இனிப்பைக் குறைத்தும் இனிமையாக உண்ணலாம்!



சுகர் ஸ்மார்ட்

1. நீரிழிவைச் சமாளிப்பது என்பது அறிவியல் மட்டுமே அல்ல...
அது ஒரு கலை!

நீரிழிவாளர்களுக்கு மட்டுமல்ல... எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும் கூட, சர்க்கரை பயன்பாடு அதீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. ‘வேணாம்... ஆனா, வேணும்’ என்கிற இரட்டை மனநிலைக்குள் நம்மைத் தள்ளுகிற இந்த இனிப்பை என்னதான் செய்வது?ரொம்பவும் யோசித்துக் குழம்ப வேண்டாம். இதோ... இந்த குட்டி மாற்றங்கள் நம் உடல்நலத்தைப் பாதிக்காமலே, உணவை இனிமையாக்கும்.

*ஃப்ரெஷ் ஜூஸ் நல்லதே... நீரிழிவு இல்லாதவர்களுக்கு மட்டும். நீரிழிவாளர்களும் எடை குறைப்பில் ஈடுபடுவோரும் இதற்கு மாற்றாக அனுமதிக்கப்பட்ட பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஜூஸில் அதிக அளவு சர்க்கரையும் குறைந்த அளவு ஊட்டச்சத்துமே உள்ளன. உதாரணமாக... ஓர் ஆப்பிளில் 2.6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 50 கலோரியும் உள்ளன. அதோடு, பழத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நம் வயிறு நிறைவதாகவும் உணர வைக்கிறது. 250 மி.லி. ஆப்பிள் ஜூஸிலோ 6 டீஸ்பூன் அளவு சர்க்கரையும். 123 கலோரியும்
உள்ளன.

*பாக்கெட் பவுடர்களாக விற்கப்படும் இன்ஸ்டன்ட் சூப் வகைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே ஃப்ரெஷ் ஆக சூப் தயாரித்து சூடாகப் பருகலாம். ஏனெனில், இன்ஸ்டன்ட் சூப்களில் 4 டீஸ்பூன் அளவு சர்க்கரையும் 171 கலோரிகளும் காணப்படுகின்றன. நாமே தயாரிக்கும் சூப்பில் புத்தம்புது காய்கறிகளைப் பயன்படுத்துவோம்... அதில் சர்க்கரை குறைவு... ஊட்டச்சத்தோ அதிகம். இதயத்துக்குப் பாதிப்பு உண்டாக்கும் அதிக அளவு உப்பையும் நாம் தவிர்க்க முடியும்.

*கடைகளில் கிடைக்கிற ஃப்ரூட் யோகர்ட் போன்றவை கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம். மாற்றாக சர்க்கரை இல்லாத பிளைன் யோகர்ட் சாப்பிடலாம்... அதிக இனிப்பில்லாத பழங்களை தனியாகச் சாப்பிடலாம்.

*காபி ஷாப்களில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் வேளையில் ஹாட் சாக்லெட், க்ரீம் கலந்த பானங்களைத் தவிர்க்கலாம். இவற்றில் 4.5 டீஸ்பூனுக்கும் அதிக சர்க்கரையும், 200 கலோரியும் உள்ளன. கொழுப்பு தனி! தேநீரிலோ குறைவான சர்க்கரையும் 20 கலோரியும்தான் கிடைக்கும், பால் கலந்திருந்தாலும் கூட! எது நல்லது?

*ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமில் 3 டீஸ்பூன் சர்க்கரையும் 180 கலோரியும் காணப்படுகின்றன. ஆசைக்கு எப்போதாவது செயற்கை இனிப்புள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். உண்மையில் வாழைப்பழத்தில் இதைவிட அதிக சத்துகளும் குறைவான சர்க்கரையுமே உள்ளன. ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டைப் பொருத்தே வாழைப்பழ காமெடிகளுக்கு அனுமதி!

*எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என அதீத வேட்கை ஏற்பட்டால், சடாரென சாக்லெட்டை எடுக்க வேண்டாம். ஒரு பார் சாக்லெட்டில் 260 கலோரியும் 6 டீஸ்பூன் சர்க்கரையும் இருக்கக் கூடும். அது மட்டுமல்ல...

இனிப்பு ஆர்வமும் இதில் அடங்காது. கடலைமிட்டாயும் சிப்ஸும் கூட இப்படித்தான். தின்னத் தின்ன இன்னும் இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கும். ஒன்று மட்டும்தான் எனத் தொடங்கி, ஒரு பாக்கெட்டையே காலி செய்பவர்களே நம்மில் பலர். மாற்றாக கொஞ்சம் செர்ரி அல்லது கொய்யா சாப்பிடலாம். ஒரு சிறிய கப் செர்ரியில் 50 கலோரியும் 2 டீஸ்பூன் சர்க்கரையுமே உள்ளன. ஸ்வீட் டேட்டாசராசரி அமெரிக்கர் தன் வாழ்நாளில் 35 டன் உணவு உட்கொள்கிறார்!

2. வாய் நாற்றமா? நீரிழிவாக இருக்கலாம்!

இந்தத் தலைப்பைச் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் பல் மருத்துவர் யஷ்வந்த் குமார் வெங்கடராமன். உண்மைதான்... வாயே நோயைச் சொல்லும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, நீரிழிவையும் வாய் நாற்றமே சொல்லி விடுகிறது. அதோடு, நீரிழிவாளர்களும் இன்ன பிறரும் வாய் மற்றும் பற்களைப் பராமரிப்பது குறித்தும் அவர் விளக்குகிறார்.

வாய் நாற்றம் என்பது நாம் வாயின் வழியே வெளியிடும் காற்றின் வாசம்தான். இது விரும்பத்தகாத மணமாக இருக்கும்பட்சத்தில் Bad Breath அல்லது Halitosis என்று அழைக்கப்படுகிறது. மிகுந்த தர்மசங்கடம் விளைவிக்கும் இந்த விஷயத்தை நாம் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. முக்கியமாக நம்மை விட நமக்கு அருகில் உள்ளவர்களே, இதனால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

வாய் நாற்றத்தின் ஆரம்பம் பல் சுத்தம், வாய் சுத்தம் இல்லாததுதான். சில நேரங்களில் உணவில் அதிகம் சேர்க்கப்பட்ட பூண்டும் பின்விளைவுகளை அளிக்கும். இந்தச் சிறிய காரணங்களைத் தாண்டினால், அது பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், உடனடியாக பல் மருத்துவரின் துணையோடு, இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

சரி... வாய் எப்படி நோயை சொல்லும்?

*வாய் பராமரிப்பு சரியில்லாத காரணத்தால், வாயிலுள்ள பாக்டீரியாக்கள் கந்தக சேர்மங்களை வெளியிடும்.

*மூச்சுக்காற்றில் பழ வாசனை இருப்பது ketoacidosis என்ற நிலையைக் குறிக்கும். இது நீரிழிவு உள்ளவர்களுக்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம். இது மிக அபாயமான ஒரு நிலையாகும். இன்சுலின் மிகமிகக் குறைந்து, உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களும் எரிக்கப்பட்டு, உடல் அபாயகட்டத்தை நோக்கிச் செல்லும்.

*அதீத துர்நாற்றம் வாயிலிருந்து வெளிப்படுமானால், அது வயிற்றுக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். தொடர்ச்சியாக வாந்தி எடுத்திருந்தாலும் இப்படி நேரலாம்.

*சிறுநீர் அல்லது மீன் அல்லது அமோனியா நாற்றம் இருந்தால், அது தீவிரமான சிறுநீரகப் பிரச்னையாகலாம்.

*அழுகிய பழ வாசனை Anorexia Nervosa எனும் சாப்பிட பயப்படும் குறைபாட்டைக் குறிக்கும். எடை அதிகமாகி விடுமோ என்ற பயத்தில் உணவைத் தவிர்க்கும் மனநலப் பிரச்னை இது.

*ஆஸ்துமா மற்றும் நுரையீரல், கல்லீரல் பிரச்னைகளும் மூச்சுக்காற்றில் மாறுபட்ட நாற்றத்தை உண்டாக்கும்.

இவை இருக்கட்டும். வாய் நாற்றத்தின் மூலமே நீரிழிவை அறிய முடியும் என்பதே சமீபத்திய ஆய்வு முடிவு. நீரிழிவுக்கு முந்தைய நிலையையும் ஆரம்ப கால நீரிழிவையும் கூட, ‘இன்ஃப்ராரெட் ப்ரீத் அனலைசர்’ கருவி மூலம் கண்டறிய முடியும். இது மட்டுமல்ல... ப்ரீத்தலைசர் கருவியை பயன்படுத்தியே ரத்த சர்க்கரை அளவை அறியக்கூடிய சோதனைகளும் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது வெற்றியடையும் பட்சத்தில், நீரிழிவாளர்கள் ஒரு துளி ரத்தத்தைக்கூட பரிசோதனைக்காக அளிக்க வேண்டியதில்லை!

டயாபடீஸ் வாய் மணத்துக்கு என்ன காரணம்?

நீரிழிவாளர்களின் வாய் நாற்றத்துக்கு முதல் காரணம் ஈறு சார்ந்த பிரச்னைகளே...இவற்றை Gum Diseases (Periodontitis) என்று குறிப்பிடுகிறோம். Periodontitis என்பதை பல்சூழ்திசு அழற்சி என்று தமிழில் சொல்லலாம். ஈறு அழற்சி அல்லது ஈறுவீக்கமான gingivitis, லேசான அல்லது நடுத்தரமான அல்லது பல்சூழ்திசு அழற்சி வரை பலதும் ஈறு சார்ந்த பிரச்னைகளே...

இந்நோய்களில் நம் பல்லுக்கு ஆதரவு அளிக்கும் திசுக்களையும் எலும்புகளையும் பாக்டீரியா வெறியோடு தாக்குகிறது. இதனால் வீக்கம் ஏற்படுகிறது. அதோடு விட்டால் பரவாயில்லை... வீக்கம் காரணமாக உடலின் மெட்டபாலிசம் என்கிற வளர்சிதைமாற்றமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

வளர்சிதைமாற்றத்தில் கோளாறு ஏற்பட்டால், ரத்த சர்க்கரை அளவு கூடுவதும் இயல்பு. அதன் பிறகு நீரிழிவும் மோசமாகும் என்பது நாம் அறிந்ததே. சாதாரணமாக பல்லிலோ, ஈறிலோ ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிரச்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், நீரிழிவையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது அதிர்ச்சியான செய்திதானே?

மற்றவர்களை விடவும், நீரிழிவாளர்களுக்கு ஈறு நோய்களைக் குணப்படுத்த அதிக காலம் பிடிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீரிழிவும் ஈறு நோய்களும் சேரும்போது இருமுனைக் கத்தி போல அபாயமாகி விடுகிறது. நீரிழிவு காரணமாக ஈறு நோய்கள் ஏற்படலாம். ஈறு நோய்கள் காரணமாக நீரிழிவு அதிகமாகலாம். IOSR Journal of Dental and Medical Sciences  அளித்துள்ள ஆய்வுத்தகவலின் படி, மூன்றில் ஒரு நீரிழி வாளருக்கு ஈறு நோய்களும் இருக்கின்றன.

ஏற்கனவே நீரிழிவுடன் தொடர்புள்ள இதய நோய்கள், ஸ்ட்ரோக் ஆகியவற்றோடும் ஈறு நோய்களுக்குத் தொடர்பு இருப்பது அடுத்த அதிர்ச்சி.கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு காரணமாக உடலின் ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது. ஈறுகளிலும் இப்பிரச்னை எதிரொலிக்கிறது. ஈறுகளுக்கும் பற்களுக்கும் போதுமான ரத்தம் பாயாவிட்டால், அவை பலவீனம் ஆவதோடு, நோய்த்தொற்றுக்கும் ஆளாகின்றன.

வாய்ப்பகுதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, அங்கு பாக்டீரியாவும் கன்னாபின்னாவென வளர்கிறது. இதனால் நோய்த்தொற்றும் வாய் துர்நாற்ற மும் உண்டாகின்றன. சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத போதோ, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் திறனையும் உடல் இழக்கிறது. ஈறு நோய்கள் குணமாவதும் கடினமாகிறது. இப்படி சுத்திச் சுத்தி அடிக்கிறது இந்தத் தாக்குதல் புயல்!ஈறு நோய்களின் பிரதான அறிகுறி வாய் நாற்றம்தான். மற்ற அறிகுறிகள்...

*சிவந்த அல்லது மென்மையான ஈறு...
*ஈறுகளில் ரத்தக் கசிவு...
*பல் கூச்சம்...
*ஈறு பின்னடைதல்...
ஈறு பிரச்னைகளிலிருந்து எப்படி வருமுன் காப்பது? நீரிழிவு கரோட்டின் என்ற நிலையை ஏன் அபாயமாகக் கருதுகிறோம்? அடுத்த இதழில் பேசுவோம்.

சாதாரணமாக பல்லிலோ, ஈறிலோ ஏற்படக்கூடிய ஒரு சிறிய பிரச்னை கண்டுகொள்ளாமல் விடப்பட்டால், நீரிழிவையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். நீரிழிவும் ஈறு நோய்களும் சேரும்போது இருமுனைக் கத்தி போல அபாயமாகி விடுகிறது.

(கட்டுப்படுவோம்...  கட்டுப்படுத்துவோம்!)       

தாஸ்