஒரு குன்றின் உச்சியிலல்ல, அங்கே குகைக்குள் கொலுவிருக்கிறார் குமரன். வள்ளி-தெய்வானை சமேதராக தரிசனம் அளித்து அருள் பாலிக்கிறார். அவர், பத்துமலை முருகன். கடல் கடந்து மலேசியாவுக்கு சென்ற தமிழர்களின் எண்ணத்திலும் வாழ்க்கையிலும் வளம் சேர்த்த, சேர்க்கும் சுப்பிரமணியர் இவர்.

கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் உள்ள இந்தக் குன்றில் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிரதான கோயில் கட்டப்பட்டது. சுண்ணாம்புப் பாறைகளாலான மலைக்கு அருகில் ஓடும் ‘சங்காய் பத்து’ நதியின் பெயரை ஒட்டி, இம்மலை பத்துமலை என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கும் தமிழர்களின் ஆன்மிக நம்பிக்கை அசைக்க முடியாதது. 18-19ம் நூற்றாண்டில் வியாபாரம், வாழ்க்கை முன்னேற்றத்துக்காக கடல் கடந்து வந்து மலேசியாவில் குடியேறிய தமிழர்கள் தங்களுடன் ஸ்ரீமகா மாரியம்மன், ஸ்ரீசுப்பிரமணியர் சிலைகளையும் கொண்டு வந்து கோயில் கட்டி தங்களைப் பாது காக்கும் தெய்வங்களாக வணங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு குடியேறிய கே.தம்புசாமி பிள்ளை, 1891ம் ஆண்டு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்கினார். அன்றிலிருந்து குகைக் கோயில் என்ற பெயரில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரபலமடைந்தது. 1892ம் ஆண்டிலிருந்து இந்த கோயிலில் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பத்துமலை முருகன் கோயிலில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வார்கள்! மலேசியாவில் உள்ள தமிழர்கள், தமிழகம், சிங்கப்பூர், தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

தமிழக பழனியைப் போலவே பத்துமலை முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் முதல் குகையில் இடும்பன் கோயில் உள்ளது. முருகனுக்கு மிகவும் பிடித்ததே காவடிதான். காவடி தூக்கி வரும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை படியேறி குகைக் கோயிலுக்கு செல்வதை பார்க்க அழகாக இருக்கும். பழனியில், முருகனின் தாய் பார்வதிதேவி, பெரிய நாயகியாய் வீற்றிருக்கும் பெரிய நாயகியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் தைப்பூசம் விழா தொடங்கும்; அதேபோல், பத்துமலை முருகன் கோயிலில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது!

பழனியில் சண்முகா நதியில் புனித நீராடி பக்தர்கள் தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர். பத்துமலையில் ‘சங்காய் பத்து’ நதியில் புனித நீராடி பக்தர்கள் இந்த முருகனை தரிசனம் செய்கிறார்கள்.2006ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் குகைக் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் அடிவாரத்தில், கோயிலின் முகப்பில், 42.7 மீட்டர் (140 அடி) உயரத்தில் உலகத்திலேயே மிகவும் பெரிய முருகன் சிலை நிறுவப்பட்டது.

ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலிலிருந்து பத்து மலை முருகன் கோயிலுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால் காவடி முதலான பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். சங்காய் பத்து நதியில் நீராடி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள். ரத ஊர்வலங்களும் நடைபெறும். வழிதோறும் ஆங்காங்கே ரதங்களை நிறுத்தி பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி, முருகனை தரிசனம் செய்வார்கள். பத்துமலை முருகன் கோயில், கோலாலம்பூர் நகரிலிருந்து வடக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1860ம் ஆண்டுக்கு முன்னால் பத்து மலை, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பிரிவு மக்களின் வேட்டைக்களமாகவும் அங்குள்ள குகைகள் குடில் களாகவும் இருந்திருக்கின்றன.

குகையில் அமைந்துள்ள பிரதான கோயிலுக்கு செல்ல 272 படிகளை ஏறிக் கடக்கவேண்டும். பத்துமலைக்கு சென்றதும் கோயில் அடிவாரத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தால், அந்தப் படிகள் நெட்டுக்குத்தலாக, காவி- வெள்ளை வர்ணம் பூண்டு காட்சியளிக்கும். திகைப்பை விலக்கி விட்டு படியேறத் தொடங்கினால், அத்தனை படிகளும் தாமே நம்மை மேலே மேலே உயர்த்திக்கொண்டு போவது போல அத்தனை எளிதாகப் படியேற முடிகிறது! 15 நிமிடங்களில் முதல் குகையை அடைந்துவிடலாம்.

இந்த குகை அதிசயத் தோற்றம் கொண்டுள்ளது. அதாவது, வானிலிருந்து சூரிய ஒளிக் கதிர்கள் மூன்று துவாரங்கள் வழியாக குகைக்குள் விழுகின்றன. அந்த தெய்வீக வெளிச்சமே மெய்சிலிர்க்க வைக்கிறது. மழை நாட்களில் அவை வழியாக மழை பொழியும் பேரழகையும் உணர்ந்து அனுபவிக்க முடிகிறது!  உள்ளிருந்து மேலும் சில படிகளில் ஏறிச்சென்றால், பிரதான குகை கோயிலில் குமரன், வள்ளி-தெய்வானையுடன் திவ்ய தரிசனம் தருகிறார்.

வானுயர, பிரமாண்டமாய் நிற்கும் மலைகளுடன் ஒப்பிடும்போது நம் உருவம்தான் எவ்வளவு சிறியதாக இருக்கிறது! அந்த பிரமிப்போடு சந்தோஷமாகக் குரல் கொடுத்தால் உடனே அந்த மலை அப்படியே எதிரொலிக்கிறது - முருகனின் அசரீரி ஆசீர்வாதம்போல! நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நம் வாழ்வில் எதிரொலிக்கும் என்ற தத்துவத்தையும் இந்த எதிரொலி உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, பத்துமலை சுப்பிரமணியரை மனமுருகி வேண்டினால், வேண்டியதை அருள்வார் என்ற நம்பிக்கையை அங்கே வரும் ஒவ்வொருவருக்கும் தானாக வந்துவிடும்.

272 படிகள் ஏறி அழகு முருகனை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்ததும், நம் மனதில் உள்ள எல்லா  சுமைகளும் இறங்கி வாழ்க்கையே எளிதானதாக, இன்புறத்தக்கதாக மாறும் என்ற  நம்பிக்கை பிறக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா தவிர, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் தினமும் பத்துமலை முருகன் கோயிலுக்கு வருகின்றனர்.

பத்துமலையின் அடிவாரத்தில் மூன்று குகைகள் உள்ளன. அவற்றில் ராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்கள், பிரசித்திபெற்ற தமிழ் புலவர்கள், சித்தர்களின் ஓவியங்களைக் கண்டு மகிழலாம். இந்த மூன்று குகைகளும் வள்ளுவர் கோட்டம், கலைக் களஞ்சியம், ராமாயண குகை என்று அழைக்கப்படுகின்றன. ராமாயண குகையில் ராமர் வரலாறு ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இங்கே  50 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது; ஆஞ்சநேயருக்குக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. 2001 நவம்பரில் இக்கோயில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. இந்தக் கோயில்களில் இறைவனுக்கு தமிழில்தான் அர்ச்சனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் கோயில், ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஆகம விதிகளின்படி கோயிலில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. மலேசிய அரசும் கோயில் நிர்வாகத்திற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றது. மலேசியா செல்பவர்கள் கோலாலம்பூர் போய் அங்கிருந்து பத்துமலை ஸ்ரீசுப்பிரமணியர் குகை கோயிலுக்கு சென்று அவரை உளமாற தரிசனம் செய்யும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் தவறவே விடக்கூடாது என்ற ஏக்கம் தமிழகத்துக்குத் திரும்பும்போது ஏற்படுவதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை.

கோலாலம்பூரிலிருந்து  இரா.சந்திரசேகரன்