குடும்ப வாழ்வில் நிறைவு காண புதிய சிகிச்சை



இன்றைய தினம் மாறிவரும் உணவுமுறை, உடல் உழைப்பு குறைவு, உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வந்துவிடுவதை அறிவீர்கள்.

அதே வேளையில், அவ்வளவாக வெளியில் தெரியாமல் ஒரு குறைபாடு இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்து வருவதை நீங்கள் அறிவீர்களா? அண்மையில் பல மருத்துவப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி உலக சுகாதார நிறுவனமே எச்சரிக்கை விடுத்துள்ள அந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘ஆண்மைக் குறைவு’.

இனிய இல்லறத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்ற இந்தப் பிரச்னையால் குடும்ப உறவில் விரிசல், குழந்தைப்பேறின்மை, மனைவியின் மீது சந்தேகம், விவாகரத்து, கொலை, தற்கொலை போன்ற சமூகம் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்து வருவதாக அதே புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாகவும், இதற்குத் தீர்வு காணும் விதமாகவும் ‘திருமணத்துக்குமுன் ஆண்மைப் பரிசோதனை அவசியம்’ என்ற ரீதியில் நாட்டில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவம் பலவிதத்தில் முன்னேறி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்மைக்குறைவைப் போக்கவும் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் புதிதாக ஒரு மருத்துவமுறை இப்போது நுழைந்துள்ளது. அதன் பெயர் ‘எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் ஷாக்வேவ் தெரபி(Erectile Dysfunction Shock Wave Therapy).

இது எப்படிப் பலன் தருகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் என்கிற அடிப்படை அறிவியலைத் தெரிந்துகொள்வது நல்லது. போதுமான பாலியல் அறிவு இல்லாத காரணத்தால் இங்கு தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையைக் கெடுத்து வருகிறது. உண்மையான காரணங்களை அறிந்து அவற்றைக் களைந்துவிட்டால், ஆண்மைக் குறைவுக்கும் இடமில்லாமல் போகும்.

பார்த்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய மூன்று செயல்கள் பாலுறவு வேட்கையைத் தூண்டுவதற்குத் தேவைப்படும் அடிப்படை விஷயங்கள். இந்த மூன்றுக்குமே நரம்புகளின் செயல்பாடு சரியாக இருக்க வேண்டியது அவசியம். பார்க்கும்போதே எதிர்பாலினத்தின் மீது கவர்ச்சி உண்டாவது, பார்வை நரம்புகளின் தூண்டலில்தான் நிகழ்கிறது.

உடலை நுகரும்போது பாலுறவு வேட்கை அதிகரிப்பதற்கு நுகரும் நரம்புகளின் தூண்டல்தான் காரணம். அதுபோல், ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தொடும்போது உண்டாகின்ற உணர்ச்சி, உணர்வு நரம்புகளைத் தூண்டி, அவர்களைப் பாலுறவுக்குத் தயார்படுத்துகிறது.

பாலுறவு வேட்கை தொடங்கியதுமே ஆணுறுப்பில் ரத்தக் குழாய்கள் பலூன் மாதிரி விரிந்து கொடுக்கின்றன; அங்கு ரத்தம் முன்பைவிட அதிக அளவில் பாய்கிறது. இதனால் விறைப்புத் தன்மை ஏற்படுகிறது. இவை எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்றால், அந்தத் தசைகளில் உள்ள ரத்தத்தில் நைட்ரிக் ஆக்ஸைடு (Nitric   Oxide) எனும் வேதிப்பொருள், 

 வி.ஐ.பி. (Vasoactive Intestinal Polypeptide) எனும் என்சைம், ‘அசிட்டைல் கொலின்’ (Acetyl Choline) எனும் நரம்பு ரசாயனக்கடத்தி, தைராக்சின் ஹார்மோன் ஆகியவை சரியான அளவில் இருக்க வேண்டும். இவைதான் தூதர்கள் போலச் செயல்பட்டு, விறைப்பு நிலையைத் தூண்டுவது மட்டுமல்லாமல், நீடிக்கவும் வைக்கின்றன. இத்தனையும் சரியாக அமைந்தால் மட்டுமே விறைப்புத் தன்மை சரியாக இருக்கும். இதற்கு ஆரோக்கிய உணவுமுறை அவசியம்.

நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, உடல் பருமன், மன அழுத்தம் போன்றவை இதைக் குளறுபடி செய்யும் முக்கிய காரணங்கள். புகை பிடிப்பவர்களுக்கு ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடுவதாலும் மது அருந்துபவர்களுக்குத் தானியங்கி நரம்புகள் பாதிப்படுவதாலும் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பம், குடும்பச் சிக்கல்கள், தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து மோதல்கள், ஓய்வில்லாத அலுவலக வேலைப்பளு ஆகியவற்றாலும் இது தலைதூக்கும்.

இப்போதைய சூழலில், வேலையின்மை, தன்னம்பிக்கைக் குறைவு, கவலை, ஏமாற்றம், சந்தேகம் போன்ற உளம் சார்ந்த பாதிப்புகளால் ஆண்மைக் குறைவுக்கு அதிகமாக இரையாகிறவர்கள் இளைஞர்கள்தான்.

இதில் 90 சதவீதம் பேருக்கு மனநல ஆலோசனை கொடுத்தாலே இது சரியாகிவிடும். மீதி 5 சதவீதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். அப்படி உண்மையிலேயே சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகின்ற சிகிச்சையாக அமைந்துள்ளது ‘எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் ஷாக்வேவ் தெரபி’.

சிறுநீரகக் கற்களை உடலின் வெளிப்பக்கத்திலிருந்தே உடைக்கின்ற நுண்ணொலி அதிர்வுகள்தான் இதற்கும் உதவுகின்றன. வித்தியாசம் என்னவென்றால், சிறுநீரகக் கற்களை உடைக்க அதிக அடர்த்தியுள்ள அதிர்வுகளை உடலுக்குள் அனுப்ப வேண்டும். மாறாக, ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்குக் குறைந்த அதிர்வுள்ள அதிர்வலைகளை அனுப்ப வேண்டும்.

கணினி உதவியுடன் செயல்படுகின்ற இந்தக் கருவிக்குப் பெயர்   ணிஞி   1000. ஆண்மைக் குறைவுக்கு அடிப்படைக் காரணம் ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பது. இதைச் சரி செய்கிறது இக்கருவி. முதலில் எந்த அளவுக்கு எவ்வளவு நேரத்துக்கு அதிர்வலைகளை அனுப்ப வேண்டும் என்பதை ‘செட்’ செய்துகொண்டு இதை இயக்க வேண்டும். இந்த அதிர்வலைகளைத் தொடர்ந்து ஆணுறுப்புக்குச் செலுத்தும்போது, அங்குள்ள ரத்தக்குழாய்களில் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தடேஸ் எனும் வேதிப்பொருள் உருவாகிறது.

இது தசைகளில் ரத்தக்குழாய்கள் உருவாக உதவுகின்ற பல காரணிகளைத் தூண்டுகிறது. இதன் பலனால் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் புதிதாகத் தோன்றுகின்றன. ரத்த ஓட்டம் முன்பைவிட அதிகரிக்கிறது. இப்படி  இயற்கை வழியில் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது இக்கருவி.

வாரத்துக்கு இரண்டு முறை வீதம் மொத்தம் 12 முறை இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படி 6 முறை பயன்படுத்திய உடனேயே சிகிச்சையில் முன்னேற்றம் தெரியும். இதில் ஊசி இல்லை, மருந்து மாத்திரை இல்லை, வலி இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை என பல நன்மைகள் இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர். ஏற்கனவே 21 உலக நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது. இப்போது தமிழ்நாட்டிலும் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.  
  
(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்