எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்



பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று  அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பாக வாகனப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழும் என்கிறார்கள். இன்னும் கொஞ்ச வருடங்களில்  பெட்ரோல், டீசல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு எல்லாமே எலெக்ட்ரிக்கல் ஆகிவிடும் என்று பீதியை வேறு கிளப்புகிறார்கள். அப்படி  எலெக்ட்ரிக்கல் ஆகும்போது இப்போதிருக்கும் வாகனத்தின் விலையை விட பல மடங்கு  அதிகமாக இருக்கும். இந் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்  களுக்கான தீவிர பரிசோதனை முயற்சிகள் வளர்ந்த நாடுகளில் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. அப்படியான ஒரு பரிசோதனை முயற்சியைப்  பார்ப்போம்.

ஜெர்மனியின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘நோவுஸ்’. சில மாதங்களுக்கு முன்பு லாஸ் வேகாஸில் நடந்த  கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2019-இல் புதுவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி பலரை வாய்பிளக்க வைத்தது. சைக் கிளுக்கும் மொபெட்டுக்கும் இடை யிலான அதன் தோற்றமே பலரை  ஈர்த்தது. மெலிதான அதன் சக்கரம், டயர், நம்பர் ப்ளேட் கண்களைக்  குளிர்வித்தன. முக்கியமாக இந்த மோட்டார் சைக்கிளில் லைட் இல்லை. கார்பன் ஃபைபரால் உருவான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்  இதுவே.  இதன் எடை வெறும் 38.5 கிலோ. கைகளாலேயே இதைத் தூக்கி விட முடியும். 14.4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி  பொருத்தப்பட்டிருப்பதால் சார்ஜ் போட்ட ஒருமணி நேரத்திலேயே 80 சதவீதம் சார்ஜாகிவிடுகிறது. ஒருமுறை பேட்டரியை முழுமையாக  சார்ஜ்  செய்துவிட்டால் 98 கி.மீ வரைக்கும் ஜாலியாக பயணிக்கலாம்.  அதிகபட்சம் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள்  பாய்கிறது. விலை 28 லட்ச ரூபாய் என்பதுதான் கொஞ்சம் பயமுறுத்துகிறது.