டியர் டாக்டர்
புற்றுநோயையும் குணப்படுத்தக்கூடிய லவங்கப்பட்டையின் அற்புதங்களை அறிந்தோம். எங்கள் வீட்டுச் சமையலில் இனி லவங்கப்பட்டை மிஸ் ஆகாது. - என்.வேதவல்லி, திருநெல்வேலி, இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. ‘தலைவலிதானே... ஒரு மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று இருந்துவிட்டு பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளாதீர்கள்’ என ஒற்றைத் தலைவலியின் ஆபத்தைப் பற்றி சொன்னது ‘பொளேர்’ என்று அடித்தது போல இருந்தது. - கே.சிவராம், பெருந்துறை., லாவண்யா சந்திரன், திருச்சி மற்றும் மகேஷ் ராஜ், கடலூர்.
சைனஸ் பிரச்னை இருக்கும் என் போன்றவர்களுக்கு எண்ணெய் தடவுவதில் இருந்த பல நாள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தது ‘கூந்தல்’ பகுதி. அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக் மிகத்தெளிவாக எண்ணெய் குளியல் பற்றி விளக்கியிருந்தார். - ஆர்.மேகலா, தஞ்சாவூர்., அனிதா மேரி, புதுச்சோி மற்றும் ஷாலினி சந்தோஷ், சென்னை-20.
‘ஸ்டீராய்டு, நோயைக் குணமாக்கும் மருந்தல்ல... நோயை மறைக்கும் மருந்து’ என அறியாமல், சுயமாக கடைகளில் வாங்கி சாப்பிடுவோருக்கு எச்சரிக்கையூட்டுவதாக இருந்தது அட்டைப்படக் கட்டுரை! - எல். கணேசன், திருவாரூர் மற்றும் பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.
தூக்கத்திற்கும் ஜலதோஷத்திற்கும் ‘லிங்க்’கா? அம்மாடியோவ்… அச் அச்... இந்த வகையிலுமா என சிந்திக்க வைத்தது! - என். சுகந்தி நாராயண், வியாசர் நகர், சென்னை.
எதிர்காலத்தில் பச்சை கோட் போட்ட ரோபோதான் உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்யப்போகிறது என்று டாக்டர் ஹரிஹரன் கூறியது ஆச்சரியமும் திகிலும் தந்தது. - ஹெச்.மணிகண்டன், மதுரை. ‘குங்குமம் டாக்டர்’ இதழின் முதலாம் ஆண்டு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. - எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை.
சமூகத்தாலும் குடும்பத்தாலும் தனிமைப்படுத்தப்படும் இளைஞர்கள் தற்கொலை முயற்சியில் இறங்குவது மிகக் கொடுமை. டாக்டர் லஷ்மி கூறியது போல கல்வி முறை, சமூகம், பெற்றோர் என அனைத்துத் தரப்பும் இணைந்தால்தான் தற்கொலையைத் தடுக்க முடியும் என்பது உண்மை. அனுசரிப்புக் கோளாறு பற்றிய தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை.
- எம். ராமமூர்த்தி, சென்னை-41 (மின்னஞ்சலில்...) மற்றும் ஆர். மாதவன், ஈரோடு.
|