விஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ராக்‌ஷி!



நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவின் ஜோடியாக அனுதாபங்களை அள்ளிய ராக்‌ஷி கன்னாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஷாலுடன் ‘அயோக்யா’, சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’ என காலில் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறார்.

‘‘சென்னை பிடிச்சிருக்கு.... லாங்குவேஜ் தெரிஞ்சிருந்தால் தான் நல்ல நடிகையா நீடிக்க முடியும்ங்கறது என்னோட நம்பிக்கை. அதனாலேயே முன்னாடி தெலுங்கு சரளமா பேச கத்துக்கிட்டேன். தமிழ் இண்டஸ்ட்ரிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ் பேசுறதுக்கு.... கத்துக்க கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இட்ஸ் ஈஸி லாங்குவேஜ்.  

என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல மலையாளம்தான் டஃப். அங்கே மோகன்லால் சாருடன் ‘வில்லன்’ல சின்ன ரோல் பண்ணினபோதுதான் இங்கே தமிழ்ல ‘சைத்தான் கா பச்சா’ கமிட் ஆனேன். தமிழ், மலையாளம் என ரெண்டு இண்டஸ்ட்ரியிலும் ஒரே டைம்ல அறிமுகமானது எதிர்பாராமல் நடந்தது. இப்ப, நீங்க தமிழ்ல பேசினா ஓரளவு புரிஞ்சுக்குவேன்’’ என உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் ராக்‌ஷி கன்னா.“தெலுங்குலே நீங்கதான் நம்பர் ஒண்ணுன்னு கேள்விப்பட்டோம்...”

“அப்படி இருந்தா சந்தோஷம்தான். என்னோட பூர்வீகம் தில்லி. எனக்கு ஒரு அண்ணா இருக்காங்க. பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சிருக்கேன். சின்ன வயசில இருந்து ஐஏஎஸ் ஆகணும்ங்கறதுதான் கனவு. ஆனா, ஆக்டிங் பக்கம் வந்தது எதிர்பாராமல் நடந்த இன்ஸிடென்ட். அப்பெல்லாம் நான் கொஞ்சம் கூச்ச சுபாவமா இருப்பேன்.

மாடலிங்கிற்கான போட்டோ ஷூட் பண்ணும்போதே, வெட்கப்பட்டு வீட்டுக்கு ஓடியிருக்கேன்.  இந்தியில் அறிமுகமான ‘மெட்ராஸ் கஃபே’யின் ஆடிஷன் டெஸ்ட்டின் போது கூட அதே ஷை டைப் தான்.  அந்த  ஆடிஷன்லேயும் சொதப்பிட்டேன். இப்படி சினிமா பத்தி எதுவும் தெரியாமல் வந்தேன். இங்கே வந்த பிறகுதான் சினிமாவை புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

தெலுங்கில் ‘மனம்’ல அறிமுகமானேன். அதுலே சின்ன ரோல்தான்.  ஆனா, ரொம்ப ஸ்டிராங் அஸ்திவாரமாக அமைஞ்சது.  நான் டோலிவுட்ல நடிக்க வந்த புதுசுல அங்கே என்னை ஒரு நார்த் இண்டியன் பொண்ணாக மட்டும்தான் பார்த்தாங்க. அதுக்குக் காரணம் இருக்கு. நிறைய வட இந்திய பெண்கள், தென்னிந்திய பெண்களின் சாயல்கள்ல இருக்கமாட்டாங்க.  

ஆனா, தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்சதுல என்னை தெலுங்கு கேர்ள் ஆகவே அங்குள்ள ஆடியன்ஸ் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அது என்னோட லக். அதுவும் ‘னிவாசா கல்யாணம்’ல நான் அவங்களோட ட்ரெடிஷனல் பொண்ணாகவே தெரியுறேன்னு பாராட்டுகளும் கிடைச்சது. நான் நடிக்க வந்தது எப்படி ஆக்ஸிடென்ட்டோ, அதே மாதிரிதான் தமிழ், தெலுங்கிற்கு என்ட்ரி ஆனதும் ஆனந்த அதிர்ச்சிதான்.”

“தமிழில் உங்க ரூட் என்ன? கிளாமரா? ஹோம்லியா? இல்லைன்னா ஆக்‌ஷனா?”

“ஆக்‌ஷன், கிளாமர் ரெண்டுமே போற போக்குல பண்ணலாம். ஆனா, அதைவிட, பெர்ஃபார்ம்ல பெயர் வாங்குற கேரக்டர்கள் தான் முக்கியம். நல்ல நடிகைன்னு பெயர் வாங்குறதுதான் அவசியம். மலையாள ‘வில்லன்’ல சின்ன ரோல்தான் பண்ணினேன். ஆனா, என்னோட கேரக்டர் அதில் பேசப்பட்டுச்சு. அதுதான் எனக்கு வேணும். கதை சொல்லவர்றவங்க கிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட் படிச்சுப் பார்த்து, எனக்கு முக்கியத்துவம் இருக்கற படங்கள்லதான் செலக்ட் பண்றேன். சின்ன ரோலோ பெரிய ரோலோ.. லாங்குவேஜ் முக்கியமில்ல. நல்ல ஆக்டர்னு பெயர் வாங்கணும் அதான் நடிகைக்கு முக்கியம்.”

“இங்கே ‘இமைக்கா நொடிகள்’ பெரிய ஹிட்டு. நயன்தாராவும் விஜய் சேதுபதியும் என்ன சொன்னாங்க...?”

“படத்துலே அவங்களோட எனக்கு காம்பினேஷன் சீன்கள் அமையல. அனுராக், அதர்வாவுடன் தான் நடிச்சேன். ‘விக்ரம் வேதா’ பார்த்ததில் இருந்து விஜய்சேதுபதியுடன்  நடிக்கணும்னு ஆசை வந்திடுச்சு. அதே மாதிரி அட்லீயோட ‘தெறி’, ‘மெர்சல்’ ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய்- அட்லீ காம்பினேஷன்ல நடிக்கணும்ங்கறது லேட்டஸ்ட் ஆசை. சீக்கிரம் ஆச நிறைவேறணும்னு ப்ரே பண்ணுங்க பாஸ்.”
“இப்ப நடிக்கற படங்கள்ல என்ன ரோல்..?”

“நான் ‘இமைக்கா நொடிகள்’ படத்துலே பண்ணின கேரக்டருக்கு நேர் எதிரான கேரக்டர்லே ‘அடங்க மறு’ல பண்ணியிருக்கேன். ‘சைத்தான் கி பச்சா’வில் ஷூட்டிங் நடக்கும் போது செம கலகலப்பா இருக்கும். ஷாட் போகும்போது, நிறைய தடவ வாய்விட்டு சிரிச்சிடுவேன். ‘ராஷி சிரிக்காதீங்க’னு டைரக்டர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அப்படி ஒரு ஃபன்னி மொமன்ட். ‘அடங்கமறு’ல ஜெயம்ரவி ரொம்ப கூல் பர்சன்.  விஷாலுடன் நடிக்கும் ‘அயோக்யா’ ஷூட் ஆரம்பிச்சாச்சு.”

“ராக்‌ஷியோட பர்சனல் பேசலாமே..?”

“ம்ம்.. பேசலாமே! ஆக்ட்ரஸுக்கு ஃபிட்னஸ் ரொம்ப அவசியம்னு நம்புறேன். டெய்லி ஒன்றரை மணி நேரம் ஜிம் ஒர்க் அவுட் பண்ணிடுவேன். அப்புறம், ஸ்பைஸியான ஃபுட் எதுவும் பிடிக்காது. சாப்பாட்டு விஷயத்துல நிறைய சாப்பிடுற ஆளு இல்ல. ‘Eat healthy work hard’ அதுதான் என்னோட சீக்ரெட்.

வொயிட் அண்ட் பிளாக் என்னோட லக்கி கலர்ஸ். இன்னொரு சீக்ரெட் சொல்றேன். யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுவேன். Hidden talent அதான். அடிக்கடி மியூசிக் கேட்பேன்.  ஐயெம் எ ட்ராவல் bird.  பைக்னாலும், கார்னாலும் அதில் லாங் ட்ரைவ் போறது பிடிக்கும். அவ்ளோதான்!”

- மை.பாரதிராஜா