ஜிவ்வுனு இழுக்குது!



‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கும் படம் ‘வாய் மூடி பேவும்’. இந்தப் படத்தை வருண் மணியனுடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். நாயகி நஸ்ரியா நாசிம். ஒளிப்பதிவு சௌந்தர்ராஜன். இசை ஷான் ரோல்டன்.  ‘‘ நான் நடித்ததிலேயே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் இதுதான்.

நான் நடித்துள்ள படம் என்பதற்காக மட்டுமில்ல, துல்கர் சல்மானுக்காகவும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். எங்க ஜோடி தமிழுக்குதான் புதுசு. மலையாளத்தில் நாங்கள் ஏற்கெனவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். இது நாங்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம். இது ரொமான்டிக் படம். என்னுடைய கேரக்டர் முற்றிலும் புதுமையாக இருக்கும். முக்கால்வாசி படப்பிடிப்பு மூணார் உள்பட மலைப்பகுதியில் நடந்தது.

உடலை உறைய வைக்கும் குளிரில் நடித்ததை இப்போது நினைத்தாலும் உடம்பு ஜிவ்வுனு இழுக்கிற மாதிரியே இருக்கு. இயக்குநர் பாலாஜி மோகன் கதையை என்னிடம் எப்படி சொன்னாரோ அதை அப்படியே ஸ்கிரீனில் கொண்டுவந்துள்ளார். எங்கேயும் என்னுடைய ரோலை குறைக்கவும் இல்லை, அதிகரிக்கவுமில்லை. அந்தளவுக்கு கச்சிதமாக படமாக்கியுள்ளார்.

 என்னுடைய கேரக்டர் மட்டுமில்ல, படத்துல உள்ள அனைவருடைய கேரக்டரும் ஷார்ப்பாக இருக்கும். அவர் இயக்கிய ‘காதலில் சொதப்புவது எப்படி’ எப்படி வித்தியாசமான அனுபவமாக இருந்ததோ அது போல இந்தப் படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்று அழுத்தம் கொடுக்கிறார் நஸ்ரியா நாசிம்.

-ரா