செக்ஸ் தீண்டத்தகாத விஷயமல்ல! ரியாமிகா சூடாக சொல்கிறார்!!



கோலிவுட்டுக்குக் கிடைத் திருக்கும் இன்னொரு கோலிக்குண்டு கண்ணழகி, ரியாமிகா. சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘எக்ஸ் வீடியோஸ்’ நாயகி. முதல் படத்திலேயே துணிச்சலாக துணியைத் துறந்தவரை, மழை பெய்துகொண்டிருந்த மாலை வேளையில் சூடான காபியோடு காபி ஷாப் ஒன்றில் சந்தித்து உரையாடினோம்.

“உங்க பயோடேட்டா?”
“முதல் பாராவில் தப்பான டேட்டா கொடுத்திருக்கீங்க. ‘எக்ஸ் வீடியோஸ்’ எனக்கு முதல் படம் கிடையாது. அதுக்கு முன்னாடியே பிரஜின் நடிச்ச ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, ரசிகர்களிடம் என்னைப் பிரபலப்படுத்தி யிருப்பது ‘எக்ஸ் வீடியோஸ்’ படம்தான்.

சொந்த ஊர் பெங்களூரு. படிச்சதும் வசிப்பதும் நம்ம சிங்காரச் சென்னை. அம்மாவுக்கு இளம் வயதில் சினிமாவில் நடிக்கக் கொள்ளை ஆசையாம். குடும்பச் சூழ்நிலையால் அவங்களாலே சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டுப்போன சினிமா என்னைக் கைகொடுத்து வரவேற்று அழைத்துக் கொண்டது. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் எங்கள் குடும்ப நண்பர்.

அவர் மூலமாகத்தான் எனக்கு சினிமா தொடர்பு கிடைத்தது. முதன் முதலாக விளம்பரப் படத்துக்காகத்தான் அரிதாரம் பூச ஆரம்பித்தேன்.”
“நீங்க இப்போதான் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. ஆரம்பத்துலேயே ‘எக்ஸ் வீடியோஸ்’ மாதிரி அதகளப்படுத்திட்டீங்களே! இந்தத் துணிச்சல் எப்படி வந்தது?”

“ஆக்சுவலா, ‘எக்ஸ் வீடியோஸ்’ இயக்குனர் சஜோ சுந்தர் என்னை ஒப்பந்தம் செய்தபோது, முழுக்கதையையும் சொல்லாமல் என்னுடைய போர்ஷனை மட்டும் சொல்லி நடிக்க சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமில்லை. படத்தில் கமிட்டான பிறகுதான் படத்தின் டைட்டிலே என்னவென்று எனக்குத் தெரியும். டைட்டிலைக் கேட்டதும் ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனது உண்மைதான். ஆனா, அந்தப் படத்தில் நான் முழு ஈடுபாட்டுடன் நடித்ததை மறுக்க முடியாது.

முழுப்படத்தையும் பார்த்த பிறகுதான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் என்னுடைய துணிச்சலுக்காக ஒரு பக்கம் பாராட்டினாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் ‘அந்த மாதிரி படங்களில் நீ நடிக்கலாமா’ என்று நெகட்டிவ்வாகத்தான் விமர்சனம் பண்ணினார்கள்.

என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது தீண்டத்தகாத விஷயமோ அல்லது பொது வெளியில் பேசக்கூடாத விஷயமோ இல்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்றால், பெண்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் பெண்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய சப்ஜெக்ட் இருக்கும் படத்தில் நடித்தோம் என்கிற திருப்தி எனக்கு ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தில் கிடைத்தது. இருந்தாலும், அடுத்து வரும் படங்களில் முழுக்கதையையும் கேட்ட பிறகுதான் கமிட் பண்ணுவேன்.”

“அடுத்த படம்?”
“நிறைய வாய்ப்புகள் வருது. செலக்ட் பண்ணித்தான் ஒப்புக்கறேன். இப்ப ‘அகோரி’ என்ற படத்தில் ரொம்பவே வித்தியாசமான கேரக்டர்ல வர்றேன். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் இருக்கும். அந்த ஐந்து பேரிலும் நான் ஒருத்திதான் பெண் என்பது ஆச்சர்யமான செய்தி.

‘மாயவன்’ படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் சார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடிக்கிறேன். சி.வி.குமார் சார் முதலில் அழைத்தது, தான் தயாரிக்கப் போகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் கூடுதல் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். தரமான சினிமாக்கள் தயாரிப்பதையும், இயக்குவதையும் லட்சியமாகக் கொண்ட அவருடைய ஊக்குவிப்பு எனக்கு பெரிய உந்துசக்தியாக இருக்கிறது.”

“நீங்க பிரமாதமான டான்ஸர்னு இண்டஸ்ட்ரியில் சொல்லுறாங்களே?”
“நான் டான்ஸர்தான். ஆனா, பிரமாதமான டான்ஸரான்னு நீங்களெல்லாம்தான் சொல்லணும். ‘அகோரி’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.

ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக் கொடுத்தேன். அந்த மேட்டர் இண்டஸ்ட்ரியில் பரவி இம்மாதிரி பாசிட்டிவ் டாக் உருவாகியிருக்கு. ‘அகோரி’ படப்பிடிப்பில் நான் உட்பட மற்ற நடிகர்கள், நடிப்பு மட்டுமின்றி டெக்னீஷியன்களாகவும் இறங்கி வேலை பார்த்திருக்கோம்.”

“உங்க ஆக்டிங் ரொம்ப பர்ஃபெக்டா இருக்கு. புரொஃபஷனலா ஏதாவது கோர்ஸ் செய்திருக்கீங்களா?”
“என் நடிப்பைப் பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே.... நீங்க கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்கிறார்கள். அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்குத் தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்புப் பயிற்சி என காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருக்கிறேன்.”

“சினிமாவில் யார் மாதிரி வரணும் என்று ஏதாவது ஐடியா வெச்சிருக்கீங்களா?”
“நிச்சயமாக. பாலிவுட் குயீன் கங்கனா ரணாவத், நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அழகுப் பொக்கிஷம் அனுஷ்கா போன்றோரைப் போல சினிமாவில் பெரிய இடத்துக்கு வரணும் என்பதே என் ஆசை.”

“பிடிச்ச மற்றும் பிடிக்காத விஷயங்களைச் சொல்லுங்களேன்?”

“எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் ரீடிங். உலகத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள ஆசைப்படுவேன். பிடிக்காத விஷயம்னு சொன்னா, ஒருவரிடம் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தால் அதற்காக அந்த மனிதரையே வெறுப்பது, புறம் பேசுவது, குறுகிய கண்ணோட்டம் கொள்வது, ஆணாதிக்க சிந்தனைகள், இன்னும் நிறைய இருக்கு...”

“ரியாமிகா என்கிற பேரே வித்தியாசமா இருக்கு! இதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரே அர்த்தம்தான். ‘ஒரிஜினல்’ என்று என் பெயரை மொழிபெயர்க்கலாம்.”

- சுரேஷ்ராஜா