குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் ‘மகாத்மா மந்திர்’ அமைந்துள்ளது. ‘மந்திர்’ என பொருள்படும் சாதாரண கோயில் இது என்று நினைத்து விடக் கூடாது.
இது வெறும் நினைவாலயமும் அல்ல. மாறாக இது நவீன தொழில்நுட்பங்களைப் பயன் படுத்திக் கட்டப்பட்ட அரங்குகள் நிறைந்த வளாகமாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்பு குஜராத் முதல்வராக பணியாற்றியபோது, குஜராத் மண்ணின் மைந்தரான காந்திஜியின் நினைவாக ஒரு நினைவகம் கட்ட முடிவு செய்தார். அதுவே மகாத்மா மந்திர் என அழைக்கப் படுகிறது.
திட்டத்தின் முதல் பகுதி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. இது ரூ.135 கோடி செலவில் 180 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டியபோது குஜராத் மாநிலத்தின் 18,000 கிராமங்களிலிருந்து கலசத்தில் மண் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் கொட்டப்பட்டது.
இரண்டாவது கட்டமாக ரூ. 80 கோடி செலவில் கட்டப்பட்ட தண்டி குதிர், பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஜனவரி 8ல் திறந்து வைக்கப்பட்டது. இங்கு மகாத்மாவின் தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் 45 மீட்டர் உயர உப்பு மேடு நிறுவப்பட்டுள்ளது.
இந்த மேட்டில் ஒரு நான்கு மாடிக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மையப் பகுதியில் மகாத்மாவின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலங்களையும் சித்தரிப்பதற்காக குளிர் சாதன வசதி கொண்ட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட விரிவாக்கத்தில் தோட்டம், கார்கள் நிறுத்து மிடம், காற்றாலை ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. மகாத்மா மந்திரில் 15,000 மக்கள் கூடக் கூடிய மூன்று நிரந்தர கண்காட்சி அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. கூட்டம் நடத்த கட்டப்பட்டுள்ள அரங்கில் 6000 பேர் அமர முடியும். இதில் மூன்று மாடங்களிலிருந்து பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கலாம். இது தவிர நான்கு மாநாட்டுக் கூடங்களும் கட்டப்பட்டுள்ளன.
ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட அனுபவம் உட்பட காந்தியடிகளுக்கு தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்கள்... அவமானங்கள்... இந்தியாவில் காந்தியடிகளின் பயணம், தண்டி யாத்திரை ஆகியவற்றைச் சித்தரிக்கும் காட்சிகளை இங்குள்ள அருங்காட்சியகத்தில் காணலாம்.3டி தொழில்நுட்பம் மற்றும் 3டி வரைபடங்கள், 360 டிகிரி அனுபவம், ஹாலோகிராஃபிக் தொழில் நுட்பம், வீடியோக்கள் மற்றும் ஒரு திரையரங்கம் ஆகியவை இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன.
இதன் ஒரு பகுதி காந்தியடிகளின் சீடர்களான நெல்சன் மண்டேலா மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.சத்தியத்தை கொள்கையாகவும் அகிம்சையை ஆயுதமாகவும் கொண்டு போராடிய மகாத்மாவுக்கு எழுப்பப்பட்ட இந்த ஆலயம் உண்மைக்கானது. இது உலகம் முழுவதுக்குமான புனிதத் தலம்!
க.ரவீந்திரன், ஈரோடு.