கீதா காளிராஜன்
‘‘குங்குமம் தோழியோட வாசகி பேசறேன். நான் அதிகம் படிக்கலை. பெரிசா சாதனைகள் ஏதும் பண்ணலை. என்னை மாதிரிப் பெண்களை தோழி வெளிச்சத்துக்குக் கொண்டு வருமா?’’ - தயக்கத்துடன் கேட்டார் திருநின்றவூரைச் சேர்ந்த கீதா காளிராஜன்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமாகத் திகழும் பெண்களை அடையாளம் காட்டுவதிலும் அங்கீகரிப்பதிலும் தோழி எப்போதும் முதல் நபராகவே நின்றிருக்கிறாள். அப்படி வெளிச்சத்துக்கு வந்த தோழிகளே அதற்கு சாட்சி. கீதா காளிராஜனும் இன்று அவர்களில் ஒருவராக இணைகிறார். இனி கீதாவின் கதை!
‘‘சாத்தூர் பக்கம் ஏழாயிரம் பண்ணைங்கிறது என்னோட பூர்வீகம். அந் தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருக்கேன். 21 வயசுல கல்யாண மாச்சு. கணவர் காளிராஜன் எட்டாவதுதான் படிச்சிருந்தார். ஆனா லும், ரொம்ப தங்கமான மனுஷன். ஒரு கெட்டப் பழக்கமும் கிடை யாது. ஆண் ஒண்ணும் பெண் ஒண்ணுமா ரெண்டு பிள்ளைங்க. வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டிருந்தது. 86ல திருநின்றவூருக்கு குடி வந்தோம். கணவர் டீக்கடை போட்டார். ஆரம்பிச்ச நாள்லேருந்து நான் அவருக்கு ஒத்தாசையா கடையில நின்னுருக்கேன். டீ போடறது, டிபன் பண்றதுனு கடை எப்போதும் பரபரப்பா இருக்கும். கணவருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. சர்க்கரை நோயும் அதிகமா இருந் தது. உடம்புக்கு முடியாம ரொம்ப சிரமப்பட்டார். கிட்டத்தட்ட 22 வருஷங்கள் அவருக்காகப் போராடியிருக்கேன்.
‘எப்படியாவது அவ ரோட நோயை குணப்படுத்திட மாட்டோமா, அவரை ஆரோக்கியமா மாத்திட முடியாதா’னு தவிச்சிருக்கேன். எதுவும் சரியா வரலை. 2014ம் வருஷம், மே மாசம் அவர் என்னை விட்டுட்டுப் போயிட்டார். அந்த அதிர்ச்சியி லேருந்து நான் இன்னும் வெளியில வரலை. ஏன்னா, நாங்க வாழ்ந்த வாழ்க்கை அப்படிப்பட்டது...’’ என்கிறவர் அதற்கு மேல் பேச முடியா மல் வார்த்தைகள் சிக்கி நிறுத்துகிறார். அவராகவே சமாதானமாகி, தன் கதையைத் தொடர்கிறார்.
‘‘நானும் சரி, என் கணவரும் சரி அதிகம் படிக்காதவங்க. அதனாலயே எங்கப் பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டோம். அதைப் போலவே பையனையும் பெண்ணையும் நல்லா படிக்க வச்சோம். ரெண்டு பேரும் இன்னிக்கு வாழ்க்கையில நல்ல நிலைமையில இருக்காங்க. 28 வருஷமா காலையில 3 மணிக்கு எழுந்திருக்கிறேன். எனக்கு முன்னாடி எழுந்திருச்சுப் போய் என் கணவர் 3:30 மணிக்கு கடையைத் திறப்பார்.
அந்த நிமிஷத்துலேருந்து வியாபாரம் ஆரம்பமாகும். ராத்திரி 8:30 வரை கடையில இருப்போம். புதுவருஷம், பொங்கல் மாதிரி நாட்கள்ல விடிய விடிய கடையைத் திறந்து வச்சிருப்போம். பொம்பிளைங்களை டீக்கடையில பார்க்கிறது அபூர்வம். ஏன்னா அங்கே பலதரப்பட்ட மக்களும் வந்து போவாங்க. எல்லாரோட பார்வையும் பேச்சும் ஒரே மாதிரி இருக்காது. இப்ப எனக்கு 57 வயசாச்சு. கல்யாண மாகி வந்த புதுசுலேருந்து அந்த சின்ன வயசுலயே என்னை தைரியமா தன் பக்கத்துல கடையில நிக்க வச்சுக்கிட்டவர் என் கணவர். யார் எ ன்ன சொன்னாலும் அன்பான வார்த்தைகள் சொல்லி நாசுக்கா அந்த இடத்தை விட்டு அனுப்பி வைப்பார். காலப்போக்குல அந்தப் பக்குவம் எனக்கும் வந்திருச்சு.
குடிச்சிட்டு கடைக்கு வர்றவங்க உண்டு... சாப்பிட் டுட்டு காசு கொடுக்காமப் போறவங்க உண்டு. யார்கூடவும் சண்டை போட்டதில்லை. என் கணவர் இருந்த வரை அவர்தான் எனக்கான பாதுகாப்பு அரண். அவரைப் பார்த்ததுமே என்கிட்ட மரியாதையா பேச ஆரம்பிச்சிடுவாங்க. ஆண் துணைங்கிறது அத்தனை பெரிய பலம். ஓய்வே இல்லாம 24 மணி நேரம் கடையில இருந்தப்ப மனசும் உடம்பும் கொஞ்சம் கூட தளர்ந்ததில்லை. ஆனா, அவர் போனதும் என்னோட பலத்தையெல்லாம் இழந்த மாதிரி இருக்கு. இப்பவும் கடையைத் திறக் கும் போது அவர் என் பக்கத்துல நிக்கிற மாதிரி இருக்கு. அவர் இல் லைங்கிற நிஜத்தை உணரும் போது மனசு பயங்கரமா வலிக்குது.
‘இனிமே டீக்கடை வியாபாரமெல்லாம் வேணாம்மா. உங்களை நாங்க பார்த்துக்கறோம். ரெஸ்ட் எடுங்க’னு பிள்ளைங்க சொல்றாங்க. ஆனா லும், என் கணவர் வளர்த்த கடையாச்சே... எங்கக் கடைக்கு போர்டு கூட வைக்கலை. திருநின்றவூர்ல வந்து ‘காளி டீக்கடை’னு கேட்டா யார் வேணாலும் வழி சொல்வாங்க. அவ்வளவு பிரபலம். சமீபகாலமா பிசினஸ் ரொம்ப டல் அடிக்குது. சரியான வருமானம் இல்லை.
ஆனா லும், அதை விட்டுட்டு வர மனசில்லை. என் உடம்புல தெம்பும் உயிரும் இருக்கிறவரைக்கும் என் சொந்தக் கால்ல நிக்கணும்னு விரும்பறேன். ஏன்னா இந்தக் கடையை மட்டுமல்ல... உழைக்கணும்கிற வெறியையும் தன்னம்பிக்கையையும் என் கூட விட்டுட்டுப் போயிருக்கார் என் கணவர்...’’ - கண்ணீர் மறைத்து கணீரென ஒலிக்கிறது கீதாவின் குரல்.
ஓய்வே இல்லாம 24 மணி நேரம் கடையில இருந்தப்ப மனசும் உடம்பும் கொஞ்சம் கூட தளர்ந்ததில்லை. ஆனா, அவர் போனதும் என்னோட பலத்தையெல்லாம் இழந்த மாதிரி இருக்கு...
இந்தக் கடையை மட்டுமல்ல... உழைக்கணும்கிற வெறியையும் தன்னம்பிக்கையையும் என்கூட விட்டுட்டுப் போயிருக்கார் என் கணவர்...