பெண்களை பாதிக்கும் நோய்கள்



டிமென்சியா

மினி தொடர்


சமீபத்தில் வெளியான ‘60 வயது மாநிறம்’ படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட கணிதப் பேராசிரியரான பிரகாஷ்ராஜ், காணாமல்  போய்விடுவார். அவரது மகன் அவரை தேடி அலைவார். அவ்வளவு புத்திசாலி பேராசிரியரான ஒரு மனிதர் எப்படி தன் வீடு கூட தெரியாத  அளவு தன்னிலை மறந்து போகிறார்? அதற்கு காரணமான அல்சைமர் நோய் ஏன் ஏற்படுகிறது? அதன் அடிப்படை காரணம் என்ன என்பன  பற்றி இங்கே நமக்காக விரிவாக விளக்குமளிக்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.

“அல்சைமர் என்பது பிரைமரி டிமென்சியாவைச் சேர்ந்தது. எனவே அல்சைமரைப் பற்றி புரிந்து கொள்ளும் முன் டிமென்சியா என்றால்  என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். நம் உடலுறுப்புகளின் செயல் பாடுகளுக்கு அடிப்படையானது மனித மூளை. மனித  மூளையின் நான்கு பகுதிகளை காக்னடிவ் டொமைன்கள் என்கிறார்கள். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட காக்னடிவ் டொமைன்கள்  பாதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்டவர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படும். நினைவுத்திறனும் பாதிக்கப்படும்.  அதாவது மூளை நரம்புகள் சுருங்கி மூளை சுருக்கம் ஏற்படுவதாலும் மற்றும் மூளை திசுக்கள் சிதைவடைவதாலும், திசுக்கள் அழிந்து  போவதாலும் டிமென்சியா பாதிப்பு ஏற்படுகிறது.டிமென்சியா நோய் பாதிக்கப் பட்டவர்களின் இயல்பு நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக  தன் ஞாபகம் மற்றும் செயல் திறன்களை அவர்கள் இழக்க நேரிடும்.

டிமென்சியா நோயின் அறிகுறிகள்


*ஞாபக மறதி.
*ஆளுமையில் மாறுபாடு.
*மனநிலை மாற்றங்கள்.
*நேர மற்றும் இடக் குழப்பம்.
*வாசிப்பதில், தூரத்தைக் கணிப்பதில் மற்றும் நிறம் அறிதலில் சிரமம்.
*தேதி மற்றும் நேரத்தை மறந்து போதல்.
*பொருட்களை இடம் மாற்றி வைத்தல்.
*பிரச்னைகளை தீர்ப்பது சவாலாக மாறுதல்.
*சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குதல்.
*சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லுதல்.

டிமென்சியாவின் வகைகள்

*ப்ரைமரி டிமென்சியா

எந்த ஒரு காரணமுமின்றி ஏற்படுவது. உடல் ரீதியான எந்த பாதிப்பும் இல்லாமல் ஏற்படுவது. மரபு ரீதியாக ஏற்படலாம். வீட்டில் அப்பா,  அம்மா, உடன் பிறந்தவர் களுக்கு இருந்தால் இந்தப் பிரச்னை வரக்கூடும். அதாவது நம் நேரடி முன்னாள் தலைமுறையினருக்கு இருந்தால்  வரக்கூடும்.

*செகண்ட்ரி டிமென்சியா


விபத்து மற்றும் உடல் ரீதியான காரணங்களால்  ஏற்படுவது. அதாவது தலையில் அடிபடுதல், தைராய்டு பிரச்னை, விட்டமின் குறைபாடு(  பி1, பி6, பி12), மூளைக்காய்ச்சல், மூளைக் கட்டிகள், சில நோய்களுக்காக உட்கொள்ளப்படும் மருந்துகள், ஸ்ட்ரோக், SDH பிரச்னை  (மூளைக்கு வெளியே கபாலத்துக்கு உள்ளே ஏற்படும் ரத்தக்கட்டு), கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, உணவில் உள்ள நச்சுப்பொருட்கள்  போன்ற காரணங்களாலும் மனநோயாளிகளாய் உள்ளவர்களுக்கும் செகண்ட்ரி டிமென்சியா ஏற்படலாம். மேற்சொன்ன பிரச்னைகளை  சரிப்படுத்திவிட்டால் தற்காலிகமாக அவர்களுக்கு ஏற்பட்ட டிமென்சியாவும் சரியாகிவிடும். அதாவது உதாரணத்திற்கு மூளைக்கு வெளியே  ஏற்படும் ரத்தக்கட்டியினை சரிசெய்யும் போது அந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்பட்ட டிமென்சியா சரியாகிவிடும்.

டிமென்சியாவின் முதல் கட்டம்
(2 முதல் 4 வருடங்கள்)


டிமென்சியாவின் ஆரம்பகட்டத்தில் கீழ்க்கண்ட மாறுபாடுகள் ஏற்படும்.

*ஞாபக மறதி.
*சூழலில் ஆர்வமின்மை.
*வீட்டிலும் பணியிலும் பழக்கமான வேலைகளை முடிப்பதில் சிரமப்படுதல்.
*எந்த ஒரு செயலையும் செய்ய தயக்கம்.

டிமென்சியாவின் இரண்டாம் கட்டம்
(2 முதல் 12 வருடங்கள்)


டிமென்சியாவின் இரண்டாம் கட்டத்தில் கீழ்க்கண்ட மாறுபாடுகள் ஏற்படும்.

*படிப்படியாக ஞாபகமறதி அதிகமாகுதல்.
*கேள்விகளுக்கு பதில் சொல்ல திணருதல்.
*சின்னச் சின்ன விஷயத்தையும் புரிந்து கொள்ள கஷ்டப்படுதல்.
*எரிச்சல் அடைதல்.
*தேவையற்ற பயம்.
*தன் சுய சுத்தத்தைப் பற்றி கவலைப் படாதிருத்தல் (உடல் மற்றும் ஆடையின் சுத்தம் பற்றி கவலைப்படாதிருத்தல்).
*சமூகத்துடன் இணையாதிருத்தல்.
*வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுதல் (காணாமல் போய்விடுதல்).

டிமென்சியாவின் மூன்றாம் கட்டம் (அதற்குப் பிறகான வருடங்கள்)

டிமென்சியாவின் கடைசி கட்டத்தில் கீழ்க்கண்ட மாறுபாடுகள் ஏற்படும்.

*உணவில் ஈடுபாடின்மையால் ஏற்படும் எடை குறைபாடு.
*குடும்பத்தினரை கூட யார் என்று அறியாத நிலைமை.
*யாரிடமும் எப்படி பேசுவது என தெரியாத நிலை.
*அவர்களை அறியாமலே சிறுநீர் மற்றும் மலம் கழித்தல்.
*நிற்க, நடக்க முடியாமையால் படுத்த படுக்கையாகிவிடுதல்.
*நிமோனியாவினால் ஏற்படும் இறப்பு.

எப்படி கண்டறிவது?

பாதிக்கப்பட்டவர்களையும் அவரைச் சார்ந்தவர்களையும் விசாரிப்பதன் மூலமும், சில பரிசோதனைக்குட்படுத்துவதன் மூலமும் (MMSE- Mini Mental state Examination)  அவர்களுக்கு வந்திருப்பது டிமென்சியா தானா என்று அறியலாம் அல்லது வேறு சில பிரச்னைகளால்  தற்காலிகமாக டிமென்சியா ஏற்பட்டிருக்கிறதா என்றும் தெரிந்து கொள்ள முடியும். டிமென்சியாவை குணப்படுத்த மருத்துவம்  இல்லையெனினும் வேறு சில நோய்களால் ஏற்படும் டிமென்சியாவை அந்த நோயை சரிசெய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.  உதாரணத்திற்கு தைராய்டு பிரச்னையால் டிமென்சியா ஏற்பட்டிருக்கிறது என்றால் தைராய்டு பிரச்னையைக் குணப்படுத்தும் போது  அவர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்டிருந்த டிமென்சியா சரியாகிவிடும். அதனால் ஒருவருக்கு எதனால் டிமென்சியா ஏற்பட்டிருக்கிறது  என்பதை கண்டறிவது மிகவும் அவசியம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் டிமென்சியா இருக்கிறது என  சந்தேகப்படலாம்.

*பயம்.
*தூக்கமின்மை.
*சமூகத்துடன் இணையாதிருத்தல்.
*சந்தேகப்படுதல்.
*தான் எங்கே இருக்கிறோம். தன்னையும் அறியாமல் தன்  சூழ்நிலை யையும் அறியாதிருத்தல்.
*குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண முடியாமல் இருப்பது.
*நெருக்கமானவர்களை கூட அடையாளம் காண முடியாமல் இருப்பது-சரியாக சாப்பிடாமல் இருப்பது.
*எதிலும் அக்கறை யில்லாமல் இருப்பது.
*மூட் சேன்ஜஸ் (திடீரென சிரிப்பது, திடிரென அழுவது).
*தன் தினப்படி தேவைகளை செய்யாதிருப்பது. (குளித்தல், உடை மாற்றுதல், தலை வாருதல்…)
*முடிவெடுக்க முடியாமல் திணறுதல்.
*நடக்காமல் ஒரே இடத்தில் இருத்தல் அல்லது எங்காவது சென்று விடுதல். சோம்பலாக இருத்தல். அடிக்கடி சுருண்டுபடுத்துக்கொள்ளுதல்.
*இல்லாத ஒன்றை கற்பனை செய்து கொள்வது, விஷயங்களை மாற்றிச் சொல்வது.
*சிறுநீர் மற்றும் மலம் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் வெளியேறுவது போன்ற பல காரணங்களை கேட்டறிவதன் மூலம் மருத்துவர் முடிவு  செய்வார்.
*80 வயதைத் தாண்டியவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு டிமென்சியா பிரச்னை ஏற்படுகிறது.
*65ல் இருந்து 80 வயது வரை உள்ள வர்களுக்கு 5ல் இருந்து 8 சதவிகிதம் வரை ஏற்படுகிறது. இது ஒவ்வொரு 5 வருடத்திற்கும் இரண்டு  மடங்காக அதிகரிக்கிறது.
*அல்சைமர், வாஸ்குலர் டிஸீசஸ், பார்கின்சன் போன்றவை பிரைமரி டிமென்சியாவைச் சேர்ந்தவை. 50ல் 70 சதவிகிதம் டிமென்சியா  அல்சைமர் நோயால் ஏற்படுகிறது.

அடுத்த இதழில் அல்சைமர் நோய் குறித்து விளக்கமாக பார்ப்போம்.

-ஸ்ரீதேவி மோகன்