காதைக் காக்குமா ஹெட்செட்?
தேவை அதிக கவனம்!
24 மணி நேரமும் நம்முடனே இருக்கிற அளவுக்கு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது செல்போன். கேட்கும் திறன் முதல் மூளை வரை இது பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும், மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை பலரும்.
 செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதற்குப் பதிலாக ஹெட்போனை பயன்படுத்துவது நல்லது என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது. காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் பெ.சோழன் இது பற்றி விளக்குகிறார்.
``செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்து பேசுவது ஆபத்து. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோர் ஹெட்செட், ஹெட்போன் உபயோகிக்கலாம். செல்போனை தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் 80 டெசிபல் அளவு சத்தத்தைக் கேட்கும் நிலையில், உட்காதின் உட்புறம் உள்ள உயிரணுக்கள் (Inner Hair Cells) பாதிப்புக்கு உள்ளாகும்.
90 டெசிபல் அளவு ஓசையைத் தொடர்ந்து கேட்கும் நிலையில் இந்த உயிரணுக்கள் விரைவாக பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கும். மேலும் அதிக ஓசையைத் தொடர்ந்து கேட்கும்போது, காதின் உட்புற உயிரணுக்கள் பாதிப்பு அடையும். இதன் காரணமாக, கேட்கும் திறன் மெல்ல மெல்ல குறையும். இந்த பாதிப்பில் இருந்து விடுபட ஹெட்போன் மற்றும் ஹெட்செட் உபயோகிப்பது ஓரளவு பயன் தரும்.
ஹெட்போனை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினாலோ, ஒருவர் மாற்றிஒருவர் உபயோகித்தாலோ தொற்று வரக்கூடும். ஒரு கட்டத்துக்குப் பின் நம்முடைய காதுகளில் இருந்து தானாக வெளியேறும் அழுக்கு அப்படியே தங்கி விடும். இதன் காரணமாகவும் காதுகள் கேட்கும் திறனை இழக்கும்.
செல்போன் ஓசையின் அளவு 15 டெசிபலுக்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும். செல்போனில் தொடர்ந்து பேசுபவர்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் காதின் சருமம் பாதிப்பு அடையும். காது துவாரத்தில் Otitis Externa எனும் அலர்ஜி உண்டாகும். ஹெட்போன், ஹெட்செட் உபயோகித்தாலும், உள்காதின் செல்கள் பாதிப்பு அடையும். அதனாலும் காது கேட்கும் திறனை இழக்கும். இதை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஹியரிங் எய்ட்ஸ் பயன்படுத்துவதுதான் ஒரே தீர்வு...’’செல்போனில் தொடர்ந்து பேசுபவர்கள் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
- விஜயகுமார் படம்: ஏ.டி.தமிழ்வாணன்
|