இசைக்குயிலுக்கு பாராட்டுவிழா!



தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற பாடகி பி.சுசீலா. தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ்மொழி யில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும், பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.

1953-ல் ‘பெற்ற தாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூஷண் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசிய விருதுகளையும், 11 முறை மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். சினிமாவிற்கு வந்து 65 வருடங்களைக் கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும்.
சுசீலாவின் சேவையைப் பாராட்டி லயா மீடியா சார்பாக அவரின் அதிதீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

‘‘இசை ரசிகன் என்ற அடையாளம் தவிர எனக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜ் சாருக்கு பிரம்மாண்ட விழாவை நடத்தியிருக்கிறேன். சுசீலா அம்மாவுக்கும் பெரியளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது நெடுநாள் திட்டம். விழா பற்றி சுசீலா அம்மாவிடம் தெரிவித்ததும் அவரும் விழாவுக்கு வருவதற்கு சம்மதித்தார்.

மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளஇருக்கிறார்கள்.

சுசீலா அம்மாவும் நேரிடையாக பிரபலங்களுடன் பேசி அழைப்பு கொடுத்து வருகிறார். லாப நோக்கமில்லாமல் நடைபெறவுள்ள இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசைத் திருவிழாவாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

- எஸ்