கூந்தல்



1. நரை

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

வயதானதன் அறிகுறியாக நரையைப் பார்ப்பவர்கள் மனிதர்கள். ஆனால், விலங்குகள் அப்படியில்லை தெரியுமா? காட்டுப் பன்றிகளைப் பொறுத்தவரை அவற்றின் ரோமம் நரைத்திருப்பது என்பது ஆரோக்கியத்தின் அறிகுறியாம்.முதுமையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிற நரை, இப்போதெல்லாம் குழந்தைகளையும் பாதிக்கிறது.

கூந்தலின் நிறமி செல்கள், மெலனின் என்கிற நிறமி உற்பத்தியை நிறுத்தும் போது நரை ஏற்படுகிறது. நரைப் பிரச்னையுடன் வருகிற இளவயதுக்காரர்களின் எண்ணிக்கை இன்று மிகவும் அதிகரித்திருக்கிறது. கண்ணாடியில் பார்க்கும்போது வயதுக்குப் பொருத்தமில்லாத ஒரு முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கக்கூடிய நரைமுடியானது ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைக்கிற விஷயமும் கூட.காரணங்கள்...

* பலரும் நம்பிக் கொண்டிருக்கிற மாதிரி வெறும் ஸ்ட்ரெஸ் மட்டுமே இதற்கு அடிப்படை அல்ல. சராசரிக்கும் முன்னதாகவே நரையை ஏற்படுத்துவதில் மரபணுக்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு. இந்தியர்களை உள்ளடக்கிய ஆசிய மக்களுக்கு 30களின் முடிவில் முடி நரைக்கத் தொடங்கும். அதற்கு முன் அவர்களுக்கு நரை தோன்றினால் ஏதோ பிரச்னை என அர்த்தம்.

* ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் நுண்ணறைகள் சரியாக இயங்காததும் முக்கிய காரணம். கூந்தலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் உற்பத்தியை இவை நிறுத்துவதால் நரை தோன்றும். வெள்ளை முடி என்பது மெலனின் இல்லாதது.

* பெரும்பான்மையானோரின் நரைப் பிரச்னைக்கு அவர்களது முறையற்ற, சத்தில்லாத உணவுப்பழக்கமே காரணமாக இருப்பதைப் பார்க்கிறேன். கூந்தலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச் சத்துகள் இல்லாத உணவை உட்கொள்வதே காரணமாக இருக்கிறது. வைட்டமின் பி 12, காப்பர் மற்றும் அயோடின் குறைபாடே முக்கிய காரணம்.

* ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு கூந்தல் நரைத்துப் போகலாம். புகைப்பழக்கமும் நரைப்பிரச்னைக்கு பிரதான காரணமாக இருக்கிறது.

என்ன தீர்வு?

* ஹேர் கலர், ஹேர் ஜெல் போன்று கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பதைக் கூடியவரையில் தவிர்த்து விடவும்.

* ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் மட்டுமே நரைக்குக் காரணமில்லை என்றாலும், அதுவும் ஓரளவுக்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே தலையில் வெள்ளை முடிகள் தோன்றுவதை விரும்பாதவர்கள், டென்ஷனையும் ஸ்ட்ரெஸ்ஸையும்கூட மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம்.

* இரும்புச் சத்து, தாமிரம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அயோடின் அதிகமுள்ள வாழைப்பழம், கேரட், மீன் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டால் நரை தள்ளிப் போகும்.

* மோரில் 2 டீஸ்பூன் ஈஸ்ட்டும், ‘வீட்ஜெர்ம்’ எனப்படுகிற கோதுமை முளை கலந்து குடிப்பது நரைக்கான நல்ல மருந்து.

* முளைகட்டிய பயறு போன்ற புரதம் நிறைந்த உணவுகள் நரையை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை.

* இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து துருவி, சுத்தமான தேனில் ஊற வைக்கவும். தினமும் இதில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வர, நரை நம்மிடம் வர பயப்படும்.

* குடைமிளகாய், லெட்டூஸ், கேரட் மற்றும் அல்ஃபால்ஃபாவின் சாறுகள் தாமிரச் சத்துக் குறைபாட்டை சீர் செய்து, நரை முடிப் பிரச்னைக்கும் நல்ல தீர்வு தரும்.

* தேங்காய் எண்ணெயில் பீர்க்கங்காய் சேர்த்துக் கொதிக்க வைத்து தினமும் கூந்தலுக்கு உபயோகிக்கலாம்.

* வெயிலில் வெளியில் செல்லும் போது,  தலையை மூடிக் கொள்ள வேண்டும். அது கூந்தல் வறள்வதையும் நிறம் மாறுவதையும் தவிர்க்கும்.

* வெள்ளையாக மாறிய கூந்தலை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமில்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் மற்ற முடிகள் வெள்ளையாவதைத் தவிர்க்கவும் தள்ளிப் போடவும் முடியும்.

உணவு மட்டுமே இதற்கான முழுமையான தீர்வு. துத்தநாகம் குறைபாடு இருந்தாலும் கூந்தல் உதிர்வதும் நரைப்பதும் ஏற்படலாம். தாமிரக் குறைபாடு காரணமாக கூந்தலின் மெலனின் உற்பத்தி பாதிக்கப்படலாம். சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் கீரை வகைகளில் தாமிரச் சத்து அதிகமுள்ளது. மாட்டிறைச்சி, முட்டை,  கோதுமை மற்றும் சூரியகாந்தி விதைகளில் இரும்புச் சத்து அதிகம். முந்திரி, பாதாம், நண்டு, சிப்பி போன்றவற்றில் தாமிரச் சத்து நிறைய உண்டு.

 அடர் பச்சை காய்கறிகள், மஞ்சள் நிற பழங்கள், காலிஃப்ளவர், வாழைப்பழம், தக்காளி, பருப்பு வகைகள், கிட்னி, ஈரல், தயிர், ஈஸ்ட், ‘வீட்ஜெர்ம்’ போன்றவையும் நரையைத் தவிர்க்க விரும்புவோருக்கான அவசிய உணவுகள்.வெள்ளையாக மாறிய கூந்தலை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமில்லை. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் மற்ற முடிகள் வெள்ளையாவதைத் தவிர்க்கவும் தள்ளிப் போடவும் முடியும். உணவு மட்டுமே இதற்கான முழுமையான தீர்வு.

2. நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை

அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கிராம்பு ஆயில், கறிவேப்பிலை ஆயில், அஷ்வகந்தா ஆயில், குல்ஹீனா ஆயில் இவை எல்லாம் அரோமா ஆயில்கள். இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 சொட்டு அளவு எடுத்து நீங்கள் உபயோகிக்கப் போகிற பேக்கில் கலந்து தடவினால் இளநரைக்குப் பெரிய அளவில் உதவும்.
* ஹென்னா பவுடரில்

4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி,3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.

* நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.

* கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.

* ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.* ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.30 வயதுகளின் முடிவில் முடி நரைக்கத் தொடங்கும். அதற்கு முன்பே நரை தோன்றினால் ஏதோ பிரச்னை என அர்த்தம்.

(வளரும்!)

வி.லஷ்மி