மணியார் குடும்பம்



பெரிய திரையில் டிவி சீரியல்!

ஒரு காலத்தில் ஊருக்கே சோறு போட்டவர்கள் தம்பி ராமையாவின் முன்னோர். இவர் காலத்திலோ சாப்பாட்டுக்கே சிங்கியடிக்க வேண்டிய நிலைமை. இந்த நெருக்கடியிலிருந்து ‘மணியார் குடும்பம்’ மீள முடிந்ததா என்பதே கதை.ஹீரோ உமாபதி, கமர்ஷியல் ஹீரோவுக்கான சகல தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார்.
நாயகி மிருதுளா அப்படியொன்றும் அழகில்லை யென்றாலும் சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். படத்தின் இரண்டாவது நாயகன் எனுமளவுக்கு முக்கியமான வேடம் தம்பிராமையாவுக்கு. ஊரார் படத்திலேயே ஊடு கட்டி அடிப்பவர், மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திலென்றால் கேட்கவும் வேண்டுமா? பின்னி பெடல் எடுக்கிறார்.

விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, ராதாரவி, பவன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கம் புலி உட்பட அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கவுரவ தோற்றத்தில் வரும் சமுத்திரக்கனி தன் பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளார்.

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் திருநெல்வேலியின் அழகு கண்களுக்கு விருந்து. தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்படி உள்ளது. தினேஷின் பின்னணி இசையும் பொருத்தம்.மணியார் குடும்பத்தில் ஓவர் சவுண்ட் என்பது சிறு பலவீனம் என்றாலும் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் ஆகிய வியாபார சமாச்சாரங்கள் படத்துக்கான பலம்.