ஜூலை 29 உலக ORS தினம்



ஓ பாப்பா லாலி!

உயிர் காக்கும் உப்பு சர்க்கரை கரைசல்!

வயிற்றுப்போக்கு காரணமாக இடைவிடாமல் மலம் கழிப்பதும்,அடிக்கடி வாந்தி எடுப்பதும் குழந்தைகளின் உடலில்  நீரின் அளவுகுறைவதற்கான அறிகுறி.  இந்த நீரிழப்பு காரணமாக ரத்த அழுத்தம் குறைதல், எடை இழப்பு, சிறுநீரகச் செயல் இழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். சில வேளைகளில் உயிரிழப்புக்கும் காரணமாகும். இப்பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதம் குறித்துப் பேசுகிறார் குழந்தைகள்நல மருத்துவர் பென்னி பெஞ்சமின்.

``குழந்தைகள் சுவாசிக்கும்போதும் உண்ணும்போதும் வாய் வழியாக ஏராளமான கிருமிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் வயிற்றினுள் செல்கின்றன. இதனால் தொற்று உண்டாகி, சிறுகுடலும் பெருங்குடலும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதனால், ஒரே நேரத்தில்குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. நீரிழப்பு (Dehydration) பெருமளவில் உண்டாகிறது.

பொதுவாக மனித உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். குழந்தைகளின் உடலில் உள்ள நீரின் அளவு 70 சதவிகிதம். நீரிழப்பின் ஆரம்ப நிலையில், உப்பு, சர்க்
கரையைத் தண்ணீருடன் கலந்து கொடுப்பதன் மூலம், அதைக் கட்டுப்படுத்த முடியும். இந்த கரைசலில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.  1 டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் சர்க்கரையும், கால் டீஸ்பூன் உப்பும் கலந்து கொடுக்கலாம். அதாவது உப்பின் அளவு குறைவாகவும், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

இந்த கரைசலில் சோடியம் குளோரைடு IP 2.6 கிராம், டெக்டாஸ் IP 13.5 கிராம், பொட்டாசியம்குளோரைடு IP 1.5 கிராம், ட்ரைசோடியம் சிட்ரேட் IP 2.9 கிராம் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருக்கும். வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க முதலுதவியாக குழந்தைகளுக்கு ORS என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் Oral Rehydration Salt கரைசல் கொடுக்க வேண்டும்.

குழந்தையின் எடையைப் பொறுத்து ORS கரைசல் தரலாம். உதாரணமாக... 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு 100 மி.லி. அளவு உப்பு சர்க்கரை கரைசல் புகட்டலாம்.  அதில் வயிற்றுப்போக்கு குணமாகவில்லைஎன்றால், இரண்டாம் கட்ட சிகிச்சையாக
குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் கொடுக்கலாம்.

அதிக அளவு நீரிழப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஜூரம் வரும். ரத்த அழுத்தம் குறையும். எடை குறையும். சிறுநீரகம் செயல்படாமல் போகும். இதனால் மரண அபாயமும் ஏற்படலாம். நீரிழப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு  ORS கரைசலை கொடுப்பதோடு, உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டுவதை  நிறுத்தக் கூடாது.

ஏனென்றால், அதில் எதிர்ப்பு சக்தி அதிகம். இதோடு, எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளைத் தருவது நன்மை தரும். தயிர் தரலாம். தாய்ப்பால் தவிர்த்து வேறு பால் தருவதாக இருந்தால், அதில் தண்ணீர் கலந்தே கொடுக்க வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள் மலம் கழிப்பதைஎளிதாக்கும் என்பதால் அவ்வகை உணவுகளை வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது நல்லது. பழ வகைகளில் மாதுளை கொடுக்கலாம். சாத்துக்குடி ஜூஸ்  தரலாம்...’’

1960ல் அமெரிக்காவை சேர்ந்த வேதியியல் நிபுணர் டாக்டர் ராபர்ட் கே.கிரேன் ‘சோடியம்-குளுகோஸ் கோ-டிரான்ஸ்போர்ட் சிஸ்ட’த்தை கண்டுபிடித்தார். உலக நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழப்பதை Oral Rehydration Salt தடுக்கிறது. பங்களாதேஷில் 1971ல் ஆயிரக்கணக்கான அகதிகள் காலரா காரணமாக நீரிழப்பால் அவதிப்பட்டனர். அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு டாக்டர் ராபர்ட் கண்டுபிடிப்பான ORSஐக் கொடுக்க, 30 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் 3 சதவிகிதமாகக்குறைந்தது.

‘இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாடிரிக்ஸ்’ அமைப்பு ஜூலை 29ம் தேதியை ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட் தினமாக அறிவித்துள்ளது. வயிற்றுப்போக்கால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த விஞ்ஞானியான டாக்டர் திலீப் மகாலனாபிஸ் பணிகளை நினைவுகூர்வதற்காகவும்  இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் தன் சக விஞ்ஞானிகளோடு கொல்கத்தா மற்றும் டாக்காவில் பணியாற்றியவர். ORSஐ வளர்ச்சி அடைய செய்த குழுவில்உறுப்பினராக இருந்தவர்.

அதிக அளவு நீரிழப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஜுரம் வரும். ரத்த அழுத்தம் குறையும். எடை குறையும். சிறுநீரகம் செயல்படாமல் போகும். இதனால் மரண அபாயமும் ஏற்படலாம்.

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்