ப்ரியங்களுடன்...



உலக பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று சாதித்த வீராங்கனை பி.வி.சிந்து போட்டியில் அந்த பரபரப்பான 38 நிமிடங்களை விவரித்த விதம் செம விறுவிறுப்பு. சாதனை மங்கையை அட்டைப்படத்தில் வெளியிட்டு கௌரவித்ததற்கு பாராட்டுக்கள்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

தவித்த வாய்க்கு தண்ணீர் என்பார்கள். அந்த வகையில் மற்றவருக்கு உதவி செய்யும் அல்லியம்மாளுக்கு  ஒரு ஜே போடலாம். என்ன செய்வது தோழி? தோழியின் கேள்விக்கு மருத்துவர் அபிராமி மிக அழகாக ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்.

அரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த சந்திரா போன்ற ஆசிரியர்கள் இருந்தால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வம் காட்டுவர் என்பது நிச்சயம். மரங்களுக்காக அழுத மணிப்பூர் சிறுமியை அம்மாநிலத்தின் பசுமை இயக்கத்தின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்றே. காடு தழைத்தால் நாடும் தழைக்கும் என்பதை அச்சிறுமி நிச்சயம் சாதித்துக் காட்டுவாள் என்பதில் ஐயமில்லை.
30 வகை விநாயகர் சதுர்த்தி பலகாரங்களில் பல புதுவித சுவையைத் தரும் விதத்தில் வித்தியாசமானதாக இருந்தன. சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

நியூஸ் பைட்சில் வரும் தகவல்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேள் படித்ததும் ‘அதிர்ஷ்டம்’ கதவைத் தட்ட வயது தடையே இல்லை என்பதை உணர்த்தியது.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.

‘காபி’ தேனீர் விரும்பிக் குடிக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சீனித்துளசி ஓர் வரப்பிரசாதம்தான். இனி தாராளமாக காபி தேனீர் சாப்பிடலாம். உழைக்கணும்னு ஆரம்பிச்சா எப்படி வேண்டுமானாலும் முன்னேறலாம். எந்த வேலை இருந்தாலும் சரி... பழ சர்பத் மூலம் தன் குடும்பத்தையே கட்டிக்காக்கும் ஜெயந்தி ஒரு சிறிய தொழிலதிபர்தான். இனிமேல் கடைகடையா ஏறி பொருட்களை வாங்கி கஷ்டப்பட்டு ஸ்வீட் செய்ய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடலாம்.
- பொன்னியம்மன் மேடு வண்ணை கணேசன், சென்னை.

லேட்டானாலும் லேட்டஸ்டாக நினைவுடன் ‘செல்லுலாய்ட் பெண்கள்’ வரிசையில் சௌகார் ஜானகியை நினைவு கூர்ந்தது திரை உலகில் அவர் ஒரு ‘ஒளி விளக்கு’ எனலாம். சில விஷயங்களில் (ஏ) மாற்றங்களும் நல்லது என வெளிப்படையாக பேசிய நடிகை விஜயலட்சுமி தன்னம்பிக்கை மிக்கவர் என்பது உறுதிப்படுத்தியது.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.