மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து!



கொசுக்களால் மக்களுக்குப் பரவும் நோய்கள் ஆறு. மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல். இவற்றில் அதிகம் பேருக்கு ஆபத்தைத் தருவது மலேரியா காய்ச்சல்.

உலக நாடுகளில் வருடந்தோறும் 30 கோடிப் பேருக்குப் புதிதாக மலேரியா ஏற்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு குழந்தை மலேரியாவால் இறந்து போகிறது. இந்தியாவில் சுமார் 18 கோடிப் பேருக்கு மலேரியா உள்ளது. 30 லட்சம் பேர் ஆண்டுதோறும் புதிதாக இந்த நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.

கொசுக்களில் 35 ஆயிரம் இனங்கள் உள்ளதாக கண்டுபிடித் துள்ளனர். அவற்றுள் அனா ஃபிலிஸ், குயூலெக்ஸ், ஏடஸ், மேன்சோனியா எனும் நான்கு வகைகள் மட்டுமே மனித இனத்துக்கு எமன்கள். இவற்றிலும் ஆண் கொசுக்கள் மிகவும் சாதுவானவை. பெண் கொசுக்கள் தான் ஆபத்தானவை. நமக்கு மலேரியாவைப் பரப்புவதும் பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மட்டுமே.

‘பிளாஸ்மோடியம்’ என்னும் புரோட்டோசோவா கிருமிகள் தான் மலேரியாவுக்கு மூல காரணம். இவை பெண் அனாஃபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள் இரவில்தான் நம்மைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர்வழியாக மலேரியாக் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்திற்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

இந்தக் காய்ச்சலில் 3 கட்டங்கள் உண்டு. முதல் கட்டத்தில் நோயாளிக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, களைப்பு உண்டாகும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சல் ஏற்படும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகி உடல் அனலாய்க் கொதிக்கும். மூன்றாம் கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும் உடல் ஐஸ் போல் குளிர்ந்துவிடும். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ மீண்டும் அதே நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி வந்து தொல்லை கொடுக்கும்.

மலேரியாவுக்கு ஆரம்பத்தி லேயே சிகிச்சை பெறத் தவறினால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்தசோகை ஏற்படுவது உறுதி. இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்பாற்றல் குறையும். சிலருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிருக்கு ஆபத்து நேரும். இன்னும் சிலருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர்க் காய்ச்சல்’ (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

மலேரியாவைக் குணப்படுத்து வதற்கு குளோரோகுயின், மெஃப்ளாகுயின், பிரிமாகுயின், ஆர்ட்டிமீத்தர் எனப் பல மாத்திரைகளும் ஊசிகளும் பயன்பாட்டில் உள்ளன, குளோரோகுயின் மாத்திரையைச் சாப்பிடும்போது கடுமையான வாந்தி வரும். இதனால் பல நோயாளிகள் இந்த மாத்திரையை சரியான அளவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அரை குறையாகவே சிகிச்சை பெறுகின்றனர்.

அப்படியே இந்த மாத்திரையை சரியான அளவில் தொடர்ந்து 3 நாட்களுக்கு எடுத்துக் கொண்டாலும், அதன் பிறகு பிரிமாகுயின் மாத்திரை யையும் ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் மலேரியா மீண்டும் ஏற்படாது. இதையும் பலபேர் முறைப்படி சாப்பிடுவதில்லை. இதுபோன்ற பல காரணங்களால் இந்த மாத்திரைகளையே எதிர்த்துப் போராடுகின்ற அளவுக்கு இப்போது மலேரியா கிருமிகளுக்கு ஆற்றல் வந்துவிட்டது. இதனால் மலேரியாவை பூரணமாக குணப் படுத்துவது என்பது மருத்துவ உலகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது.

இப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் மெம்பிஸ் நகரத்தில் உள்ள செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை ஆராய்ச்சி யாளர்கள் மலேரியாவைக் குணப்படுத்தும் புதியதொரு மாத்திரையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பேராசிரியர் கிப்ளின் கை (Kiplin Guy) இந்தப் புதிய மருந்து குறித்துப் பேசும்போது, ‘‘மலேரியாவை ஏற்படுத்தும் கிருமிகளில் பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம், ஓவேல், மலேரியே, வைவாக்ஸ் என்று நான்கு இனங்கள் உள்ளன.

இவற்றில் பிளாஸ்மோடியம் ஃபால்சிபேரம் கிருமிதான் மிகவும் ஆபத்தானது. மலேரியாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் பெரும் பாலோர் இந்தக் கிருமியால் நோய் வந்தவர்கள்தான். ஆகவே இந்தக் கிருமிகளை ஒழிக்கின்ற வகையில் மருந்து தயாரிக்க முற்பட்டோம்.

ஆயிரக் கணக்கான மருந்து மூலக்கூறுகளை ஆராய்ச்சியில் பயன் படுத்தினோம். இறுதியில் (+)SJ733 எனும்  வேதியியல் மூலக்கூறு,  ஃபால்சிபேரம் கிருமிகளை முற்றிலும் ஒழித்துவிடுவதைக் கண்டறிந்தோம். சுண்டெலி களிடம் இதைப் பரிசோதித்துப் பார்த்தோம். இதன் முடிவுகள் சரியாகவும் மனதுக்கு நிறைவாகவும் வந்துள்ளன. இனி மலேரியா ஏற்பட்டுள்ள மனிதர்களிடமும் இதைப் பரிசோதித்துப் பார்க்க உள்ளோம். அதன்பிறகு இந்த மூலக்கூறுக்குப் புதிய பெயரைச் சூட்டி மருந்துச் சந்தைக்குக் கொண்டு வருவோம்’’ என்றார்.

இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது?

‘‘மலேரியா கிருமிகள் நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் வசிக்கின்றன. கிருமி வளர்வதற்கு அதன் உடலில் சோடியம் அளவு சரியாக இருக்க வேண்டும். அதற்கு ATP4 புரதம் தேவை. இந்த மருந்து ரத்தத்தில் கலந்து, சிவப்பணுவுக்குள் நுழைந்து கிருமியின் உடலுக்குள் புகுந்து கொள்ளும். அங்குள்ள ATP4 புரதத்தை அழித்துவிடும். இதன் பலனால் கிருமிக்கு சோடியத்தின் சமநிலை மாறிவிடும். சோடி யத்தின் அளவு அதிகமாகிவிட்டால் கிருமி இறந்துபோகும். மலேரியாவுக்குத் தரப்படும் மற்ற மருந்துகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகமாக இது வேலை செய்கிறது.

மற்ற மலேரியா மருந்துகள், கிருமிகள் இல்லாத சிவப்பணுக்களையும் அழித்து விடும் தன்மை கொண்டவை. இதனால் நோயாளிக்கு ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. ஆனால் (+)SJ733 மருந்தானது கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிவப்பணுக்களை மட்டுமே தேர்வு செய்து அழிக்கக்கூடியது. எனவே மலேரியாவுக்கு எதிரான பனிப்போருக்குப் பயன்படுத்த இது ஒரு சரியான ஆயுதம்’’ என்கிறார் கிப்ளின் கை.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்