100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு



உருவாக்குபவள்... அழிப்பவள்...

மருதன்

பொருள் 6 உருவாக்கும் ஐசிஸ் ஒரு முறை டியோடரஸ் சிகுலஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் எகிப்துக்குச் சென்றார். ஊர் ஊராகச் சென்று மக்களிடையே நிலவி வரும் இதிகாசக் கதைகளைச் சேகரித்துப் பதிவு செய்வது அவர் வழக்கம். எகிப்து மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களில் பலர் கண்கள் நிறைய கனவுகளுடன் தங்கள் மகாராணியைப் பற்றிய சில பழங்கதைகளை டியோடரஸிடம் பகிர்ந்துகொண்டனர்.  அதுவரை டியோடரஸ் கேள்விப்பட்ட எந்தக் கதைகளைப் போலவும் அவை இல்லை. உதாரணத்துக்கு... அந்த மகாராணி வகுத்து அளித்திருந்த சில சட்டங்களைக் கேட்டு அவர் திகைத்துப் போனார்.



‘இனி இங்கே அரசரை விட அரசிக்கே அதிகாரம் அதிகம் இருக்க வேண்டும். அரசனை விட அரசிக்கே கூடுதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அரசி மட்டுமல்ல... மற்ற பெண்களுக்கும் இது பொருந்தும். கணவனைவிட மனைவிக்கே அதிக அதிகாரம். கணவன் மனைவியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். ‘நான் என் மனைவிக்குக் கட்டுப்படுவேன்’ என்று திருமண ஒப்பந்தத்தில் ஒவ்வொரு கணவனும் கையெழுத்திட்டாக வேண்டும்...’

டியோடரஸ் எகிப்துக்குச் சென்றது ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் ஆகியோர் வாழ்ந்த பொயுமு (பொது யுகத்துக்கு முன்பு) 60 வாக்கில். அவருக்குத் தெரிந்த ரோமில் பெண் என்பவள் ஆணின் நிழல்... மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டவள்... அரசி என்பவர் அரசனைவிட ஒரு படி கீழே. எகிப்தில் மட்டும் எப்படி ஒரு மகாராணியால் தலைகீழான ஒரு சட்டத்தை வகுக்க முடிந்தது? அதை எப்படி எகிப்தியரால் ஏற்க முடிந்தது? அந்த அதிசய மகாராணி யார் என்று டியோடரஸ் விசாரித்தபோது, அவர்கள் சொன்ன பதில்: ‘ஐசிஸ்... அவர் மகாராணி மட்டுமல்ல... எங்கள் கடவுளும்கூட.’

தொடக்கத்தில் ஐசிஸ் ஒரு சிறிய கடவுளாகவே இருந்திருக்கிறார். அவருடைய கணவர் ஓசிரிஸ் எகிப்தின் முதல் அரசக் கடவுள். ஓசிரிஸின் கட்டளைப்படிதான் ஐசிஸ் தொடங்கி அனைத்து எகிப்தியரும் நடந்தாக வேண்டும். இந்த உலகத்துக்கு விவசாயத்தையும் சட்டத்தையும் அறிமுகம் செய்துவைத்தவர் ஓசிரிஸ். ஒரு நாள் பதவியாசை கொண்ட தன் தம்பியால் ஓசிரிஸ் கொல்லப்படுகிறார். ஓசிரிஸின் உடல் சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டு எகிப்து முழுக்கச் சிதறடிக்கப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஐசிஸ், எகிப்து முழுவதும் சுற்றியலைந்து தன் கணவரின் உடலை முழுமையாகச் சேகரித்து உயிரூட்டுகிறார்.

அதன் பிறகு, எளிய அரசியாக மட்டும் அதுவரை அறியப்பட்ட ஐசிஸ் பலமிக்கவராக மாறுகிறார். ஓசிரிஸ் சக்தி வாய்ந்த ஆண் கடவுள் என்றால், அந்தக் கடவுளையே மரணத்தில் இருந்து எழுப்பி கொண்டுவந்த  ஐசிஸ் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் அல்லவா? இதை உணர்ந்த எகிப்து மக்கள் மற்ற கடவுள்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாழ்க்கை, மரணம் இரண்டையும் வென்ற ஐசிஸை வணங்கத் தொடங்கினார்கள்.

ஐசிஸின் போதனைகள் நடைமுறைச் சட்டங்களாகவும் மாறத் தொடங்கின. ஓர் ஆணின் துணை அல்லது ஆலோசனை இன்றி ஒரு பெண்ணால் தன் சொத்தை விற்க முடியும் என்றானது. அச்சமின்றி எந்த ஒரு குற்றத்தையும் அவள் தட்டிக் கேட்கலாம்... அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். ஆண் துணையின்றி சுதந்திரமாகத் தனியிடத்தில் வசிப்பதும் தனியாகவே இறுதிவரை வாழ்வதும் இனி சாத்தியம். சட்டம் ஒரு பெண்ணை ஆணைப் போலவே நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. நடைமுறையில் இந்தச் சட்டங்கள் எல்லாம் பின்பற்றப்பட்டனவா என்று தெரியாது.



இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்ததே கூட அப்போது ஒரு சாதனைதான் என்பதை உணரும்போது ஐசிஸின் அழுத்தமான தாக்கம் புரிய வரும். ஏன் ஆணும் பெண்ணும் ஒன்றுபோல இருக்க வேண்டும் என்பதை ஐசிஸ் தன் மகன் ஹோரசிடம் ஒருமுறை விளக்கினார். ‘என் அன்பு மகன் ஹோரஸ் கவனமாகக் கேள்! அனைத்து ஆத்மாக்களின் இயல்பும் ஒன்றுதான். உருவாக்கியவரின் இடத்தில் இருந்தே அவை அனைத்தும் வந்து சேர்கின்றன.

ஆத்மாக்களை ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ அறுதியிட்டு அழைக்க முடியாது. அந்த வேறுபாடு உடலில் மட்டுமே தோன்றுகிறது.’ அலெக்சாண்டர் எகிப்தை ஆக்கிரமித்தபோது ஐசிஸின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிரேக்கர்கள் அவரைத் தங்களுடைய உயர்ந்த கடவுள்களான டெமெட்டர், அஃப்ரோடைட் ஆகியோருடன் இணைத்து வழிபடத் தொடங்கினார்கள். ஐசிஸின் தோற்றத்தைத் தங்கள் விருப்பப்படி சற்றே மாற்றியும் வடிவமைத்துக் கொண்டார்கள். எகிப்தில் நிலவுவதைப் போன்ற சமத்துவம் நம் நாட்டிலும் வரவேண்டும், எகிப்தியப் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளை நாமும் பெற வேண்டும் என்பதே கிரேக்கப் பெண்களின் பெரும் விருப்பம்.

கிரேக்கத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்ஜியத்திலும் ஐசிஸ் புகழ்பெறத் தொடங்கினார். பெண்களுக்கு அடுத்தபடியாக அடிமைகளும் அடித்தட்டு மக்களும் ஐசிஸை அரவணைத்துக் கொண்டனர். இதையெல்லாம் கண்டு ஒரு கட்டத்தில் ரோமானிய ஆட்சியாளரான அகஸ்டஸ் எரிச்சல் கொள்ள ஆரம்பித்தார். இப்படியே போனால் ரோமக் கடவுள்கள் அனைவரும் செல்வாக்கு இழக்க நேரிடும். பெண்கள் ஓரணியில் திரண்டு ஐசிஸை நெருங்கிவிடுவார்கள்.

அடிமைகளும் ஏழைகளும்கூட புது நம்பிக்கை பெற்று ஒன்று சேர்ந்துவிடலாம். இவையெல்லாம் நடந்தால் ரோமின் எதிர்காலமும் ஆட்சியாளர்களின் எதிர்காலமும் என்னாவது? அழகிய பளிங்குச் சிலையாக மட்டுமே ஐசிஸ் இருந்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. அவர் பெண் உரிமை, சமத்துவம், சமதர்மம் என்றெல்லாம் அல்லவா பேசியிருக்கிறார்?

‘ஐசிஸை வழிபடுவது சமூக ஒழுங்கைக் குலைக்கும் என்பதால் அந்த ஆபத்தான பெண்ணிடம் இருந்து விலகி யிருக்கவும்’ என்று ரோம செனட் சபை தம் மக்களை அறிவுறுத்தியது. ஐசிஸ் வழிபாடு எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காவலர்கள் ஏவிவிடப்பட்டனர். அதற்குள் பலர் ஐசிஸுக்கு கோயில்கள் கட்டி முடித்திருந்தார்கள். அவையனைத்தையும் இடித்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. அப்படி இடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களில் பலருமேகூட தனிப்பட்ட வாழ்வில் ஐசிஸ் ஆதரவாளர்களாக இருந்ததால், தங்கள் பணியிலிருந்து பின்வாங்கினார்கள்.

ஐசிஸின் கோயில் மட்டுமல்ல... அவர் நினைவேகூட ரோமில் இருக்கக்கூடாது என்று அகஸ்டஸ் நினைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஐசிஸ் ஒரு எகிப்திய சக்தி. அவருடைய எதிரியான மார்க் ஆண்டனி அப்போது எகிப்தில் நியமிக்கப்பட்டிருந்தார். எகிப்திய அரசியான கிளியோபாட்ரா மீது ஆண்டனி காதல் வயப்பட்டிருந்தார். இந்த கிளியோபாட்ரா தன்னை ஐசிஸின் மறுபிறவி என்று பிரகடனம் செய்துகொண்டவர்.

ஆக, ஐசிஸ் வழிபாடு ரோமில் பரவினால் அது கிளியோ பாட்ராவுக்கும் ஆண்டனிக்கும்தான் சாதகமாக முடியும் என்று அஞ்சினார் அகஸ்டஸ். ஆனால், எத்தனை கடுமையாக முயன்றும், எவ்வளவோ ஒடுக்கு முறையை ஏவிவிட்ட பிறகும், ரோம மக்கள் - குறிப்பாக பெண்கள் ஐசிஸைக் கைவிடத் தயாராக இல்லை. ஒரு கடவுளாக மட்டுமல்ல... ஒரு தோழியாகவும் ஐசிஸை அவர்கள் தங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய சொந்த மகளே ஐசிஸை ரகசியமாக வழிபட்டு வரும் செய்தி காதில் விழுந்ததும் வெறுத்துப்போய்விட்டார் அகஸ்டஸ். 

அவரால் மட்டுமல்ல... அவருக்குப் பிறகு வந்தவர்களாலும் ஐசிஸை நெருங்கக்கூட முடியவில்லை. அமெரிக்காவின் முதல் பெண்ணிய சிந்தனையாளர் என்று அறியப்படும் மார்கரெட் ஃபுல்லர் ஐசிஸை உயிருக்கு உயிராக நேசித்தவர். ‘ஆண்களின் அதிகாரத்தை நிலைநாட்டும், ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் கடவுள்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன எனக்கு ஐசிஸ் ஓர் இளந்தென்றலாகக் காட்சியளித்தார்’ என்கிறார் ஃபுல்லர். ‘முதல்முறையாகப் பெண்களை மையப்படுத்தி, பெண்களின் உரிமைகளை விவாதித்த கடவுள் என்பதாலேயே ஐசிஸ் எனக்கு நெருக்கமானவளாகி விட்டாள்’ என்கிறார் அவர்.

ஐசிஸ் தன் குழந்தை ஹோரசை மார்போடு சேர்த்து அணைத்துப் பாலூட்டும் படம் உலக மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. ஐசிஸால் கவரப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தக் காட்சியின் கம்பீரத்தில் மயங்கி அதை அப்படியே தமதாக்கிக் கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. ஐசிஸ் இடத்தில் அவர்கள் மேரி மாதாவைப் பொருத்தினார்கள். ஹோரஸ் இருந்த இடத்தில் இயேசு.

பொருள் 7 அழிக்கும் மெடியா உணரும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் கொண்டிருக்கும் உயிரினங்களில் மிக மோசமாக நடத்தப்படும் உயிரினம் எது தெரியுமா? பெண் என்கிறார் மெடியா. சூரியக் கடவுளின் பேத்தியான மெடியா, தன் கணவன் ஜேசன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தாள், மற்றொரு பெண் குறுக்கிடும் வரை. ஜேசன் அந்த இன்னொரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவளுடனே சென்றுவிட, தன் கால்களுக்குக் கீழே தரை நழுவிச் செல்வதையும் தலைக்கு மேலே வானம் இடிந்து விழுவதையும் உணர்கிறாள் மெடியா.

இதோடு வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தவள் பிறகு சுதாரித்துக் கொள்கிறாள். தன் கணவன், தன் வாழ்வில் குறுக்கிட்ட பெண், தன் குழந்தைகள் என்று அனைவரையும் கொல்கிறாள் மெடியா. கிரேக்கத் தொன்மக் கதைகளில் இடம்பெறும் மெடியாவை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு யூரிபிடஸ் என்னும் கவிஞர் புகழ்பெற்ற நாடகம் ஒன்றில் பதிவு செய்து வைத்தார். இந்த மெடியா பெண்ணிய சிந்தனையோட்டத்தின் தாய் என்று இன்றும் பலரால் போற்றப்படுகிறார். ஈவிரக்கமில்லாமல் பலரைக் கொன்ற ஒரு பெண்ணிடம் அப்படி என்ன தனித்துவமான சிறப்பம்சத்தை இவர்கள் கண்டுவிட்டார்கள்?

‘என்ன இருந்தாலும் அவள் இவ்வளவு பேரைக் கொன்றிருக்கக்கூடாது’ என்னும் இன்றைய சமூக மதிப்பீடுகளைக் கொண்டு மதிப்பிடாமல், அவள் வாழ்ந்த காலத்தில் மெடியாவைப் பொருத்தி ஆராய்ந்தால், அவள் மற்றவர்களிடம் இருந்து எப்படி மாறுபட்டிருந்தாள் என்பது தெரியும். எல்லாப் பெண்களையும் போல் மெடியா ஓர் ஆணால் பாதிக்கப்படுகிறாள். ஆனால், தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று அவள் இருந்துவிடவில்லை. ஓர் ஆண் கோபப்படுவதைப் போல அவளும் கோபப்படுகிறாள்.

‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த மெடியா அந்த அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள். மெடியா முதலில் எதிர்பார்த்தது நீதியை. அது கிடைக்காத பட்சத்தில் துணிந்து பழி தீர்த்துக் கொண்டாள். பிறகு ஏதென்ஸ் சென்று அங்கிருந்த மன்னரை மணந்து கொண்டாள் மெடியா. 

சமூகத்தில் உள்ள மற்ற ‘நல்ல பெண்கள்’ போல இல்லாமல் மெடியா தனக்கான மதிப்பீடுகளைத் தானே உருவாக்கிக்கொண்டாள். தன் கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாக, தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவாக, சமூகத்துக்கு ஒரு நல்ல பெண்ணாக மெடியாவால் இருக்க முடியவில்லை. தன்னைப் பற்றி நிதானமாகவும் தீர்மானமாகவும் சிந்தித்து சுயமாக ஒரு முடிவெடுக்கிறாள். உண்மையில் அவள் செயல்கள் அல்ல... அவள் சிந்தனைகளே அவள் வாழ்ந்த சமூகத்துக்கு ஆபத்தானவையாகத் தெரிந்தன. மெடியாவை அவர்கள் புறக்கணித்ததற்குக் காரணம் அதுதான்.

‘கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டால், அது ஏன் மனைவியை மட்டும் பாதிக்க வேண்டும்? பாதிப்புகூட ஏன் இருவருக்கும் சமமாக இருப்பதில்லை?’ என்று ஓரிடத்தில் கேட்கிறாள் மெடியா. ‘இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வாயா’ என்று கேட்கப்பட்டபோது, மெடியா அளித்த பதில் ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும்கூட அதிர வைத்தது. ‘சீறிப்பாயும் ஈட்டிகளுக்கு நடுவில் நின்று போரிட வேண்டும் என்று சொன்னால் ஒருமுறையல்ல, மூன்று முறைகூட நின்று போரிடுவேன்.

இன்னொரு குழந்தை மட்டும் வேண்டவே வேண்டாம்!’ தன் காதலியை மெடியா கொன்று விட்டாள் என்பதை அறிந்ததும் ஜேசன் சீறி விழுந்தான். ‘இன்னொரு பெண்ணை காதலித்த பாவத்துக்காக அவளைக் கொல்லவும் துணிவாயா நீ?’ - மெடியா அமைதி யாகப் பதிலளித்தாள்... ‘நீ செய்ததை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாயா? மன்னிக்கவும்... நான் நீ நினைக்கும் பெண் அல்ல.’ ஜேசனுக்கும் பிறகுதான் அது தெரிந்தது. வாய் விட்டு வருந்தினான். ‘ஓ, நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரு புலியை மணம் செய்து கொண்டிருக்கிறேன். அவள் பெண்ணே அல்ல... அழிவு சக்தி.’ ‘ஏன் உன் குழந்தைகளைக் கொல்கிறாய்’ என்று கேட்கப்பட்டபோது ‘என் கணவனைக் காயப்படுத்தவே’ என்று பதிலளிக்கிறாள் மெடியா. அப்போது அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது. கொன்ற பிறகு அவள் தன் குழந்தைகளை ஆசீர்வதித்தாள். ‘உன் தந்தையால் அழுக்கடைந்துபோன இந்த உலகில் நீங்கள் இருக்க வேண்டாம், இன்னொரு உலகில் மகிழ்ச்சியாக இருங்கள்...’

எல்லாம் முடிந்த பிறகு தனிமையில் மெடியா சிந்தித்தாள். என் குழந்தைகளை கொன்றது தவறா? அவர்களுடைய தந்தையை தண்டிப்பதற்குப் பதில் அவர்களையே நான் தண்டித்துவிட்டேனா? அல்லது என்னையே இன்னொருமுறை நான் தண்டித்துக்கொண்டு விட்டேனா? கலகக்கார மெடியாவின் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த இந்தக் கருணை முகத்தை வெகு சிலரே தரிசித்தனர். அப்படி தரிசித்தவர்கள் அனைவருக்கும் மெடியாவைப் பிடித்துப்போனது. அன்பும் அருளும் கருணையுமாக மட்டுமே கடவுள்கள் இருக்க வேண்டியதில்லை. பல வேளைகளில் மெடியாக்களும் தேவைப்படுகிறார்கள். ஜேசன்களை வீழ்த்த!

சட்டம் ஒரு பெண்ணை ஆணைப் போலவே நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. நடைமுறையில் இவை எல்லாம்  பின்பற்றப்பட்டனவா என்று தெரியாது. இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்ததே கூட அப்போது ஒரு சாதனைதான் என்பதை உணரும்போது ஐசிஸின் அழுத்தமான தாக்கம் புரிய வரும்.

எத்தனை கடுமையாக முயன்றும், எவ்வளவோ ஒடுக்குமுறையை ஏவிவிட்ட பிறகும், ரோம மக்கள் - குறிப்பாக பெண்கள் ஐசிஸைக் கைவிடத் தயாராக இல்லை. ஒரு கடவுளாக மட்டுமல்ல... ஒரு தோழியாகவும் ஐசிஸை அவர்கள் தங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய சொந்த மகளே ஐசிஸை ரகசியமாக வழிபட்டு வரும் செய்தி காதில் விழுந்ததும் வெறுத்துப்போய்விட்டார் அகஸ்டஸ். அவரால் மட்டுமல்ல... அவருக்குப் பிறகு வந்தவர்களாலும் ஐசிஸை நெருங்கக்கூட முடியவில்லை.

அன்பும் அருளும் கருணையுமாக மட்டுமே கடவுள்கள் இருக்க வேண்டியதில்லை. பல வேளைகளில் மெடியாக்களும் தேவைப்படுகிறார்கள்.
ஜேசன்களை வீழ்த்த!

(வரலாறு புதிதாகும்!)